Showing posts with label திருக்குறள். Show all posts
Showing posts with label திருக்குறள். Show all posts

Friday, November 1, 2024

அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 9. 6. அரண் ஏமம்

 


(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 8. 5. இனநல ஏமம்- தொடர்ச்சி

)

  1. அரண் ஏமம்
    ஏமம் தனியொருவருக்கும், குமுகாயத்திற்கும் இரண்டையும் உள்ளடக்கிய நாட்டிற்கும் இன்றியமையாதது. நாட்டிற்கு ஏமமாவன பல. அவற்றுள் “அரண் ஒரு ஏமம். அரண் என்றாலே பாதுகாப்பு- ஏமம் என்று தான் பொருள். இது கடல், கோட்டை, மலை முதலியவற்றிற்கு ஆகுபெயராக அமைந்தது.
    நாட்டைச் சூழ்ந்த கடல், மண்ணில் கட்டிய கோட்டை, இயற்கை மலை, பின்னிச் செறிந்து விளங்கும் இயற்கைக் காடு ஆகியனவெல்லாம் நாட்டிற்குப் பாதுகாப்பாக உள்ளமையால் திருவள்ளுவர் இவற்றை அரண்’ (742) என்றார்.
    இக்காலத்தில் போர்க்கருவிகள் பெரும் அழிவை விரைவில் ஏற்படுத்தக் கூடியன. வானவூர்தி வழித் தாக்குதலும், பீச்சிப்பாயும் பாய்விகளும் (Rockets), அணு குண்டும் பெருகிவரும் நிலையில் மேலே கூறப்பட்ட அரண்கள் வலுவிழந்தன ஆகலாம். ஆனாலும், இவையும் பாதுகாப்பளித்து வருகின்றன. கடல் அரணாக இருப் பதால்தான் போர்க்கப்பல்களும், நீர்மூழ்கிக் கப்பல்களும் உள்ளன. இன்றும் யாழ்ப்பாணத்து நகரின் எல்லையில் ஒரு கோட்டை உள்ளது. இதற்குள் சிங்களப்படையினர் தங்கிப் புலிகளுடன் மோதி வருகின்றனர். இவ்வகையில் இன்றும் கோட்டை ஏமமாக உள்ளது. இயற்கையான இமயமலை இன்னும் இந்திய நாட்டிற்கு ஏமமாக உள்ளது. யாழ்ப்பாணத்துப் புலிகளுக்கு அங்குள்ள அடர்ந்த காடுகளே ஏமமாக உள்ளன. தீமையே செய்யும் சந்தனக் கட்டைக் கடத்தல் மன்னன் வீரப்பனுக்குச் செறிந்த காடுகளே ஏமம்; தீமைக்கு ஏமமாயினும் அவனளவிற்கு அரண் தான்.
    அக்காலத்துக் கோட்டை அரண் தன் உள்ளேயே பெரும் வெட்டவெளியிடத்தைக் கொண்டது; கோட்டையில் சிறு சிறு பதுங்கு அறைகள் ‘ஞாயிறு'[28] என்னும் பெயரில் சிறு காப்பிடம் அமைந்திருக்கும். அதற்குள் பதுங்கியிருந்து தாக்குவர்.
    இக்காலத்திலும் போரின்போது ’பதுங்கு குழிகள்’ அமைக்கப்படுகின்றன. இவற்றில் போர்வீரர்கள் மறைந்திருந்து தாக்குகின்றனர். இவ்வமைப்பை அறிந்த பகைப் படையினர் எந்த இடத்தில் எந்த நேரத்தில் தாக்குதல் வருமோ என்று எதிர்பார்க்கும் கலக்கத்தில் போர் ஊக்கத்தையும் இழப்பர். இதனையும் உள்ளடக்கியே திருவள்ளுவர்,
    சிறுகாப்பிற் பேரிடத்த தாகி, உறுபகை
    ஊக்கம் அழிப்பது அரண்
    ”(744)
    என்றார்.
    அரண் பற்றி மற்றொரு குறள் காட்டும் உண்மை இக்காலத்தில் அண்மையில் பாரசீக வளைகுடாப் போரின் போது வெளிப்பட்டது.
    ஈராக்கு நாட்டு வல்லாட்சியர் சதாம் என்பவர் அண்டைச் சிறுநாடான குவைத்தை ஆட்படுத்திக் கொண்டார். இதனால் போர் மூளும் என்று எதிர்பார்க்க அவர் தம் நாட்டில் நிலத்திற்கடியில் ஒரு கோட்டையை உருவாக்கினார். அஃது ஒரு நகர் போன்றே அனைத்து நலங்களையும், வளங்களையும் கொண்டதாக அமைக்கப்பெற்றது. வல்லமை வாய்ந்த நிலத்தடி அரண்தான் அது. ஆனாலும், சதாம் உலகநல நாடுகளின் தாக்குதலால் பெருந்தோல்வி கண்டார். அவர் அமைத்த நிலத்தடி நகரும் ஏமத்தைத் தரவில்லை. அது மிக மாட்சிமை மிக்கதுதான். ஆயினும், ஏமமாகவில்லை. காரணம், சதாம் செய்த வேண்டாத தீமைகளால் அவர் செய்த செயல்கள்-வினைகள் மாட்சிமை அற்றவையாயின.
    எனை மாட்சித் தாகியக் கண்ணும், வினைமாட்சி
    இல்லார்கண் இல்லது அரண்”

    (750)
    என்ற குறள் கருத்துதான் வென்றது. வினைமாட்சியின்மையால் வல்ல அரணும் “இல்லது அரண்”. ஆயிற்று.
    இவ்வாறெல்லாம் இக்காலப் போர்முறை அறிவியலிலும், மக்களின் வாழ்வியல் அறிவியலிலும் திருவள்ளுவர்தம் கருத்துக்கள் நிழலாடுகின்றன. அறிவியல்களின் தொலை நோக்குப் படமாகத் திருவள்ளுவம் பதியப்பட்டுள்ளது.
    இதுவரை,
    எடுத்து விரித்த விளக்கங்களால் திருவள்ளுவர் வழங்கிய திருக்குறள்.
    ”அறிவியலும் திருவள்ளுவம்” என்பது புலனாக்கப்பட்டது.
    இதற்கு அடிதளமாக,

