Friday, July 19, 2024

அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன்,ஆ.திருவள்ளுவரின் பட்டறிவுப் பேச்சு

 




(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், திருவள்ளுவர் அறிவியற்கவிஞரா?-தொடரும்)

பட்டறிவு என்றால் என்ன பொருள்? ஒருவர் தம் வாழ்வில் கண்டும் கேட்டும், துய்த்தும் அவற்றில் ஆட்பட்டுக் கொண்ட அறிவையே (படு அறிவு) பட்டறிவு என்கிறோம். ‘பாடு பட்டுப் பெற்றேன்’ என்பதிலும் ‘பட்டபாடு பெரிது’ என்பதிலும் உள்ள சொற்களில் இப்பொருளைக் காண்கிறோம்.

“பட்டமும் கயிறுபோல் பறக்ககின்ற சீவனைப்
பட்டறிவினாலே பார்த்துநீ படுமுடிச்சு போடடா”
[1]

என்று சிவவாக்கியர் பாட்டில் இச்சொல்லை அதன்பொருட் குறிப்புடன் காண்கிறோம்.

பட்டறிவைப் புரிந்துகொள்ளப் பின்வரும் இரண்டு தொடர்கள் உதவும் :

1. ‘சீரகம் உடலுக்கு நலம் தரும்; நோயைத்
தடுக்கும்; போக்கும்.”

2. நான் அறிந்தவரை சீரகத்தைப் போன்று உடலுக்கு நலந்தந்து, நோயைத் தடுத்துப் போக்குவது வேறு ஒன்றும் இல்லை.

இரண்டு தொடர்களும் சீரகத்தின் நன்மையைக் காட்டு கின்றன. கருத்து ஒன்றுதான்; தொடர்கள் வேறுவேறு உத்திகளில் உள்ளன. முன்னதைவிடப் பின்தொடரில் கருத்தின் அழுத்தம் உள்ளது; உறுதி தெரிகிறது. காரணம், சொல்லுபவர் நான் அறிந்தவரை’ என்று தாம் பட்டு அறிந்ததைத் தெரிவிக்கிறார்.


யாம்

திருவள்ளுவப் பெருந்தகை வாழ்வியற் கருத்துக்களை 1330 குறட்பாக்களிலும் வழங்கியுள்ளார். அவர் சொல்லும் முறை சீரகம் பற்றி முதலில் கண்ட பொது முறையிலும் உள்ளது. இரண்டாவதாகக் கண்ட பட்டறிவு முறையிலும் பலப்பல குறட்பாக்கள் உள்ளன. பட்டறிவு பளிச்சென்று புலப்படுமாறு தன்னைச் சொல்லிக்கருத்தை வைத்துள்ளார். இவ்வகைக் குறட்பாக்கள் திருக்குறளில் மூன்றே மூன்று உள்ளன. அவை மூன்றிலும் தம்மைச் சொல்லிப்போம். “யாம்’ என்னும் சொல் உள்ளது. அவர் ஒரு தனித்தவராகத் தன்மை இடத்தில்தான் எழுதினார். ஆனால் தன் ஒருவனுக்குரிய நான்’ என்னும் சொல்லையோ, யான் என்னும் சொல்லையோ சொல்லவில்லை. இவை இரண்டும் ‘தான்’ என்னும் செருக்கைக் காட்டும் சொற்கள். திருவள்ளுவரும் யான் எனது என்னும் செருக்கு’ (346) என்று செருக்குக்கு உரியதாகப் பாடினார். எனவே, இவற்றை விடுத்து ‘யாம்’ என்னும் சொல்லால் பேசினார்.

‘யாம்’ என்னும் சொல் தன்மையில் பலரைக் குறிக்கும் பன்மைச்சொல். ஒருமைக்காகத் திருவள்ளுவர் பேசினார்.

தம் அறிவுப் பெருமிதத்தையோ, அருள் பெருமிதத்தையோ பேசுபவர் யாம்’ என்றே பேசுவர்.

“யாம் அவண் நின்றும் வருதும்”[2]

“இஃது யாம் இரந்த பரிசிலல்”
[3]

“யாம் இரப்பவை பொன்னும் பொருளும்
போகமும் அல்ல”
[4]

“படையமை மறவரும் உடையம் யாம்”
[5]

இவை போன்றவை பெருமிதம் காட்டுபவை. இப்பெருமிதப் பொருளைவிட,

கண்ணகி

“என் காற்சிலம்பு” என்று கூற

மன்னன் பாண்டியன்,

“யாம் உடைச்சிலம்பு”[6] என்றான். இந்த “யாம்” அரசுப் பேருமிதம். இக்காலத்து இதனை ஆங்கிலத்தில் (Royal We) என்பர்.

 திருவள்ளுவர்யாம்

இவற்றிற்கெல்லாம் அப்பால் தம் பட்டறிவின் உறுதிப் பாட்டையும், சொல்லும் கருத்தின் அழுத்தத்தையும் பொதியவைத்து ‘யாம்’ என்று பேசுவது திருவள்ளுவர் பேச்சு.

பெறுமவற்றுள் யாம்அறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பே நல்ல பிற (61)


யாம் மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற (300)

மக்களே போல்வர் கயவர்அவரன்ன
ஒப்பாரி யாம்கண்ட தில் (1071)

யாம் பட்டு அறிந்தவரை,

மக்கட்பேறு எல்லாப் பேற்றினும் சிறந்தது வாய்மையே பண்புகளில் சிறந்தது
கீழ்மக்கள் உருவத்தில் மாந்தராயினும்
இழிவில் ஒப்பில்லாதவர்

நேருக்குநேர் திருவள்ளுவர்

இவை இக்குறட்பாக்களின் கருத்துகள். இக்கருத்துகள் ‘யாம்’ என்று திருவள்ளுவர் தம்மைக் குறித்துச் சொல்லப்பட்டவை. இதனால் அவர் நம்முன் நேருக்கு நேர் நின்றுபேசுவதாக அமைந்துள்ளன.

