தொட்டிகளில் வளர்க்கும் குறுமர வகைகளை நாம் போன்சாய் என்கிறோம். போன்சாய் என்பது சப்பானியச் சொல். போன் என்பது சிறு பானையைக் குறிக்கும்; சாய் என்பது செடியைக் குறிக்கும். சீன மொழியில் பென்(ஞ்)சாய் எனப்படுகிறது. சிறு தொட்டிகளில் வளர்க்கும் செடி வகைகளைச் சீனர்கள் 6 ஆம் நூற்றாண்டில் வளர்த்து வந்திருக்கலாம் எனப் படங்கள் மூலம் அறிய வருகிறோம். எனினும் சப்பானில் 11 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னரே போன்சாய் அறிமுகமாகியுள்ளது. 19 ஆம் நூற்றாண்டில் இம்முறை உலகெங்கும் பரவியது. ஆங்கிலத்தில் சிறுவகை மரங்களை (miniature) இவ்வாறு வளர்ப்பதையும் போன்சாய் என்றே குறிப்பிடுகின்றனர். என்ற போதிலும் நாவலந்தீவு என்று அழைக்கப் பெற்ற இன்றைய இந்தியாவில் இமயமலைப் பகுதியில் மருத்துவர்கள் மருந்துச் செடியைச் சிறு பானைகளில் வளர்த்து வந்த முறையே சீனாவிற்குப் பரவியது என்றும் சொல்லுவர்.


நம் நிலப்பகுதி முழுவதும் தமிழ்நாடாக இருந்த பொழுது இம்முறை தோன்றியிருக்கலாம்.

  தாழிமுதல் கலித்த கோழிலைப் பருத்தி

(அகநானூறு 129.7 ) எனத் தாழியில் வளர்ந்துள்ள கொழுவிய இலையையுடைய பருத்தியைப் பற்றிக் குடவாயில் கீரத்தனார் என்னும் புலவர் கூறுகிறார்.

தலைவியைக் காணாமல் தாழியில் வளர்த்த குவளைச் செடியின் மலர் வாடியது குறித்துத்

  தாழிக்குவளை வாடுமலர் 

என அகநானூறு (165.11) கூறுகிறது.

கொடிவகைகளை உயரமான தாழியில் வளர்த்துள்ளனர் என்பது

  ஓங்கும்நிலைத் தாழி மல்கச் சார்த்தி
குடைஅடை நீரின் மடையினள் எடுத்த
பந்தர் வயலை பந்துஎறிந்து ஆடி

எனப் புலவர் கயமனார் கூறுவதில் இருந்து (அகநானூறு 275:1-3) அறியலாம்.


உயர்ந்த தாழியில் நிறைய வைத்துப் பனங்குடையால் நீரை மொண்டு ஊற்றி வளர்த்த வயலைக்கொடி படர்ந்த பந்தலின் கீழே பந்தை எறிந்து ஆடுவது குறித்து இதில் கூறப்பட்டுள்ளது.


நீர்வளம் இல்லாத பாலை நிலைத்தில் இவ்வாறு தாழியில் மண் இட்டு நீர் வார்த்துச் செடியை வளர்த்துள்ளனர்.


தோட்டவியலில் சிறந்திருந்த தமிழர் பானை அல்லது தாழியில் செடி வளர்க்கும் முறையை உலகிற்கு அறிமுகப்படுத்தினர் எனலாம்.