++
ஃ திருவள்ளுவரை அறிவியற் கவிஞராகக் கண்டோம்
ஃ ”யாம்” என்று நம்முடன் நேருக்கு நேர் பேசித் திருவள்ளுவர் காட்சி தந்தார்.
ஃ அப்பெருமகனாரின் பட்டறிவுப் பேச்சு குடும்பத்தையும், தனிமாத்தப் பண்பாட்டையும், குமுகாயத்தையும் அளவிட்டுக் காட்டியது.
ஃ ”அறிவறிந்த” என்னும் ஒருசொல் அறிவியல் சொல்லாகப் பளிச்சிட்டுக் காட்டப்பெற்றது
ஃ அறிவியலில் ஓர் இயலான வானவியல் ஒரு குறளின் இரு தொடர்களில் பொதிந்துள்ளமை நயப்பில் நம்மை நிறுத்தியது.

இவற்றால் அமைந்த அடித்தளப் பாங்குடன், ”பிணியின்மை என்று துவங்கும் ஒரு குறளை நிலைக் களமாக்கி

ஃ நாட்டிற்கு அழகாகும் ஐந்தின் ஒளிக்குறட்பாக்களை விரிவுரையாக்கி,
ஃ அவற்றுள்
ஃ நோயியல், உணவியல்,
ஃ மருத்துவ இயல், உடலிய உளவியல், பொருளியல், நிலத்தியல்;
ஃ உளவியம், உளப்பகுப்பியல்:
ஃ கல்வியியல், அரசியல், குமுகாயவியல்
ஃ கட்சி அரசியல், போர்முனை இயல், வாழ்வியல்
-எனும் பதினான்குடன் முன் காணப்பட்ட வானவியலுமாகக் கூடிப் பதினைந்து இயல்களின் உள்ளீட்டுக் கருத்துக்கள் முன்னோட்டமாகவும் தொலை நோக்காகவும் அமைந்ததைக் கொண்டு உண்மையாகின்றது.
அறிவியல் திருவள்ளுவம்

  1. ↑ மதுரைத் தமிழாசிரியர் செங்குன்றுார்க்கிழார், இறையனார், ஆசிரியர் நல்லந்துவனார்
    -திருவள்ளுவமாலை.
  2. ↑ மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்
    -மணிமேகலை-22-61
  3. ↑ சுப்பிரமணியபாரதி, சி.
  • பாரதி கட்டுரை கலைகள் .
  1. ↑ திருஞான சம்பந்தர் -தேவா, பிரமபுரம்

  2. நல்லத்துவனார் -பரிபாடல்-6-8
  3. ↑ காரியாசன் : சிருபஞ்சமூலம் – 12
  4. ↑ இளம்பெருவழுதியார் : பரிபாடல்-15-49.
  5. ↑ சொல்லன் அழிசி: குறுந்தொகை – 138 – 3
  6. ↑ பரஞ்சோதி முனிவர்: திருவிளை – இந்திரன் பழிதீர்த்த படலம்- 74- 1.
  7. ↑ அடியார்க்கு நல்லார்: சிலம்பு உரைப்பாயிரம்.
  8. ↑ மாங்குடி மருதனார்: மது. கா. 191.
  9. ↑ பெருங்குன்றுார் கிழார்: பதி: பதிகம்-9-11.
  10. ↑ காரியாசான்: சிறுபஞ்சமூலம்: 91-1.
  11. ↑ 1. சிவவாக்கியர் : சிவ : 203
  12. ↑ கடியலூர் உருத்திரங்கண்ணனார் :
    பெரும்பாணா: 28
  13. ↑ கபிலர் : புறம் : 110-2
  14. ↑ கடுவன் இளவெயினனார் : பரி : 7-18, 19
  15. ↑ தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் : புறம் : 72-5
  16. ↑ இளங்கோவடிகள் : சிலம்பு : வழக்குரை-67,69
  17. ↑ தேரையர் : தேரையர் கரிசல்
  18. ↑ திருநாவுக்கரசர் : தேவாரம்
  19. ↑ கணைக்கால் இரும்பொறை : புறம் : 74-5
  20. ↑ கணிமேதையார் : ஏலா : 57-2
  21. ↑ பெருந்தலைச் சாத்தனார்: புறம்: 205-2
  22. ↑ நாலடியார்: நாலடி: 75-1
  23. ↑ தொல்காப்பியர் : தொல் : பொருள்-247
  24. ↑ கோவூர் கிழார் : புறம் : 68-10
  25. ↑ மாங்குடி மருதனார் : மது. கா : 66

நிறைவு

அறவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன்

Friday, September 27, 2024

அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 5. ஈ. இன்பம்

 




(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 4 இ. விளைவு-தொடர்ச்சி)


