Friday, September 20, 2024

அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 4 இ. விளைவு

 




(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 3. ஆ. செல்வம்-தொடர்ச்சி)

‘விளைவு’ என்பதற்குப் ‘பயன்படுவதற்கு உண்டாதல்’ என்று பொருள். விளைவயின் மாண்டற் கரிதாம் பயன்’ {177) என்று திருவள்ளுவர் விளைவைப் பயனாகக் குறித்தார். “விளைவின் கண் வீயா விழுமம் தரும்” (284) என்றதிலும் விளைவு கெடாத பயனைக் குறிக்கும். பயன்பட உண்டாகும் பொருள் கண்ணாற் காணப்படும் பருப் பொருளாகவும் இருக்கலாம்; நுண்பொருளாகவும் இருக்க லாம்; கருத்துப் பொருளாகவும் இருக்கலாம்.

‘வயல் விளைவு நன்றாக இருந்தது’-இதில் விளைவு பருப்பொருளாகிய நெல்லைக் குறிக்கும்.

‘இராமன் விளைவு’ (Raman Effect) இதில் விளைவு அறிவியல் வல்லுநர் சி. வி. இராமன் கண்டறிந்த ஒலிச் சிதறலாகிய நுண்பொருளைக் குறிக்கும்.

‘கல்வி அறிவாக விளையும்’ — இதில் விளைவு கருத்துப் பொருள்.

திருவள்ளுவர் இவற்றையெல்லாம் அடக்கியே “விளையுள்” (545, 731) “விளைவது” (732) எனக் குறித்தார்.

இவ்வாறு விளைச்சல் பலவகைப்படினும் சிறப்பாகப் பருப்பொருள் விளைச்சல் முதன்மையானது. அதனிலும், உழவுப் பயிர் விளைச்சல் மூலமானது. திருவள்ளுவர் இம்மூலமான உழவையே முதற்குறிக்கோளாக வைத்தார்.

“சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்” (1031) என்றமை இன்று உலகில் மாற்றமின்றி உள்ளது. தொழில் பற்றிய இக்கால அறிவியல், உழவைத்தான் முதல் தொழிலாகக் கொண்டுள்ளது.

உழவு தமிழரின் தனி உரிமைத் தொழில். மிகத் தொன்மைய மக்களினத்தாருள் மிகச்சிலரே இத்தொழில் கொண்டோர். ஆரியர் எனப்படுவோர் உழுதொழிலை இழிவாகக் கருதினர்.

                “இழிவான உழுதொழிலைச் செய்யும்
                பார்ப்பானைச் சிரார்த்தம் முதலிய
                சடங்குகளுக்கு அழைக்காதே”

என்று மனுநூல் விதித்தது.

திருவள்ளுவர் உழவு என்றொரு தனி அதிகாரத்தை அமைத்து அதனில் பத்துக் குறட்பாக்களைப் படைத்தார். இப்பத்துக் குறட்பாக்களில் உழவின் இன்றியமையாமை, உழவுமுறை, உழவுப் பயன் ஆகியன தெளிவாக்கப்பட்டுள்ளன.

இக்கால ‘உழவியல்’ விளக்கங்கள் திருவள்ளுவத்தின் அடிப்படை கொண்டவையாக அறிமுகமாகின்றன. இன்றியமையா இரண்டை இங்குக் காணலாம். திருவள்ளுவர் கால உழவு இருவகை. ஒன்று நீர்ப்பாய்ச்சல் உழவு, மற்றொன்று புழுதி உழவு.

இதனை,

        “ஏரினும் நன்றால் எருவிடுதல், கட்டபின்
        நீரினும் கன்றதன் காப்பு” (1038)

என்னும் குறளில், உழவுத் தொழிலின் செயற்பாட்டிை. அமைந்திருக்கும் வரிசை கொண்டு அறியலாம்.

முதலில் வானத்து மழையால் நிலம் நனைந்ததும், ஏரால் உழுதல்.

அடுத்துப் புழுதியில் எரு இடுதல்;

பின் களை எடுத்தல்;

பின் மழைநீரை நிரப்புதல்;

பின் கதிர்ப்பயிரைக் காத்தல்-என்பன புழுதி உழவாகும்.

திருவள்ளுவர் வாழ்ந்த பகுதி புழுதி உழவைக் கொண்டது.

திருவள்ளுவர் வாழ்ந்த இடம் முகவை, மதுரை மாவட்டச் சுற்றுவட்டத்தைக் கொண்டதாகும் என்று கண்ட என் கட்டுரை “வள்ளுவர் வாழ்விடம்” என்பது. இது ‘கிராம ஊழியன்’ (அரசு இதழ்), குறளியம், ‘மலைநாடு” (கோலாம்பூர் இதழ்), முதலியவற்றில் வெளி வந்து பாராட்டைப் பெற்றது. பின் ‘புதையலும் பேழையும்’ என்னும் என் தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளது.