யாம் அறிந்தவற்றுள்”,

யாம் மெய்யாக் கண்டவற்றுள்”,

“யாம் கண்டது” என்று அவரே பேசுவதால் அவர் பட்டு அறிந்ததை எழுதியுள்ளார் என்று கொள்ள வேண்டும். எனவே, இவை திருவள்ளுவரின் பட்டறிவுக் கருத்துகள்.

(‘யாம்’ என்னும் சொல் திருவள்ளுவரால் இம்மூன்றிடங்களில் மட்டுமன்றி மேலும் 10 இடங்களில் அமைந்துள்ளது. பொதுவாக 2 இடங்கள், (790, 844), தலைவன் பேச்சாக 3 (1111, 1123, 1329), தலைவி பேச்சாக 7 (1140, 1150, 1171, 1204, 1245, 1218, 1312) ஆக !3. இடங்களில் காண்கிறோம். இவை பிறர் பேசுவனவாகப் படர்க்கையில் அமைக்கப்பட்டவை).


தனித் தன்மையுள்ள குறட்பாக்கள்

முன்னர்க் காணப்பட்ட மூன்று குறட்பாக்களில் தான் திருவள்ளுவர் தம்மை முன்னிறுத்திப் பட்டறிவுடன் பேசினார். தம் பளிச்சிடும் பட்டறிவுடன் பேசும் இம்மூன்று குறட்பாக்களிலும் அமைந்த பிறசொற்களும், ஒத்துள்ளமை நோக்கத்தக்கது.

சொல்லொற்றுமை

மக்கட்பேறு                 வாய்மை              கயமை

பெறும் அவற்றுள்      கண்ட அவற்றுள்    அவரன்ன

யாம்                      யாம்                           யாம்

அறிவது                     கண்ட                    கண்டது

இல்லை                  இல்லை            இல்

அறிவறிந்த             எனைத்தொன்றும்      ஒப்பார்

அல்லபிற                அல்ல பிற (நல்ல பிற)  அன்ன

திருக்குறளில் பொதுவாகத் தனித்தனித் குறட்பாக்களில் அமைந்த சொற்களைக் கணக்கிட்டால் 8 முதல் 11 வரை அமைந்திருக்கக் காணலாம். இம்மூன்று குறட்பாக்களில் சொல்லாலும், கருத்தாலும், தொடர்பாலும் 7 சொற்கள் ஒத்துள்ளன.

‘யாம் என்று தம்மைக் குறிக்கும் சொல்லுடன் கருத் தொற்றுமையும், சொல்லொற்றுமையும் கொண்டு உள்ளதை நோக்கினால் திருவள்ளுவர் இம்மூன்றிலும் ஒருமித்த மனம் பற்றியுள்ளார் என்பதை அறியலாம்.

திருவள்ளுவர் தம்மை நம்முன் நிறுத்திப் பேசுவதாலும், அவை பட்டறிவின் வெளிப்பாடாக உள்ளமையாலும், குறளில் அமைந்த சொற்களின் ஒற்றுமையாலும் இம்மூன்று குறட்பாக்களும் முப்பாலாம் திருக்குறளில் தனித்தன்மை கொண்டவையாகின்றன. இவ்வாறு தனித் தன்மையில் திருவள்ளுவர் மனம் உவந்து பேசும் கருத்துக்கள் எவை? அவை உலகியலில் எப்பங்குக்கு உரியவை?

1.மக்கட்பேறுகுடும்ப வாழ்வியல்
2.வாய்மைஒழுக்க வாழ்வியல்
3.கயமைமக்கட் கூட்டமாம் குமுகாய வாழ்வியல்

உலகியல் வாழ்க்கை இம்மூன்றுள்ளும் அடங்கும் என்பதை விரித்துக் காண வேண்டியதில்லை.

(தொடரும்)

+++++

  1. சிவவாக்கியர் : சிவ : 203
  2. கடியலூர் உருத்திரங்கண்ணனார் : பெரும்பாணாற்றுப்படை: 28
  3. கபிலர் : புறநானூறு : 110-2
  4. கடுவன் இளவெயினனார் : பரிபாடல் : 7-18, 19
  5. தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் : புறநானூறு : 72-5
  6. இளங்கோவடிகள் : சிலப்பதிகாரம், வழக்குரை காதை-67

Friday, July 12, 2024

அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், திருவள்ளுவர் அறிவியற்கவிஞரா?

 




(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 1. அ. அறிவியற் கவிஞர் திருவள்ளுவர்- தொடர்ச்சி)

‘அறிவியல் கவிஞரே’(?) என்னும் வினாவிற்கு விடை காணப் புகுமுன் ஒரு குறிப்பை எழுத வேண்டும். அக் குறிப்பு ஒரு நூலாசிரியன் தவறாது கொள்ள வேண்டிய நெறி பற்றியதாகும். அந்நெறி மொழி நெறி.

இந்நூலின் தொடக்கம் முதல் இதுவரையும் சான்றுகளின் அழுத்தமாகச் சொல் அமைப்புகள் காட்டப் பட்டுள்ளன. இனியும் அவ்வாறு மேற்கொள்ளப்படும்.

தமிழ்ச் சொல் கட்டுக்கோப்பான அமைப்புடையது. சொல்லின் மூலம் ஆணிவேர் போன்றது. அந்த ஆணி வேரில் முளைத்துக் கிளைக்கும் பொருள் மக்களின் வாழ்வு, மரபு, வரலாறு, நாட்டுநிலை முதலியவற்றிற்கு உதவக் கூடியது. புதிர்களாக வரும் கருத்துப் பூட்டகங்களைத் திறக்கும் திறவுகோல்கள் பண்டைத் தமிழ்ச் சொற்கள்.

நூலாசிரியனோ, பாடம் சொல்லும் ஆசிரியனோ தவறாது கொள்ள வேண்டிய நெறியாக, மேலைநாட்டு அறிஞர் சான் கிரகாம் (John Graham) என்பார் ஓர் ஆழ்ந்த நெறியை அறிவித்தார்.

“நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் உள்ளார்ந்த வாழ்க்கை உண்டு. அது அவர்தம் பொருள் பொதிந்த மொழியில் பொறிக்கப்பட்டுள்ளது. அது வருங்கால மக்களின் அறிவிற்காகப் போற்றப்படுகிறது.

நாட்டு வரலாறு, பழக்க வழக்கம், ஒழுக்க நெறி ஆகியவற்றை மிகப் பழமையான இக் காலத்தில் வழக்கில் இல்லாத சொற்கள் கொண்டுள்ளன. அச் சொற்களினின்று வெளிப்படுத்தாத ஆசிரியன் மிகவும் தவறியவனாவான்” என்னும் விளக்கம் உரிய வழிகாட்டியாகத் தக்கது.

இவ்வறிஞரின் இக்கருத்து ‘ஆங்கிலச் சொல் நூல்’ (English Word Book) என்னும் ஆங்கில நூலில் உள்ளது. இவர் குறிப்பிடும் மொழிச் சொல் ஆங்கிலத்தையும் குறிப்பிடலாம். பொதுவாக எந்த மொழியையும் குறிப்பிடலாம். சில நூற்றாண்டுகள் வரலாற்றையே கொண்ட ஆங்கிலச் சொல்லுக்கும் இது பொருந்தும் என்றால், பல்லாயிரம் ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட தொன்மை நுண்மொழியாம் தமிழின் சொற்கள் எத்துணை ஆழமும், வரலாற்று அழுத்தமும் கொண்டனவாகும்?

சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் மாணிக்கச் சுருக்கமாக,

“எழுத்தின் திறன்;
இச்சொற் பொருளின் அழுத்தம்”
[1]

என்றார். தமிழின் இன்சொல்லும் அதன் பொருள் அழுத்தமும் எத்துணையோ வரலாற்றுப் புதிர்களையும் வாழ்வியல் பூட்டகங்களையும் வெளிப்படுத்துவனவாகும். இதனை அடியொற்றிய இச்சிறு நூலில் எடுத்துக்கொண்ட கருத்திற்கு ஏற்பத் தமிழ் சொற்கள் மூல அமைப்புடனும், பொருளுடனும் உரிய இடங்களில் சான்றுகளாகக் காட்டப்படுகின்றன.

இனி அறிவியற் கவிஞரைக் காண்போம்:

‘அறிவு, இயல்’ என்னும் இரு சொற்களில் இயல்: என்பதற்கு முதற்பொருள்கள் இலக்கியம், இலக்கணம் என்பன. முத்தமிழில் ஒன்றாகிய ‘இயல் தமிழ்’ என்பது இலக்கியத்தையும் இலக்கணத்தையும் குறிப்பது. தொல்காப்பியம் மூன்று அதிகாரங்களில் 27 உட்பிரிவுகளைக் கொண்டது. இவற்றுள் 22 உட்பிரிவுகள் பிறப்பு இயல், மரபு இயல் என இயல்’ என்று அமைந்தவை. இங் கெல்லாம் ‘இயல்’ என்பது இலக்கணத்தைக் குறிக்கும்; இத்துடன் துறை என்னும் உட்பிரிவையும் குறிக்கும். திருக்குறளிலும் மூன்று பாடல்களில் 13 இயல்கள் உள்ளன. இவையும் இலக்கணம் என்றும், உட்பிரிவாம் துறை: என்றும் பொருள்படும்.

நீர்நிலையாம் குளத்திற்குள் இறங்குவதற்குப் பல துறைகள் இருக்கும். இது போன்று ஒரு தொகுப்புக் கருத்திற்கும் பல உட்பிரிவுகள் அமையும். இவ்வுட் பிரிவே துறை எனப்படும்.

‘அறிவியல்’ என்பது ஒரு துறை. வாழ்வியல் இயக்கத்திற்குத் துணை நிற்பது அறிவியல். இக்காலத்தில் உவகை அளாவி, வானத்தை அளாவி வளர்ந்துள்ளது. அனைத்திலும் மேம்பட்டு நிமிர்ந்து நிற்கிறது.

தமிழில் ‘அரசியல்’[2] ‘அமைச்சியல்’[3] எனும் சொல்லமைப்புக்கள் சங்க இலக்கியங்களில் உள்ளன. இவற்றிற்கு அரசின் இலக்கணம்’, ‘அமைச்சின் இலக் கணம்’ எனப் பொருள். திருவள்ளுவர் ‘கண்ணோட்டத் துள்ளது உலகியல்’ (572) என்னும் குறளில் உலகியல்’ என்னும் சொல்லைப் படைத்துள்ளார். இதற்கு உலக நடைமுறை என்று பொருள். ‘வானியல் ஊனியல்’ என்னும் சொற்களை இடைக்காட்டுச் சித்தர் பாடவில் காண்கின்றோம். இவ்வாறு பல உள்ளன.

“அறிவியல்” என்னும் சொல் பழந்தமிழ் நூல்களில் இல்லை; இந்த நூற்றாண்டில் உருவான சொல் அறிவியல்’ ஆங்கிலத்தின் ‘Science என்பதற்கு ஆக்கப்பெற்ற சொல். ‘விஞ்ஞானம்’ என்பது வடசொல்.

தமிழில் ‘அறிவியல்’ என்னும் சொல் முற்கால நூல்களில் இல்லாமையால் அறிவியற் கருத்துக்கள் தமிழில் இல்லை’ என்று ஆகாது. தொல்காப்பியத்திலும் சங்க நூல்களிலும் பல அறிவியற் கருத்துக்களைக் காண முடிகின்றது. திருவள்ளுவத்தில் அறிவியற் கருத்துக்கள் செறிந்துள்ளன.

தமிழில் ‘அளவை’ என்பது ஒரு துறை. இஃது

‘அளவையியல்’ எனத் தக்கது. தமிழில் ‘அளவை நூல்’ என்றொரு நூல் இருந்து மறைந்தது, பதிப்பரசர் உ. வே. சா. அவர்களும் இதனைக் குறித்தார்கள்.