மனத்தின் இயக்க விளைவுதான் உணர்ச்சி.
மனத்தான் ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி” (453) என்றார் திருவள்ளுவர். உணர்ச்சி உடம்பில்-மெய்யில் வெளிப்படுவதை (மெய்யில் படுவதை) ‘மெய்ப்பாடு’ என்றனர் தமிழ்ச் சான்றோர்.
உணர்ச்சி வெளிப்பாடாம் ‘மெய்ப்பாடுகள்’ எட்டு.
நகையே அழுகை இளிவரல் (இழிவு) மருட்கை (வியப்பு)
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பால் எட்டாம் மெய்ப்பாடு என்பு
“[26]
என்றார் தொல்காப்பியர். எட்டுள் இறுதியாகச் சொல்லப் பட்ட உவகைதான் ‘இன்பம்’ எனப்படுவது.
எனவே, இன்பம் என்பது உள்ள நிகழ்ச்சி. இவ்வின்பம் உள்ளத்தில் எழுந்து உடலிலும் உணரப்படும்.
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்
“(1330)
என்றதில் ‘கூடி முயங்கப் பெறும் இன்பம்’ உடலால் நேர்வது. ஊடும் காம இன்பம் உள்ளத்தால் நேர்வது. உடலால் நேர்வதும் உணர்வாக உள்ளத்தால்தான் வெளிப்படும்.
எனவே, எவ்வகையிலும் இன்பம் என்னும் உணர்வு உள்ளத்திற்கு உரியது.
உளவியலை ஆராய்ந்து இக்காலத்தில் காணப்பட்ட முடிவும் இவ்வாறே கூறுகிறது. ஆனால் இவ்வின்பத்தை வெளிப்படுத்தும் உள்ளம் என்பது உடலில் எங்கு இருக்கிறது(?), இருக்கும் இடம் எது(?) என்பதை இன்றைய அறிவியலால் இன்றளவும் காணமுடியவில்லை. திருவள்ளுவர் அதனை வெளிப்படுத்தினார்.
உள்ளத்தைக் குறிக்கத் தமிழில் மனம், நெஞ்சம், (அகம்) எனும் சொற்களும் உள்ளன. இவற்றைத் திருவள்ளுவர் ‘வாய்மை’ அதிகாரத்தில் அடுத்தடுத்து வைத்துள்ளார்.
“தன் நெஞ்சு அறிவது பொய்யற்க” (293)
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின்” (294)
“மனத்தொடு வாய்மை மொழியின்” (295)
“அகம் தூய்மை வாய்மையால்’ (293)

நான்கு சொற்களில் ‘அகம் இடத்தைக் குறிக்கும். அவ்விடம் நெஞ்சம் என்று குறிக்கப்பட்டுள்ளது.
உள்ளம் – உள்ளே அமைந்தது.
மனம் (மன் + அம்) – நிலைத்தது (மன்-நிலைப்பு)
அகத்தே (உள்ளே) மனம் – (உள்ளம்) உள்ளது என்று பொதுவாக இடம் குறித்தார். இடம் என்றால் எந்த உறுப்பு என்னும் இடம் ? அதற்கு விடைதான் ‘நெஞ்சம்’ என்பது. நாம் இப்போது வடமொழியில் குறிக்கும் ‘இதயம்’ என்பதே நெஞ்சம். நெஞ்சில் கைவைத்துச் சொல்’ என்கிறோம். எங்கே கை வைப்பது? மார்பின் மையத்தில் கைவைப்போம். இவ்வழக்கிலும் நெஞ்சம் மார்புப் பகுதியில் அமைந்தது’ என்று அறிகிறோம். தனி உருவின்றி உணர்வே உருவாக நெஞ்சக இயக்கத்தோடு பிணைந்திருக்கிறது. இதன்படி “நெஞ்சம்” என்ற சொல்லை வைத்து உணர்ச்சியைத் தரும் உள்ளம் தெஞ்சகத்தில் உள்ளது என்றார். இன்று காணப்படாத ஒர் உண்மை அன்று திருவள்ளுவரால் ஓர் அதிகாரத்தில் நான்கு சொற்களைப் பெய்து காட்டப்பட்டுள்ளது.
உணர்ச்சிகளில் இன்பம் ஒன்று.
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்
” (628)
என்னும் திருக்குறள் இன்பத்தைப் பற்றிய மூன்று கருத்துக்களைக் கொண்டுள்ளது.
“இன்பம் விருப்பத்தைத் தரும்.
இன்பத்தையே எதிர்பார்த்து இல்லாமல் அதனை விரும்பாதிருக்கவும் வேண்டும்.
இன்பத்திலேயே விருப்பம் கொள்ளாதிருந்தால் துன்பம். வராது” இவை உள்ளத்தால் எழும் உணர்ச்சித் தொடர்புடையவை.
இன்பம் பயக்கும் வினை” (669) என்றதில் இன்பத்தை ஒருவன் “செய்யும் செயல் தரும்” என்று. செயல் தொடர்பு உள்ளது.
மேற்காணப்பட்ட நான்கையும் பொருத்தி நோக்கினால் உடன்பாட்டுப் பொருளாக ‘விரும்பிச் செயலாற்றினால் இன்பம் தோன்றும்’ என்பது கிடைக்கிறது.
பொதுவாக இன்பம் என்றால் முடிவில் மாந்தர்க்குத் தோன்றுவது உடலுறவு இன்பமாக உள்ளது. இதனைச் ‘சிற்றின்பம்’ என்றனர் இடைக்காலத்தார். திருவள்ளுவர்க்கு இது கருத்தன்று. கருத்தாயிருப்பின் ‘காமத்துப் பால்’ பாடிக் காதலினைச் சிறப்பித்திருக்கமாட்டார்.
சிற்றின்பம் வெஃகி (அவாவி) அறணல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்
“(173)
என்னும் திருக்குறளில் உள்ள “சிற்றின்பம்” என்பது. ,சிறிதளவான இன்பம்’, ‘சிறு நேர இன்பம்’ எனப் பல்வகை. அவாவாலும், அவாக்கொண்டு செய்யப்படும் செயல்களாலும் உண்டாகும் உணர்வுகளையே குறிக்கும். காம இன்பத்தை மட்டும் குறிக்காது. மற்றும் “இன்பம் இடையறாது ஈண்டும்” (369) என்றார். இது இன்பம் சிறு அளவிலோ சிறுநேரத்திலோ மட்டுமன்று, தொடர்ந்தும் இருப்பது என்பதையும் குறிக்கிறது. மேலும் “பேரறிவு” (215). “பேராண்மை” (148) என்றெல்லாம் பாடியவர் ‘பேரின்பம்’ என்னும் சொல்லமைப்பையும் காட்டவில்லை.
எனவே, இன்பம் என்பது ஒரு நிலையை மட்டும் குறிப்பதன்று.
தாம் இன்புறுவது உலகு இன்புறக்கண்டு” (239) என்றதால்,
காமுறுவர் கற்றறிந்தார்” (399) என்னும் கல்வி யின்பம் குறிக்கப்பட்டது.
ஈத்துவக்கும் இன்பம்” (228) என்றதால் இல்லாதவர்க்குக் கொடுத்து அவர் மகிழ்வதைப் பார்த்து உவப்பது இன்பமாகிறது.
செறுவார்க்கும் சேண் இகவா இன்பம்” (869) என்றதால் எதிரியின் அச்சத்தால் போரிலும் மற்றவனுக்கு இன்பம் தோன்றுவது குறிக்கப்பட்டது.
“ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம்” (156) என்றதால் பிறரை ஒறுப்ப (தண்டிப்ப) தாலும் இன்பம் தோன்றுவது குறிக்கப்பட்டது.
“இன்பம் பயக்கும் மாசறு காட்சியவர்க்கு” (352) என்றதால் அறிவால் இன்பம் தோன்றுவது குறிக்கப் பட்டது.
இவை போன்று ஒன்றாக,
இன்பம் கூடி முயங்கப் பெறின்” (1330) என்று உடலுறவு இன்பம் குறிக்கப்பட்டது.
இவ்வாறெல்லாம் இன்பத்தை விளக்கும் திருவள்ளுவர் இன்பத்துடன் துன்பத்தைத் தொடர்புபடுத்திப் பாடியுள்ளமை இங்கு நோக்கத்தக்கது.
இன்பம் இடையறா தீண்டும், அவாவென்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்
” (369)

