(வெருளி நோய்கள் 1536-1540 : தொடர்ச்சி)

நோயர் வண்டி(ambulance) தொடர்பான வரம்பற்ற பேரச்சம் நோயர் வண்டி வெருளி.
ambulance என்றால், இடம்விட்டு இடம் செல்லுதல், இடம் விட்டு இடம் பெயர்தல், நடத்தல், நடப்பதற்குப் பயன்படுத்துகிற எனப் பொருள்கள். அவசர நேர்வில் நோயாளிகளை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு – அஃதாவது இல்லத்திலிருந்து அல்லது இருக்குமிடத்திலிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதால் நோயர் ஊர்தி எனப்பெற்றது. நாம் நேர் பொருளாகப் பாராமல் பயன்பாட்டு அடிப்படையில் அவசர மருத்துவ ஏந்து(வசதியு)ம் உடைய நோயாளிகளுக்கான ஊர்தியான இதனை நோயர் ஊர்தி என்கிறோம்.
00

நோய்க்கடத்தி உயிரிகள் மீதான அளவுகடந்த பேரச்சம் நோய்க்கடத்தி வெருளி.
நோய் ஆக்குஉயிரிகளும் நோய்க்கடத்திகளாக உள்ளன; நோய் ஆக்கா உயிரிகளும் நோய்க்கடத்திகளாக உள்ளன; தொற்றுநோய்க்கு ஆளான மனிதனும் நோய்க் கடத்தியாக இருக்கின்றான். மகுடை(Corona viruvirus) போன்ற பேரழிவுநோய் உயிரிகள் குறித்துப் பெரும் விழிப்புடன் இருக்க வேண்டி உள்ளது. ஆனால், தொடர்பில்லாதனவற்றையும் நோய்க்கடத்திகளாக எண்ணி அஞ்சக்கூடாது
00

நோய் குறித்த இயல்புமீறிய தேவையற்ற பேரச்சமே நோய் வெருளி.
பிறருக்குத் தொற்றா நோய் வந்திருந்தாலும் நோய் பற்றிய செய்தி படித்தாலும் உடன் உள்ளோர் நோய்க்கு ஆளானாலும் யாருக்காகவேனும் மருத்துவமனை சென்று வந்தாலும் தனக்குத் தீரா நோய் வரும், கடுந்துன்பத்திற்கு ஆளாக வேண்டும், தேவையற்ற மருத்துவச் செலவு வரும், அதனைச் சமாளிக்க முடியாது இடர்ப்பட வேண்டும், வேலைக்குச்செல்ல முடியாது, ஊதியம் கிடைக்காது என்றெல்லாம் தேவையற்ற கற்பனைகளை வளர்த்துக் கொண்டு மிகையான பேரச்சம் கொள்வர் இத்தகையோர்.
நோயருடன் பழகுவது அல்லது நோயிருக்குமிடம் செல்வது போன்றவற்றால் வரும் பேரச்சம் என்பதால் நோய்த் தொடர்பு வெருளி என்றும் சொல்லலாம். எனினும் நோய் வெருளி என்பதிலேயே இஃது அடங்கிவிடுதால் நீட்சி தேவையில்லை. எனவே முந்தைய தொகுப்பில் சேர்த்திருந்த இவ்வெருளியின் பெயரை நீக்கி விட்டேன்.
nosos என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் நோய்.
patho என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் துன்புறுதல்.
Monopatho என்றால் ஐயமற்ற நோய் / நோய் உறுதி எனப் பொருள்.
00

நோய்நுண்மி தொடர்பான இயல்பு கடந்த தேவையற்ற பேரச்சம் நோய்மி வெருளி.
நோய் நுண்மி என்பதைச் சுருக்கமாக நோய்மி எனலாம்.
நோய்நுண்மிகள் நோயை உருவாக்குவன. எனினும் தடுப்பு முறைகள், மருத்துவமுறைகளை அறிந்த பின்னும் மருத்துவம் பார்த்த பின்பும் சில நேர்வுகளில் அதற்கான தேவையில்லாத பொழுதும் இவற்றால் பெருநோய்க்கு ஆளாகித் துன்புறவேண்டி வரும் என்றும் கவனிக்க இயலாமல் போய்விடும் என்றும் உயிருக்குக் கண்டம்(ஆபத்து) நேரும் என்றும் காரணமின்றிக் கவலைப்படுவோர் உள்ளனர். அவர்களே நோய்மி வெருளிக்கு ஆளாகின்றனர்.
00

மற்றொருவரைப்போல் தோற்றமளித்து ஏமாற்றுதால் ஏற்படும் அளவு கடந்த மிகையான பேரச்சம் பகடி வெருளி.
மோசடியாக ஏமாற்றி வஞ்சகம் புரிவோர் தொடர்பானதல்ல இது. விளையாட்டிற்காக என்றும் கேலியாகவும் மற்றொருவராக நடிப்பதை உண்மை என்று நம்புவது.
00