‘அளவை நூல்’ என்பதற்கு ‘அறிவை அளக்கும் நூல்’ என்று பொருள். அறிவால் அறிவை அளப்பதாகும். அறிவால் நூற்கருத்துகளை அளந்தோர் தம் கருத்தை நிலைநாட்டக் கருத்துப் போரிட்டனர், அஃதாவது பட்டி மண்டபத்தில் சொற்போரிட்டனர். இப்போரில் தம்தம் பெருமையையும் பேச நேரும்; தம்மை வியந்து தருக்கியும் பேசினர். இவ்வாறு தருக்கொடு பேசுவது ‘தருக்கம்’ எனப்பட்டது. சிறுபஞ்ச மூலம் என்னும் நூலிலும்[4] இச் சொல்லைக் காண்கின்றோம், இவ்வாறு அளவை நூல், “தருக்க நூல்” என்றும் வழங்கப்பெற்றது. இந்த அளவையை ஆங்கிலத்தார் Logic என்றனர். வடநூலார் “வாத சாத்திரம்” என்றனர்.

அறிவை அளக்கும் ‘அளவையியல்’ சில படிகளைக் கொண்டது. தமிழறிஞர் காண்டல் அளவை; கருதல் அளவை என இரண்டு படிகளாகக் கண்டனர். வடநூலார் பத்து (வேதவியாசர்) என்றும், எட்டு (கிருதகோடி) என்றும், ஆறு (சைமினி) என்றும் பல வகையாகக் கொண் டனர். கெளதம புத்தர் காண்டல், கருதல்’ என்னும் இரண்டையே ஏற்றார். மணிமேகலைக் காப்பிய ஆசிரியர் சாத்தனார் இவற்றை விளக்கினார்.

திருவள்ளுவர்,

ஆற்றின் அளவு அறிந்து கற்க” (125) என்றார். இதில் ‘அளவு’ என்பது அளவையியல் நூலைக் குறிக்கும். ஏன் கற்கவேண்டும் (?) என்பதற்குத் திருவள்ளுவர்,

“அவை அஞ்சா மாற்றம் கொடுத்தல்” என்று காரணமும் சொன்னார். “அவை அஞ்சா மாற்றம் கொடுத்தல்” என்பது முன் கண்ட பட்டிமண்டபக் கருத்துப் போரைக் குறிக்கும்; தருக்கத்தைக் குறிக்கும். இது கருதியே உரையாசிரியர் பரிமேலழகரும் இப்பொருளே கொண்டார்.

‘அளவு’ என்னும் சொல் பொதுவில் எண்ணிக்கை முதலிய பல அளவுகளைக் குறிக்கும். ‘ஆற்றின் அளவு அறிந்து ஈக’ (477) என்பதில் இப்பொதுப்பொருள் உள்ளது.

மேலே கண்ட குறள் ‘கற்க’ என்றதாலும், ‘அவை அஞ்சா மாற்றம் கொடுத்தற் பொருட்டு’ என்றதாலும் கற்பதற்கும், மாற்றம் கொடுத்தற்கும் ‘அளவை நூல்’ என்பதே பொருந்துவது. பொதுவான அளவுப் பொருள் இங்குப் பொருந்தாது. ஏனெனில் கல்வி ‘கரையில’. கல்வி எண்ணிக்கை அளவில் அடங்காதது. ஆனால், எவற்றைக் கற்க வேண்டும் என்னும் அளவிற்கு உரியது. திருவள்ளுவர் ‘கசடறக் கற்பவை கற்க’ என்று ஒர் அளவு கூறினார். எனவே, ‘அவை அஞ்சா மாற்றம் கொடுத்தல் பொருட்டு அளவை நூலைக் கற்க வேண்டும்’ என்பதே பொருத்த மானது.

இந்த ‘அளவை’ என்பது காண்டல் அளவை, கருதல் அளவை என்னும் இரண்டு படிகளைக் கொண்டது என்று கண்டோம். இவற்றுள் காண்டல் கண்ணால் காண்டலையும், கருத்தால் காண்டலையும் குறிக்கும். ‘கருதல்’ என்பது கண்டதைக் கொண்டு அதன் தொடர்பில் உள்ளதைக் கருதி அளத்தலாகும். ‘புகை வருவதைக் கண்டுகொண்டு நெருப்பு இருக்கும்’ என்பது போன்று கருதி அறிதல் – ஊகித்தல் ‘கருதல் அளவை’யாகும்.

திருவள்ளுவர், ‘அளவு அறிந்து’ என்றதால்,

‘காண்டல் அளவை;
கருதல் அளவை’

எனும் இரண்டையும் குறித்துள்ளார் என்பதை நாம் கருத்தில் நிறுத்திக்கொண்டு, அறிவியல் கருத்தை அணுக வேண்டும்.

‘அறிவியல்’ என்பது அறிவைக் கொண்டு ஆய்ந்து உண்மையைக் கண்டு ஒரு முடிவிற்கு வருதல் ஆகும்.

இக்கால அறிவியல் வல்லுநர் அறிவியலுக்குப் பின் வரு மாறு விளக்கம் தந்தனர்.

‘உலக நிகழ்ச்சிகள் பல.
அவற்றைக் கூர்ந்து காணல்:
கண்டு ஒருங்கு சேர்த்தல்;
சேர்த்தவற்றை வகைப்படுத்தல்;
வகைப்படுத்தி அவற்றிடையே உள்ள
உள்ளார்ந்த தொடர்புகளை அறிதல்;
அறிந்தவற்றைக் கொண்டு அறியவேண்டிய
உண்மையைக் கருதிப் பார்த்தல்;
கண்டவற்றையும், கருதி அறிந்தவற்றையும் ஒழுங்கு செய்து முடிவு
 காணலாம் அறிவுச் செயலே ‘அறிவியல்’

இவற்றைச் சுருக்கமாகச் சொன்னால்,

நிகழ்ச்சிகளைக் காணல் – அவற்றைத் தொகுத்தல் – அவற்றுள் தொடர்பு காணல் – கருதல் – உண்மை முடிவு கொள்ளல் என அமையும்.