      "இன்பம் விழையான்; இடும்பை இயல்பென்பான்;
      துன்பம் உறுதல் இலன்" (628)

      "இன்பத்துள் இன்பம் விழையாதான், துன்பத்துள்
      துன்பம் உறுதல் இலன்” (629)

      "துன்பம் உறவரினும் செய்க, துணிவாற்றி
      இன்பம் பயக்கும் வினை” (669)

      "இன்பக் கடல் மற்றுக் காமம்; அஃதடுங்கால்
      துன்பம் அதனிற் பெரிது’’ (1166) என்றெல்லாம்

துன்பத்துடன் தொடர்புபடுத்தி இன்பத்தை விளக்கினார். துன்பத்திற்குரிய பிற சொற்களாகிய ‘இடும்பை’ (628) ‘இன்னாமை‘ (630) என்பவற்றையும் உடனமைத்துக் காட்டினார்.
இவ்வாறு இன்பத்தோடு துன்பத்தை இணைப்பதும் இன்பம் பல்வகை உணர்வுகளால் எழுவதும் எனும் கருத்துக்களைக் கருத்தில் நிறுத்தி இக்கால அறிவியலுக்கு வருவோம்.
செருமனி நாட்டு உளவியல் வல்லுநர் உண்டி (Wundi) உணர்ச்சிகளை ஆராய்ந்து உண்மை கண்டவர். அவர் கண்ட கீழ்வரும் உண்மை இங்கு காணத்தக்கது.
“இன்பம், துன்பம், ஊக்கம், ஒய்வு, கிளர்ச்சி, அமைதி என ஆறும் உணர்ச்சிக்கு அடிநிலைகள்” – இவ்வாறு உணர்ச்சியின் அடிநிலைகளைக் கண்டவர் இன்பத்தை அடுத்துத் துன்பத்தை வைத்துள்ளமை திருவள்ளுவத்துடன் ஒப்பு நோக்கத்தக்கது.
திருவள்ளுவர் தம் திருக்குறளில் இன்பத்துடன் துன்பத்தை இணைத்துக் குறித்தமை ஐந்து குறட்பாக் களில் கண்டோம். அவற்றுள்ளும் “இன்பத்துள் இன்பம்” என்றும், “துன்பத்துள் துன்பம்” என்றும் துணுக்கமாகக் கூறியமை இரண்டின் அடிநிலைக் கிளைகள் ஆகும்.
வல்லுநர் உண்டி அவர்கள் ஆறு அடிநிலைகளை, மேலும் ஆய்ந்து ஒரு கருத்தை வெளிப்படுத்தினார் :
“அடிநிலையாகக் கூறப்பட்ட ஆறில்
எவையேனும் மூன்று இணைந்தே
காணப்படும்” என்றார். சான்றாக,

  1. இன்ப ஊக்கக் கிளர்ச்சி
  2. துன்ப ஊக்க அமைதி – எனக் காட்டினார். இவை இரண்டை வைத்துத் திருவள்ளுவத்தைக் காணலாம். இரண்டில் முதலில் உள்ள இன்ப ஊக்கக் கிளர்ச்சியில் இன்பத்துடன் ஊக்கம் தோன்றிக் கிளர்ச்சி உணர்வாகிறது.
    திருவள்ளுவத்தில்,
    “துன்பம் உறவரினும் செய்க, துணிவாற்றி
    இன்பம் பயக்கும் வினை” (669)
    என்னும் குறட்பா
    “இன்பம் பயக்கும் வினை செய்க;
    துன்பம் உறவரினும் செய்க;
    துணிவு ஆற்றிச் செய்க–“
    என அறிவிக்கின்றது.
    இக்குறளில் எடுத்துக் கொள்ளப்பட்டது இன்பம். அதனைத் துணிவு ஆற்றி என்றது, நெஞ்சத்துணிவைத் துண்டுவதாகிய ஊக்கத்தைக் குறிக்கும். நெஞ்சத் துணிவால் எழுந்த ஊக்கத்துடன் செய்க என்றது, இன்ப ஊக்கத்தில் கிளர்ச்சியால் நேர்வது. எனவே, வள்ளுவர் குறள், உளவியல் வல்லுநர் அடிநிலை விளக்கத்தைப் பின் வருமாறு குறித்துக் காட்டுவதாகிறது.