இவற்றிலுள்ள செயற்பாடுகளைக் கூர்ந்து பார்த்தால் காணல், கருதல் இரண்டுந்தாம் நிலைக்களமான செயற் பாடுகள். மற்றவை இவையிரண்டிற்கும் துணை செய்த பவை. இன்றியமையா நிலைக்களமான காவல். கருதல் இரண்டும் தமிழ் அளவையியலின் இரண்டு படிகள். திருவள்ளுவர் இவற்றின் அடக்கமாக “அளவறிந்து’ என்று ‘அளவை நூ’லைக் குறித்தமை இங்கு நினைவு கூரத் தக்கது.

மேலே விளக்கம் கூறப்பட்ட அறிவியல் இக்கால அறிவியல் வளர்ச்சியில் இரண்டு பாகுபாடுகளாகக் கொள்ளப்படுகிறது.

ஒன்று “பட்டறிவு அறிவியல்” (Experimental Science)
இரண்டு, “முறை அறிவியல்” (Methodological Science)

பட்டறிவு அறிவியல்–.⁠அறிவியல் அறிஞர் தாம் தம், பட்டறிவில் காணும் நிகழ்ச்சிகளையும் அவற்றை வைத்துத் தாம் கருதல் (ஊகம்)களையும் கொண்டு ஆராயும் அறிவியல். முறை அறிவியல் ⁠பட்டறிவில் கண்ட நிகழ்ச்சிகளை; கருதல்களைப் பெறுவதற்கு உதவும் அறிவியல்.

இரண்டாவதான ‘முறை அறிவியலுள் இன்றியமையாத துறைகள் கணக்கியல், அளவையியல் கோட்பாட்டியல் (Philosophy) என்பன.

இவை இக்கால அறிவியல் நுணுக்கங்கள், இந்நுணுக்கங்களின் மையமான ‘அளவையியல்’ பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவரால் குறிக்கப்பட்டுள்ளது. இக்காலத்தில் பெருகிவரும் நுணுக்கங்களின்படியும் திருவள்ளுவர் குறிப்பு அடங்கியுள்ளமை ஒத்துப்பார்த்து அறிதற்கு உரியது. ஒத்துப் பார்ப்பதால் உண்டாகும் அறிவு திருவள்ளுவர் அறிவியல் அறிஞர்’ என்பதை ஏற்பதாகும்.

இரண்டு பாகுபாடுகளில் முதலாவதாகக் கண்ட ‘பட்டறிவு அறிவியல்’ திருவள்ளுவர் குறட்பாக்களில் எவ்வாறு பொதிந்துள்ளது என்பதைக் காணவேண்டும்.

(தொடரும்)

+++++

  1. அடியார்க்கு நல்லார், சிலப்பதிகாரம், உரைப்பாயிரம்.

2. மாங்குடி மருதனார், மதுரைக்காஞ்சி, 191.

3. பெருங்குன்றுார் கிழார்: பதிற்றுப்பத்து, பதிகம்-9-11.

4. காரியாசான், சிறுபஞ்சமூலம்: 91-1.

Friday, July 5, 2024

அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 1. அ. அறிவியற் கவிஞர் திருவள்ளுவர்

 


ஃஃஃ       06 July 2024      கரமுதல



(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், பேச்சாளனின் எழுத்துரை – தொடர்ச்சி)

திருவள்ளுவப் பெருந்தகைக்குக் ‘கவிஞர்’ என்னும் சொல்லை அடைமொழியாக்கலாம். ஆக்கினால் அச்சொல் பெருமை பெறும். அதனுடன் ‘அறிவியல்’ என்பதை அடைமொழியாக்கினால் அடைமொழியாக்குவோன் திருவள்ளுவரின் அறிவியல் திறத்தை அணுகியவன் ஆகிறான்.

திருவள்ளுவர் கவிஞரா ?

திருவள்ளுவரைப் ‘புலவர் திருவள்ளுவர்’, ‘மன்புலவன் திருவள்ளுவன்’, ‘முதற் பாவலர்’- எனப் புலவராகவும், பாவலராகவும் ‘மாலை’[1] சூட்டிப் போற்றினர். மணிமேகலை ஆசிரியர் சாத்தனாரும் ‘பொய்யில் புலவன்’[2] என்றார். முந்தையோர் ‘கவிஞர்’ என்று பாடவில்லை.

கம்பருடனும், இளங்கோவுடனும் இணைத்துப் பாடிய நம் காலக் கவிமாமன்னன் பாரதி, ‘யாமறிந்த புலவரிலே’ என்று திருவள்ளுவரைப் புலவராகப் போற்றினார்.

ஆனால், அவரே,

“கம்பன், இளங்கோ, திருவள்ளுவர் முதலிய மகா கவிகளுக்கு ஞாபகச் சின்னமும் வருசோற்சவமும் ஏற்பாடு செய்ய வேண்டும்”[3] என்று கட்டுரையில் ‘கவி’யாகக் குறித்தார். பாரதிதான் திருவள்ளுவரைக் ‘கவிஞர்’ என்று குறித்த முதற் கவிஞர். அவ்வையாரையும் “கவியரசி” என்று போற்றினார்.

புலவர் புலமை உடையவர். புலமையால் பாடம் சொல்லும் ஆசிரியராகவும், எழுதும் ஆசிரியராகவும் விளங்குவார். முற்காலத்தில் எழுதும் புலமை “செய்யுள்’ எழுதுவதாக இருந்தது. பின்னர் உரைநடையும் கூடிற்று. செய்யுளுக்குப் ‘பா, பாட்டு’ எனவும் பெயர். பாவைப் பாடுபவர், எழுதுபவர் பாவலர் எனப்படுவார்.

செய்யுளும் பாவும் பாட்டும் இலக்கணக் கட்டுக் கோப்புடன் அமைபவை. சீரான பலவகை ஓசைகள் உடையவை. ஆற்றுநீரில் மிதந்து செல்வது போன்று பாவின் பொருளை எளிமையாகக் கொள்ளலாம். எதிர்த்து நீந்துவது போன்று மூழ்கி வளப்பொருளை எடுப்பது போன்று முயன்றும் பொருள் கொள்ளலாம்.

‘செய்யுள், பா, பாட்டு’ எனப்படுபவைதாம் ‘கவிதை’ எனப்படுவதும். கவிதை இலக்கண அமைப்பு உடையதே. பாரதியாரும் பாவேந்தர் பாரதிதாசனாரும் செய்யுள் இலக்கணம் வழுவாது எழுதினர். அவர்தம் செய்யுள்களும் பாக்களும் பாட்டும் ‘பாரதியார்கவிதைகள்’, ‘பாரதிதாசன் கவிதைகள்’ எனக் கவிதைப்பெயரில் வழங்கப்படுகின்றன.

பொதுவான ஒரு கருத்து, ‘செய்யுளைப் பாடுபவன் புலவன்; கவிதை எழுதுபவன் கவிஞன் என்பது. இதற்கு மாற்றாக ஓர் அமைதி சொல்வதுபோன்று திருஞானசம்பந்தர் “உரவார் கலையின் கவிதைப் புலவர்[4] என்று “கவிதைப் புலவர்” என்னும் தொடரை வழங்கினார்.

ஒரு கருத்திற்குப் பழமைச்சொல்லும் இருக்கும். புதுமையாகச் சொல்லாக்கமும் அமையும். இவ்விரண்டையும் சங்க இலக்கியங்களிற் காணலாம்.

“புலவர் புல
நாவிற் புனைந்த நன்கவிதை“
[5]

என்று பாடினார். இதிலுள்ள ‘கவிதை’ என்னும் சொல் அக்காலப் புதுமைப் படைப்புச் சொல். புலவர் புலமையால் பாடும் செய்யுளுக்குத்தான் ‘கவிதை’ என்னும் சொல்லை ஆக்குவதாக ஆசிரியர் நல்லந்துவனார் “புலவர், புலம்” எனும் இரண்டு சொற்களையும் முன்னே வைத்துள்ளார்.

இதற்குப் பொருள் விரித்த பரிமேலழகரும்,

“கவிதை-கவியின் தன்மை. அஃது ஈண்டு செய்யுள் மேல் நின்றது” என்றார். இது, ‘செய்யுள்’ என்னும் சொல்லுக்குரிய மாற்றுச் சொல்லாகக் ‘கவிதை’ என்பதைக் காட்டியதாகும்.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான சிறுபஞ்ச மூலத்தில்,

“செந்தமிழ் தேற்றாதான் கவிசெயல்
நாடின் நகை“
[6]

என்பதில் ‘கவி’ என்னும் சொல் உள்ளது. இதனை எழுதியவர் காரியாசான் என்பவர்.

கவிதை – தமிழ்ச்சொல்

‘கவிதை, கவி’- என்னும் சொற்கள் பற்றி ஓர் ஐயம் எழலாம். பரிபாடலிலும், மாமூலத்திலும் பல வட சொற்கள் உள்ளன. அவைபோன்று ‘இவையிரண்டும் வடசொற்கள் ஆகாவோ(?) என்று வினவலாம். இந்த ஐயம் தோன்றி, நிலைத்து, உறுதியான முடிவாக வடமொழிதான் என்று இக்காலத்தில் கருதப்படுகிறது.

பாரதிதாசனார் புரட்சிக் கவிஞர் என்று புகழப் பட்டவர். இப்புகழ் மொழியில் உள்ள ‘கவிஞர்’ என்பதை வடமொழியாகக் கொண்டு அதனை அவருக்கு வழங்க மனமின்றி ‘பா வேந்தர்’என்று புகழப்படுகிறார். ஆனால், பாவேந்தராம் புரட்சிக் கவிஞர் அவர்களே ‘கவிதை’ தமிழ்ச்சொல் என்று எழுதினார். அவர் கருத்தின்படியும் ‘கவிதை’ என்பது தமிழ்ச் சொல்லே.

எவ்வாறு?

‘கவிதை’ என்னும் தமிழ்ச் சொல்லிற்குப் பகுதி ‘கவி’. இதற்கு மூலச்சொல் ‘கவ்’ என்பது ‘கவ்’ என்றால் கவ்வுதல், கவர்தல் கவர்ச்சித்தல் எனப் பொருள்படும். இதற்குத் திருவள்ளுவரே சான்று தந்தார் :

“கவ்வையால் கவ்விது காமம்” (1144) என்னும் தொடரில் ‘கவ்’ இரண்டு இடங்களைப் பிடித்துள்ளது. முதலில் உள்ள ‘கவ்வை’ என்பதற்குத் ‘துன்பம்’ என்று பொருள். அஃதாவது கவ்வுதலால் ஏற்படும் மனத்துன்பம். இக்குறட்பாவில் கவ்விய, ‘அலர்’ என்னும் பழிச்சொல்லும் துன்பத்தைக் குறிக்கும். இரண்டாவதாக உள்ள ‘கவ்’ என்பது கவர்ச்சியுள்ளது; ‘கவர்ச்சியால் இன்பம் தருவது’ என்னும் பொருள் காட்டுவது.

இஃது இ என்னும் இறுதி இணைந்து ‘கவி’ என்னும் சொல்லாயிற்று, செவ் + இ = செவி: குவ்+இ = குவி (குவியல்); புவ்+இ = புவி என்றெல்லாம் ஆனமை போன்று ‘கவி’ உருப்பெற்றது. (‘பெளவம்’ என்னும் தமிழ்ச் சொல்லுக்குக் ‘கடல்’ என்று பொருள். பெளவம், ‘புவ்வம்’ என்றாகும். “புவ்வத்-தாமரை”[7] என்று பாடப்பட்டுள்ளது). ‘புவ்’ என்னும் கடல் நீரை உடையது புவி.