வள்ளுவர் : வல்லுநர் :
இன்பம் பயக்கும் : இன்ப
துணிவு ஆற்றி : ஊக்க
செய்க : கிளர்ச்சி


இது போன்றே வல்லுநர் காட்டிய ‘துன்ப ஊக்க அமைதி’யை வள்ளுவக் குறள்
இன்பம் விழையான், இடும்பை இயல்பென்பான்
துன்பம் துடைத்துான்றும் தூண்
” (628)
என்பது காட்டியது. இக்குறளில் துன்பத்தைப் போக்கும் உறுதிப்பாடு கூறப்பட்டது.
துன்பம்,
அஃது ‘இடும்பை இயல்பென்று கொண்டு உள்ளத்தின் ஊக்கத்தால்
துடைக்கப்படுவது;
துடைக்கப்பட்டதைக் கலக்கமில்லாத உறுதித்தூணில் வைப்பது’-என மூன்று கருத்துகள் உள்ளன. இவை “உளவிய அறிவிய”லில் பொருந்துகின்றன.
வள்ளுவர் வல்லுநர்
துன்பம் : துன்ப
(மன ஊக்கத்தால்) துடைத்து : ஊக்க
இடைவளிமண்டிலம் (Microsphere) : ஊக்க
ஊன்றும் தூண் : அமைதி

18ஆம் நூற்றாண்டளவில் ஆய்ந்து காணப்பட்ட இன்ப துன்ப விரிவுகள் திருவள்ளுவத்தில் முறையே ஒவ்வொரு குறளில் அமைந்தவையாகின்றன. திருவள்ளுவம் ஓர் உளவியல் அறிவியலில்தன் பங்களிப்பை வைத்துள்ளமைக்கு இஃதொரு சான்று.
இன்பம் சீர்குலையாமல் அமைய வேண்டும். அதற்கு இடையூறு வராமல் பாதுகாப்பு வேண்டும். அப்பாது காப்பாம் ‘ஏமம்’ இன்றியமையாதது.

(தொடரும்)

Friday, September 20, 2024

அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 4 இ. விளைவு

 




(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 3. ஆ. செல்வம்-தொடர்ச்சி)

‘விளைவு’ என்பதற்குப் ‘பயன்படுவதற்கு உண்டாதல்’ என்று பொருள். விளைவயின் மாண்டற் கரிதாம் பயன்’ {177) என்று திருவள்ளுவர் விளைவைப் பயனாகக் குறித்தார். “விளைவின் கண் வீயா விழுமம் தரும்” (284) என்றதிலும் விளைவு கெடாத பயனைக் குறிக்கும். பயன்பட உண்டாகும் பொருள் கண்ணாற் காணப்படும் பருப் பொருளாகவும் இருக்கலாம்; நுண்பொருளாகவும் இருக்க லாம்; கருத்துப் பொருளாகவும் இருக்கலாம்.

‘வயல் விளைவு நன்றாக இருந்தது’-இதில் விளைவு பருப்பொருளாகிய நெல்லைக் குறிக்கும்.

‘இராமன் விளைவு’ (Raman Effect) இதில் விளைவு அறிவியல் வல்லுநர் சி. வி. இராமன் கண்டறிந்த ஒலிச் சிதறலாகிய நுண்பொருளைக் குறிக்கும்.

‘கல்வி அறிவாக விளையும்’ — இதில் விளைவு கருத்துப் பொருள்.

திருவள்ளுவர் இவற்றையெல்லாம் அடக்கியே “விளையுள்” (545, 731) “விளைவது” (732) எனக் குறித்தார்.

இவ்வாறு விளைச்சல் பலவகைப்படினும் சிறப்பாகப் பருப்பொருள் விளைச்சல் முதன்மையானது. அதனிலும், உழவுப் பயிர் விளைச்சல் மூலமானது. திருவள்ளுவர் இம்மூலமான உழவையே முதற்குறிக்கோளாக வைத்தார்.

“சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்” (1031) என்றமை இன்று உலகில் மாற்றமின்றி உள்ளது. தொழில் பற்றிய இக்கால அறிவியல், உழவைத்தான் முதல் தொழிலாகக் கொண்டுள்ளது.

உழவு தமிழரின் தனி உரிமைத் தொழில். மிகத் தொன்மைய மக்களினத்தாருள் மிகச்சிலரே இத்தொழில் கொண்டோர். ஆரியர் எனப்படுவோர் உழுதொழிலை இழிவாகக் கருதினர்.

                “இழிவான உழுதொழிலைச் செய்யும்
                பார்ப்பானைச் சிரார்த்தம் முதலிய
                சடங்குகளுக்கு அழைக்காதே”

என்று மனுநூல் விதித்தது.

திருவள்ளுவர் உழவு என்றொரு தனி அதிகாரத்தை அமைத்து அதனில் பத்துக் குறட்பாக்களைப் படைத்தார். இப்பத்துக் குறட்பாக்களில் உழவின் இன்றியமையாமை, உழவுமுறை, உழவுப் பயன் ஆகியன தெளிவாக்கப்பட்டுள்ளன.

இக்கால ‘உழவியல்’ விளக்கங்கள் திருவள்ளுவத்தின் அடிப்படை கொண்டவையாக அறிமுகமாகின்றன. இன்றியமையா இரண்டை இங்குக் காணலாம். திருவள்ளுவர் கால உழவு இருவகை. ஒன்று நீர்ப்பாய்ச்சல் உழவு, மற்றொன்று புழுதி உழவு.

இதனை,

        “ஏரினும் நன்றால் எருவிடுதல், கட்டபின்
        நீரினும் கன்றதன் காப்பு” (1038)

என்னும் குறளில், உழவுத் தொழிலின் செயற்பாட்டிை. அமைந்திருக்கும் வரிசை கொண்டு அறியலாம்.

முதலில் வானத்து மழையால் நிலம் நனைந்ததும், ஏரால் உழுதல்.

அடுத்துப் புழுதியில் எரு இடுதல்;

பின் களை எடுத்தல்;

பின் மழைநீரை நிரப்புதல்;

பின் கதிர்ப்பயிரைக் காத்தல்-என்பன புழுதி உழவாகும்.

திருவள்ளுவர் வாழ்ந்த பகுதி புழுதி உழவைக் கொண்டது.

திருவள்ளுவர் வாழ்ந்த இடம் முகவை, மதுரை மாவட்டச் சுற்றுவட்டத்தைக் கொண்டதாகும் என்று கண்ட என் கட்டுரை “வள்ளுவர் வாழ்விடம்” என்பது. இது ‘கிராம ஊழியன்’ (அரசு இதழ்), குறளியம், ‘மலைநாடு” (கோலாம்பூர் இதழ்), முதலியவற்றில் வெளி வந்து பாராட்டைப் பெற்றது. பின் ‘புதையலும் பேழையும்’ என்னும் என் தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளது.

திருவள்ளுவம் ஏரால் உழும் தொழில்பற்றிக் குறிப்பிடு கின்றது. புழுதி உழவில் உழுது மண்கட்டிகளைப் புரட்டி விடுவர். கட்டிகளை உடைத்துத் துாளாக்குவர் அவ்வாறு ‘தூளாக்கப்பட்ட’ புழுதியை நன்கு சூரியனின் வெப்பக் கதிரில் காயவைக்க வேண்டும் என்பன திருவள்ளுவரின் உழவியல். அப்புழுதியைக் காயவைப்பதற்கும் ஒர் எடுத்துக் காட்டகக அளவு கூறினார்.

        “தொடிப் புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
        வேண்டாது சாலப் படும்”(1037)

என்னும் குறள் கூர்ந்து காணத்தக்கது.

‘தொடி’ என்பது ஒர் அளவு. அது அக்காலப்படி ஒரு பலம் நிறைகொண்டது. கஃசு என்னும் அளவு கால் பலம் நிறை கொண்டது.

‘உழும்போது கீழ்மேல் மண்ணாகிய ஒரு பலம் அளவு புழுதியைச் சூரியனது வெய்யில் வெப்பத்தால் நான்கில் ஒரு பங்கு என்னும் அளவாகும் வரை காயப்போட வேண்டும். அவ்வாறு காய்ந்தால் ஒரு பிடி எருவும் போடப்படாமல் மிகுதியாக விளையும் என்பது இக்கருத்து. சொல்லப்பட்ட அளவெல்லாம் ஒரு குறிப்புத்தாமே அன்றி நிறுத்துப் பார்த்துச் செய்யவேண்டிய அளவுகள் அல்ல.

இங்கு ‘உணக்கின்’ என்பதுதான் அறிவியல் உள்ளி டான கருத்துடைய சொல்.

‘உனக்குதல்’ என்றால் சூரியன் வெப்பக்கதிர்கள் புழுதியின் உள்ளுள்ளே புகுந்து வெப்பமூட்டுதலைக் குறிக்கும். இதனால் புழுதி எருப் போடவேண்டாத அளவு எருவின் உரத்தைப்பெறும் என்பதாகும்.

இக்கருத்து இக்கால வேளாண்மை அறிவியலில் வெளிப்பட்டுள்ளது. இதற்கு சூரியனின் கதிர்கள் பற்றிய சிற்றளவு விளக்கத்தை இங்குக் காணவேண்டும்.

சூரியன் ஒரு வெப்ப ஆ.விக்கோள். அதன் கதிர்களால் பிறகோள்களும் நம் மண்ணுலகும் இயக்கி உயிரினங்களை வாழவைக்கின்றன. சூரியனிடமிருந்து வெளிப்படும் கதிர் களில் கண்ணுக்குப் புலனாகின்றமையும் உண்டு; புலனா காதனவும் உள்ளன. அவை :

புறஊதாக் கதிர் (Ultra Violet Ray)

அகச்சிவப்புக்கதிர் (InfraRed Ray)

வேதிய வினைக்கதிர்(Active Ray)

எனப்படுகின்றன.

இக்கதிர்கள் வானச் சூழ்நிலையில் சிறுசிறு மாற்றங் களுடன் நிலத்து மண்ணைத் தாக்குகின்றன; அல்லது தழுவுகின்றன. இக்கதிர்களுடன் கூடிய வெய்யில் வெப்பம் பல நோய் நுண்ணுயிரிகளை மாய்க்கும். மேலும் ஊட்டங்களாக ‘ஏ’, ‘டி’ முதலியவற்றை ஊட்டும்.

உழவில் புழுதி உணக்கப்பட்டால் அப்போது இக்கதிர்களின் தாக்கத்தால் வேண்டாத நுண்ணுயிரிகள் அழியும், இது பயிர் முளைக்குப் பாதுகாப்பு. நீர்ப்பசை நீங்கி சூரியக் கதிர்களின் ஒளியால் பாங்குபெறும். இதனால் ஊட்டங்கள் தழுவுவதால் எரு தரும் உரத்தை மண் புழுதி பெறுகிறது, இதனால் எருவின்றியும் நல்ல விளைச்சல் உண்டாகும்.

மேலும் சூரியனில் களங்கங்கள் எனப்படும் ‘கரும்புள்ளி கள்’ உள்ளன. இவை உண்மையில் கரும்புள்ளிகள்’ அல்ல வென்றும் ஒளி மாற்றத்தின் தோற்றங்கள் என்றும் கண்டுள்ளனர். இக்கரும்புள்ளிகளின் வெப்பக்கூற்றால் மண்ணுலகில் உயிரினம் பயனடைகிறது என்றும் கண்டுள்ளனர்.

இவ்வகையிலும் சூரியனின் வெப்பக் கதிர் மண்ணிற்கு உரம் ஊட்டுவதாகிறது.

18-ஆம் நூற்றாண்டில் காணப்பட்ட இவ்வறிவியல் உண்மை கி.மு. முதல் நூற்றாண்டுத் திருவள்ளுவத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளமை வியந்து போற்றக் குரியது.

எனவே, விளைவு’ என்பதிலும் திருவள்ளுவம் இக்கால “கிலத்துஅறிவியல்” பாங்கை முன்னோடி அடையாளமாகக் காட்டுகிறது.

‘விளைவு’ என்பதால் நேரும் பயன்பாடுகள் தாம் மாந் தர்க்கும் உயிரினங்கட்கும் இன்பத்தை வழங்குகின்றன. இத்தொடர்பில் இன்பம் அடுத்துக் காணப்படவேண்டியது.