இச்சான்றுகளால் ‘கவி’ என்னும் சொல் தமிழ்ச்சொல். ‘கவி’ என்பது இடையில் ‘த்’ என்னும் எழுத்துப்பேறு பெற்று ஐ இறுதியாகக் ‘கவிதை’ என்னும் சொல் ஆக்கம் பெற்றது. கவ்விக் கவரும் தன்மையை உடையது ‘கவிதை’; தன் சொற்சுவையால் படிப்போர் உள்ளத்தைக் கவ்விக் கவர்வதை உடையது ‘கவிதை’.

‘த்+ஐ=தை’ என்று முடிவுறும் சொற்களாக ஓதை,’அகுதை, மருதை, சிவதை’ என்னும் சொற்கள் தமிழில் உள்ளமையும் சான்றாகும். மொழி மூல அடித்தளத்தாலும், சொல் இலக்கண அமைப்பாலும், சொல்லாக்கக் கருத்தாலும் ‘கவிதை’ என்னும் சொல் புத்தாக்கமான தமிழ்ச் சொல்லேயாகும். இது செய்யுளையும் பாவையும் பாட்டையும் குறிக்கும்.

கவிதையும் பாவும்

இக்காலத்தில் கவிதையுடன் பிற சொற்களும் எந்த அளவில் வழக்கில் உள்ளன? புலவர்களில் சிலரே செய்யுள் என்னும் சொல்லை வழங்குகின்றனர். தனித்தமிழ் உணர்வுடையோர் ‘கவிதை’ என்னும் சொல்லை வடசொல் என்று கருதுகின்றனர், எனவே, பா, பாட்டு இரண்டையும் கொண்டுள்ளனர். பெரும்பாலோர் ‘கவிதை’ என்பதையே வழங்குகின்றனர். இன்று ஆட்சி செய்வது கவிதையே.

இக்காலச் சூழலில் ‘செய்யுள், பா’ என்பன இலக்கணச் செறிவு உடையவை என்றும், முயன்று பொருள் காணப்பட வேண்டியவை என்றும் கருதப்படுவனவாகும். கவிதை “எளிமையானது, சுவையுள்ளது” என்று கொள்ளப்படுகிறது.

செய்யுளையும் கவிதையையும் ஈடுகட்டிப் பார்க்க வேண்டும்.

மயிலின் கால் அடிக்கும் நொச்சி இலைக்கும் மாற்றி மாற்றி உவமைகளை இரண்டு இலக்கியங்களில் காண முடிகிறது.

“மயிலடி இலைய மாக்குரல் நொச்சி“[8]

இது குறுந்தொகை என்னும் சங்க இலக்கியச் செய்யுள்.

“நொச்சிப் பாசிலை அன்ன பைக்தாள் மஞ்சை“[9]

இது திருவிளையாடற் புராணச் செய்யுள்.

‘நொச்சி இலைபோல் மயிலின் கால்’ இது நம் காலத்துக் கவிஞர் சுரதா அவர்களின் கவிதை.

முன்னர் செய்யுளாகக் காணப்படுபவற்றுள் உள்ள உவமைக் கருத்தே இங்குக் கவிதை எனப்படுகிறது. இவ் உவமையைப் பாடியதைக் கருதியும் கவிஞர் சுரதா “உவமைக் கவிஞர்’ என்று பாராட்டப்பட்டார்.

மற்றொன்று:

குளத்து நீரில் செக்கச் சிவந்த ஆம்பல் பூத்ததை முத்தொள்ளாயிர வெண்பாச் செய்யுள்,


“வெள்ளம் தீப்பட்டது” என்கின்றது. இக்காலப்

புதுக்கவிதை ஒன்று முத்தொள்ளாயிரத் தொடரை வட மொழியில் மொழி பெயர்த்தது போன்று.

⁠”ஜலத்தின் ஜுவாலைகள்” என்கின்றது. இதனைப் புதுக்கவிதை என்பர்.

எனவே, ஒரே வகைக் கருத்து அவ்வக்காலத்தில் வழங்கிய சொல்லாட்சிகளாலும், தொடர் அமைப்பு களாலும் ‘செய்யுள்’ என்ற பெயரையும் ‘கவிதை’ என்ற பெயரையும் பெறுகின்றதைக் காண்கிறோம்.

திருவள்ளுவமும் கவிதை நூல்

இவற்றைக் கொண்டு நோக்கினால் ‘தம்கால வழக்குச் சொல்லில் எளிமையாக படித்ததும் கருத்தையும் சுவை நயத்தையும் அறிந்து கொள்ளும் கவர்ச்சியுடையது கவிதை என்றாகிறது.

திருவள்ளுவர்தம் திருக்குறள் படைப்பில் செய்யுள் பாங்கும் உள்ளது; கவிதைப் பாங்கும் உள்ளது.

முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண் (1239)

இக்குறளில், முயக்கு, தண்வளி, போழ, பசப்பு’ என்னும் இலக்கியச் சொற்கள் கூர்ந்து பொருள் காணப்பட வேண்டியவை. இவற்றாலும், உள்ளீடான கருத்தாலும் இக்குறள் ஆழ்ந்து கண்டு பொருள் காணும் பாங்குடையதா கிறது. இது செய்யுட் பாங்கு.

இதே கண்ணைப் பற்றிக் குறள் ஒன்று உள்ளது. காதலி தன் காதலனை நோக்கி ஒடும் தன் நெஞ்சைப் பார்த்துப் பேசுகின்றாள்; ‘நெஞ்சே! என் கண்ணையும் கொண்டு செல்’ என்பவள் அதற்குக் காரணமும் கூறுகிறாள்:

கண்ணும் கொளச்சேறி நெஞ்சேஅவைஎன்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று(1244)

இக்குறளில் ‘என் கண்கள் அவரைக் காணும் துடிப்பில் என்னைக் கடித்துத் தின்னுகின்றன’ என்கின்றாள்: ‘தின்னும்’ என்ற ஒரு சொல்லே சுவையை அள்ளித் தந்து நம்மை மகிழவைக்கிறது. இது கவிதைப் பாங்கு.