(தொடரும்)

Friday, August 23, 2024

அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 2. அ.2. பிணியின்மை – தொடர்ச்சி



(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 2. அ.1. பிணியின்மை – தொடர்ச்சி)

இம்மூன்றுதாம் உடலில் சமநிலையில் இருந்து உடலை இயங்க வைக்கின்றன. பருவத்தாலும், உணவாலும் உடலில் இம்மூன்றும் தனித்தனியே கூடியும் குறைந்தும் நோயைத் தருகின்றன. இம்மூன்றையும் வைத்தே தமிழ் மருத்துவ முறைகள் பிறந்தன; விரிந்தன. இவை மூன்றிலும் முதலிலுள்ள ‘வளி’ வல்லமை வாய்ந்தது. மற்றைய இரண்டும் அடுத்தடுத்த வல்லமை உடையவை. இதனை உருவகமாக வளியை அரசனாகவும், பித்தத்தை அமைச்சனாகவும், கோழையைப் படை மறவனாகவும் மருத்துவ நூலார் சொல்லினர்.

தேரையர் என்னும் மருத்துவத் தமிழறிஞர்,

அரசன் வாதமொடு அமைச்சன் பொருநன்” என்றும்

“தான் (வளி), மனை (பித்தம்), சேய் (கோழை) மன்னன், அமைச்சன், மீளி”[20] என்றும் பாடினார். தேவாரம் பாடிய அப்பரும்,

“ஆனது இக்காளை (கோழை) அமைச்சை (பித்தத்தை) மேவிடின் ஆன் இறை (வளி) உறின்” [21] என்று உருவகித்துப் பாடினார்.

இத்துணை ஆழ்ந்த கருத்துகளைக் கொண்டவை வளி முதலிய மூன்றும், இவற்றைக் கொண்டு நோயையும் கண்டறியலாம். மருந்தையும் கொடுத்தறியலாம் . இம்முறை இக்கால மருத்துவ அறிவியலில் இல்லை என்பது கருதத்தக்கது.

இம்முறை கொண்ட தமிழ் மருத்துவம் ஒரு தனித் தன்மை உடையது. திருவள்ளுவரின் இக்குறள் இத்தனித் தன்மையை எடுத்து மொழிகிறது. மொழிவதன் மூலம் அக்கால நோய் அறிவியலை அறிமுகம் செய்கிறது.

இது நோய் தோன்றுவதன் கருநிலை கூறுவது.

வரும்முன் காத்தல்-உணவியல்

நோய் வரும்; அதனை நீக்க மருந்தும் வேண்டும். நோய் வந்தால்தானே மருந்து வேண்டும்? நோய் வரும்முன் காத்துக் கொண்டால் மருந்து எதற்கு?

மருந்து என வேண்டாவாம்” என்று தொடங்கினார் திருவள்ளுவர். தொடங்கி மருந்து வேண்டாமைக்குக் காரணமும் கூறினார்.

அருந்தியது

அற்றது போற்றி உணின்” (942)

மருந்து வேண்டா என்றார். இவ்வாறு உண்டால் நோயும் வராது; மருந்தும்-மருந்துகளும் வேண்டியன அல்ல. இது வரும் முன் காக்கும் முதல் கவனம்.

திருவள்ளுவர் தம் நூலில் ஒவ்வொரு சொல்லையும் அதன் உள்ளார்ந்த பொருள், அதனை அமைக்கும் இடத்தின் பொருத்தம் அறிந்தே எழுதுபவர். இக்குறளிலும் இவ்வமைப்பைக் காண்கின்றோம்.

‘மருந்து என வேண்டா’ என்றதில் ‘என’ என்றதும் வேண்டா என்றதும் பன்மை வினைகள். இவற்றால் முன்னுள்ள மருந்து என்றதற்கு மருந்துகள் என்று பொருள்.

தமிழ் மருத்துவத்தில் ஒரு நோய்க்கு ஒரு மருந்து. சில நோய்களுக்கும் ஒரே மருந்து என்பது மரபு. இதன்படி இங்கு மருந்து என்றது ஒரு நோய்க்குச் சில மருந்துச் சரக்குகள் கலந்தமை பொருள். இவ்வகையில் பன்மையாகிறது. ஆனால், இக்காலத்தில் ஒரு நோய்க்கு ஒரு மருந்து என்றில்லை. ஒரே நோய்க்குப் பலவகை மாத்திரைகள்: இவற்றுடன் நீரிய மருந்துகள், ஊசி மருந்து கொடுக்கப்படும் நிலையை நோக்கும்போது திருவள்ளுவர் மருந்துகள் என்று எதிர்காலத்தை நோக்கிப் பதிந்துள்ளார் என்று எண்ணத் தோன்றுகின்றது. நோயும், பல மருந்துப் பொருள்களும் பல என்றவர், மருந்து வேண்டா என்றதற்குக் காரணம் பல சொல்லவில்லை. ஒன்றுதான் சொன்னார்.

‘அருந்தியது அற்றது’ என்று இரண்டையும் தனித் தனியே ஒருமையில் சொன்னமை அவர்தம் ஆழ்ந்த கருத்தை அறிவிக்கிறது.

அற்றது’ என்பது வயிறு ஒரு உணவுப் பொருளும் அற்ற வெற்று அறையாக உள்ளதைக் குறிக்கும். எனவே, வரும் முன் காக்கும் முறை அறிமுகமாகிறது. இதில் “போற்றி உணின்’, என்பதில் ‘போற்றி’ என்றால் ‘பாதுகாத்து’ என்று பொருள். வெற்று வயிற்றினைப் போற்ற மறு உணவு இடவேண்டும். அந்த உணவு பாதுகாப்புக்குரிய உணவாக வேண்டும். எனவே இங்கு. சொன்ன போற்றி உணல் அடுத்தடுத்த குறட்பாக்களில் விளக்கம் பெறுகிறது.

‘அற்றது:போற்றி’யைத் தொடர்ந்து ‘அற்றல் அறிந்து’ உண்டால் உடம்பு நோயின்றி விளங்கும்.

அதனைக் கடைப்பிடித்து,

மாறு அல்ல துய்க்க;

துவரப்பசித்துத் துய்க்க“(494)

என்றார். இதில் மாறு அல்ல என்றது போற்றுதலின் விளக்கம்.

இதனையே தொடர்ந்து

“மாறுபாடு இல்லாத உண்டி” என்றார். இவ்வுணவை அறிந்து மற்றவற்றை,

        “மறுத்து உண்ணின்

        ஊறுபாடு இல்லைஉயிர்க்கு”  (945)

என்றார்.

“அற்றது போற்றுதல்”. “அற்றது அறிதல்”, “மாறு அல்ல துய்த்தல்”, “பசித்துக் துய்த்தல்”, “மாறுபாடு இல்லாமை”, “மறுத்து உண்ணல்”-இவற்றால் நோய் வராமை மட்டும் அன்று; “மருந்து வேண்டா” என்பது மட்டும் அன்று. இவற்றால் உடல் காக்கப்படும் என்பது மட்டும் அன்று.

ஊறுபாடு இல்லை உயிர்க்கு”-உயிருக்கே இக்கால வடமொழிச் சொல்லின்படி ஆபத்து-ஊறுபாடு இல்லை.

இடையில் மருந்தின் தொடர்பில் இக்கால அறிவியலைக் காணவேண்டும். அறிவியலில் ஒரு துறை ‘உடலியல்’ இதனுடன் இணைந்த துறை ‘உணவியல்’. இவை இரண்டும் மருந்தியலின் தொடர்புடையவை. உணவியல் 19-ஆம் நூற்றாண்டில் ஒரு தனிக் கலையாகியுள்ளது, உணவில் ‘சீருணவு’ (Balanced Diet) இன்றியமையாதது. ‘காப்புணவு’ (Productive food) நோயின்றி உடலைக் காப்பது . ‘ஒழுங்கான உணவு’ (Normal Diet). உடலியக்கத்தைச் சீராக வைத்திருப்பது. இக்கால அறிவியலில் இவை மூன்றும் விரிவாகியுள்ளன. சுருக்கமாக இவற்றைத் திருவள்ளுவரின் உணவுக் கருத்துகளாகக் கூறியுள்ளவற்றில் அடக்கலாம்.

(அற்றது அறிந்து)                   

’போற்றி உண்ணும் உணவு’  –       சீருணவு

’மாறுபாடில்லா உணவு’        –       காப்புணவு

‘அளவறிந்து உண்ணல்’         –       ஒழுங்குணவு

இவ்வாறு இக்கால உணவு அறிவியலை, திருவள்ளுவம் விளக்குவதைக் காண்கிறோம்.

வயிற்றுத் தீ

அருந்தியது அற்றுப்போவதை-அஃதாவது செரித்து ஊட்டமாவதை இக்கால அறிவியல் மிக விளக்கமாக ஆய்ந்துள்ளது. செரிமானம் உடம்பின் வெப்ப நிலையால் அதிலும் வயிற்று வெப்ப நிலையால் முழுமையடைகிறது.

உயிரிகளின் உடம்பின் வெப்பமும் அவை வேலை செய்வதற்கு வேண்டப்படும் வெப்பமும், செரிமான உணவு உயிர்வளி (Oxygen)யுடன் ‘உயிரணுக்’ (Cells)களில் வினைப்படும் போது வெளியாகின்றன.”

இது செரிமானத்திற்கு வெப்பம் செயற்படுவதை விளங்குகின்றது.

மேலும் விளக்கமாக,

கரிநீரகி (Carbohydrate), ஊட்டப்பொருள் (Protein). கொழுப்பு ஆகிய மூன்றும் எரிக்கப்பட்டு உடல் ஆற்றலைத் தருகின்றன.’

மேலும் விளக்கமாக,

‘இவை மூன்றும் வயிற்றுத்தீயால் எரிக்கப்பட்டு முறையே கிராமுக்கு 4,4,9 உடல்வெப்ப அளவுகளை-கலோரிகளைத் (Calories) தருகின்றன’

என்னும் உணவின் செரிமான விளக்கம் இக்கால உணவு அறிவியலில் காணப்படுபவை.

இதில் செரிமானத்திற்குச் செய்யப்படும் வயிற்று வெப்பம் தருதல் வயிற்றுத் தீ’ எனப்பட்டது. புறநானூற்றில் சேரமான் கணைக்கால் இரும்பொறை “வயிற்றுத் தீத்தணிய“[22] என்று பாடினார்.

வயிற்றுத் தீயார்க்கு உணவு வழங்கினார்”[23] என்று ஏலாதியில் கணிமேதையார் குறித்தார்.

திருவள்ளுவர்,

        “தீ அளவின்றித் தெரியான் பெரிதுண்ணின்

        நோய் அளவின்றிப் படும்” (946)

என்றார். வயிற்றுத் தீயின் அளவு தெரிந்து அஃதாவது வயிற்றுத் தீயை அளவாக வைக்கும் அளவான உணவே உண்ணவேண்டும் என்பதை அறிந்து அளவான உணவை (சீருணவை) உண்ண வேண்டும். அதிகமாக உண்டால் நோய் அளவில்லாமல் உண்டாகும்-என்று செரிமானக் காரணமும் கூறினார். இஃது முன்னர் “அற்றால் அளவறிந்து உண்க’ என்றதற்கும் கழிபேரிரையான்கண் நோய்’ என்றதற்கும் காரண விளக்கமாகும்.

முன்னே கண்ட இக்கால உணவு அறிவியலின் கண்டு பிடிப்புகளான கருத்தேற்றங்களின் உள்ளீடாகத் தீ அளவின்றி” என்றும் குறள் திகழ்கிறது. “உணவே மருந்து’ என்பது தமிழ் வழக்கு.

இக்கால மருத்துவர்கள் நீரிழிவு முதலிய நோய்களுக்கு உணவுக் கட்டுப்பாட்டையே வலியுறுத்துவதையும் கருதிப் பார்க்கவேண்டும்.

எவ்வகையிலும் உணவுபற்றித் திருவள்ளுவர் அறிவித்துள்ளவை இக்கால உணவு அறிவியலின் முன்னோடிகள் என்று பதியத்தக்கவை.

(தொடரும்)