எனவே, திருவள்ளுவத்தில் இது போன்று கவிதைப் பாங்குகள் மிக மிக உள்ளன. கவிதையைப் பாடுபவர் கவிஞர்; திருவள்ளுவரும் கவிஞர் ஆகிறார்.

கவிஞர் – சொல்லமைப்பு

‘கவிதை’ தமிழ்ச்சொல் என்று காணப்பட்டது. ‘கவிஞர்’ என்னும் சொல் தமிழ்ப்பாங்கில் உருவானதையும் காணவேண்டும்.

இச்சொல் கவி+ஞ் + அர் என்பதன் கூட்டு உருவம். இடையில் உள்ள ‘ஞ்’ எழுத்துப்பேறு எனப்படும். கவி(ய்)அ ‘கவியர்’ என்று தான் வரவேண்டும். இதில் இடை யில்உள்ள ‘ய்’ உடம்படுமெய் எனப்படும். இது போன்றே அறி+அர்-அறிவர், இளை+ அர்-இளையர், கிளை+அர்- கிளையர், வினை+அர்-வினையர், வலை+அர்-வலையர் என வரும். இவ்வாறும் இலக்கியங்களில் உள்ளன.

இவற்றுடன்,

அறிஞர், இளைஞர் கிளைஞர், வினைஞர், வலைஞர் எனச் சங்க இலக்கியங்களில் அமைந்துள்ளன. இவற்றுள் ல், ய், என்னும் உடம்படுமெய்களுக்கு மாற்றாக ‘ஞ்’ அமைந்துள்ளது. இவ்வமைப்பால் ‘ஞ்’ அமைந்த சொற்கள் ஒரு தனி இன்னோசையுடன் ஒரு மெருகுப் பாங்கு பெற்றன. ‘ஞ்’ அந்த மெருகுப் பாங்கைத் தருகிறது.

இவை போன்றே கவியர் என்பது கவிஞர் என்று சுவையுள்ள மெருகுச் சொல்லாகியது. தமிழ்ப் பண்பாட்டு மொழியமைப்பையும் கொண்டது.

எனவே, திருவள்ளுவர் கவிதைப்பாங்கில் குறட் பாக்களைப் படைத்திருப்பதால் நல்ல மெருகுத் தமிழ்ச் சொல்லாம் கவிஞர்’ என்பதை அடைமொழியாக்கிக் ‘கவிஞர் திருவள்ளுவர் என்று போற்றுவது பொருத்தமே.

(தொடரும்)

++++

குறிப்புகள்

  1.  அடியார்க்கு நல்லார்: சிலம்பு உரைப்பாயிரம்.
  2.  மாங்குடி மருதனார்: மது. கா. 191.
  3.  பெருங்குன்றுார் கிழார்: பதி: பதிகம்-9-11.
  4. காரியாசான்: சிறுபஞ்சமூலம்: 91-1.
  5.  சிவவாக்கியர் : சிவ : 203
  6. கடியலூர் உருத்திரங்கண்ணனார் : பெரும்பாணாற்றுப்படை: 28
  7. கபிலர் : புறநானூறு : 110-2
  8. கடுவன் இளவெயினனார் : பரிபாடல் : 7-18, 19
  9. தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் : புறநானூறு : 72-5

Monday, July 1, 2024

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியஇதழ்களும் ஆசிரியர்களும் – ங

 




(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கிய
இதழ்களும் ஆசிரியர்களும் – க – தொடர்ச்சி
)

சொற்கள் வழங்கிய
இதழ்களும் ஆசிரியர்களும் 22- 42

  1. நச்சினார்க்கினியன் 1926
  2. குடியரசு 6. 5. 1928
  3. ஆனந்த விசய விகடன்
    ⁠ஆசிரியர் : விகடகவி பூதூர் வைத்தியநாதையர்
  4. குமுதம் (செய்தி ’சுரதா சுண்டல்’
  5. விநோதன் (மலர் 2, இதழ் 3) 1934
    கட்டுரை : ஆட்டமும் பாட்டும்
    கட்டுரையாளர் : இராவ்பகதூர் ப. சம்பந்தமுதலியார்
  6. சித்தன் (திங்கள் இதழ்) மாலை 1, மணி 6, 1935
    (குடியரசு கட்டுரையாளர் : எ. ஆளவந்தார் 1939
  7. செந்தமிழ் (யவனர் வரலாறு) கட்டுரை த. இராமநாதபிள்ளை 1940
  8. தமிழணங்கு – மலர் 1; இதழ் 9 1941
    ஆ. மா. சிவஞானம் – ஆம்பூர்
  9. சினிமா உலகம் 1941
    (செந்தமிழ் கட்டுரையாளர் : ச. சிரீவாசஐயங்கார்
  10. குண்டுசி – கட்டுரையாளர் : பாலபாரதி ச.து.சு. யோகியார் 1947
  11. இணக்கம்(மலர் 3, இதழ் – 9)
    1949
    • மொ. அ. துரை. அரங்கசாமி
  12. தம்பி (தமிழ்) – தில்லை. வில்லாளன் 1953
  13. திராவிடன் குரல் (பொங்கல்மலர்) கட்டுரையாளர் அ. வி. இராசன் 1956
  14. கலைவாணன் (மலர் 2 – இதழ் 21) 25. 9, 1961
  15. தமிழ்ப்பாவை 7. 11. 1967
  16. நவமணி 13. 7. 1970
  17. இளந்தமிழன் சனவரி – 1989
    • சிறப்பாசிரியர் தி.வ. மெய்கண்டன்
  18. முத்தமிழ் முரசு – மு. சுப. கருப்பையா 21. 12. 1992
  19. வாழ்வியல் (2ஆவது ஏடு, (16.9.1960) – பி.எம். வேங்கடாசலம்
  20. தேனமுதம் (மார்ச் 1972 அடை 2; துளி 13)
  21. தமிழர் நேசன்