திருவள்ளுவம் ஏரால் உழும் தொழில்பற்றிக் குறிப்பிடு கின்றது. புழுதி உழவில் உழுது மண்கட்டிகளைப் புரட்டி விடுவர். கட்டிகளை உடைத்துத் துாளாக்குவர் அவ்வாறு ‘தூளாக்கப்பட்ட’ புழுதியை நன்கு சூரியனின் வெப்பக் கதிரில் காயவைக்க வேண்டும் என்பன திருவள்ளுவரின் உழவியல். அப்புழுதியைக் காயவைப்பதற்கும் ஒர் எடுத்துக் காட்டகக அளவு கூறினார்.

        “தொடிப் புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
        வேண்டாது சாலப் படும்”(1037)

என்னும் குறள் கூர்ந்து காணத்தக்கது.

‘தொடி’ என்பது ஒர் அளவு. அது அக்காலப்படி ஒரு பலம் நிறைகொண்டது. கஃசு என்னும் அளவு கால் பலம் நிறை கொண்டது.

‘உழும்போது கீழ்மேல் மண்ணாகிய ஒரு பலம் அளவு புழுதியைச் சூரியனது வெய்யில் வெப்பத்தால் நான்கில் ஒரு பங்கு என்னும் அளவாகும் வரை காயப்போட வேண்டும். அவ்வாறு காய்ந்தால் ஒரு பிடி எருவும் போடப்படாமல் மிகுதியாக விளையும் என்பது இக்கருத்து. சொல்லப்பட்ட அளவெல்லாம் ஒரு குறிப்புத்தாமே அன்றி நிறுத்துப் பார்த்துச் செய்யவேண்டிய அளவுகள் அல்ல.

இங்கு ‘உணக்கின்’ என்பதுதான் அறிவியல் உள்ளி டான கருத்துடைய சொல்.

‘உனக்குதல்’ என்றால் சூரியன் வெப்பக்கதிர்கள் புழுதியின் உள்ளுள்ளே புகுந்து வெப்பமூட்டுதலைக் குறிக்கும். இதனால் புழுதி எருப் போடவேண்டாத அளவு எருவின் உரத்தைப்பெறும் என்பதாகும்.

இக்கருத்து இக்கால வேளாண்மை அறிவியலில் வெளிப்பட்டுள்ளது. இதற்கு சூரியனின் கதிர்கள் பற்றிய சிற்றளவு விளக்கத்தை இங்குக் காணவேண்டும்.

சூரியன் ஒரு வெப்ப ஆ.விக்கோள். அதன் கதிர்களால் பிறகோள்களும் நம் மண்ணுலகும் இயக்கி உயிரினங்களை வாழவைக்கின்றன. சூரியனிடமிருந்து வெளிப்படும் கதிர் களில் கண்ணுக்குப் புலனாகின்றமையும் உண்டு; புலனா காதனவும் உள்ளன. அவை :

புறஊதாக் கதிர் (Ultra Violet Ray)

அகச்சிவப்புக்கதிர் (InfraRed Ray)

வேதிய வினைக்கதிர்(Active Ray)

எனப்படுகின்றன.

இக்கதிர்கள் வானச் சூழ்நிலையில் சிறுசிறு மாற்றங் களுடன் நிலத்து மண்ணைத் தாக்குகின்றன; அல்லது தழுவுகின்றன. இக்கதிர்களுடன் கூடிய வெய்யில் வெப்பம் பல நோய் நுண்ணுயிரிகளை மாய்க்கும். மேலும் ஊட்டங்களாக ‘ஏ’, ‘டி’ முதலியவற்றை ஊட்டும்.

உழவில் புழுதி உணக்கப்பட்டால் அப்போது இக்கதிர்களின் தாக்கத்தால் வேண்டாத நுண்ணுயிரிகள் அழியும், இது பயிர் முளைக்குப் பாதுகாப்பு. நீர்ப்பசை நீங்கி சூரியக் கதிர்களின் ஒளியால் பாங்குபெறும். இதனால் ஊட்டங்கள் தழுவுவதால் எரு தரும் உரத்தை மண் புழுதி பெறுகிறது, இதனால் எருவின்றியும் நல்ல விளைச்சல் உண்டாகும்.

மேலும் சூரியனில் களங்கங்கள் எனப்படும் ‘கரும்புள்ளி கள்’ உள்ளன. இவை உண்மையில் கரும்புள்ளிகள்’ அல்ல வென்றும் ஒளி மாற்றத்தின் தோற்றங்கள் என்றும் கண்டுள்ளனர். இக்கரும்புள்ளிகளின் வெப்பக்கூற்றால் மண்ணுலகில் உயிரினம் பயனடைகிறது என்றும் கண்டுள்ளனர்.

இவ்வகையிலும் சூரியனின் வெப்பக் கதிர் மண்ணிற்கு உரம் ஊட்டுவதாகிறது.

18-ஆம் நூற்றாண்டில் காணப்பட்ட இவ்வறிவியல் உண்மை கி.மு. முதல் நூற்றாண்டுத் திருவள்ளுவத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளமை வியந்து போற்றக் குரியது.

எனவே, விளைவு’ என்பதிலும் திருவள்ளுவம் இக்கால “கிலத்துஅறிவியல்” பாங்கை முன்னோடி அடையாளமாகக் காட்டுகிறது.

‘விளைவு’ என்பதால் நேரும் பயன்பாடுகள் தாம் மாந் தர்க்கும் உயிரினங்கட்கும் இன்பத்தை வழங்குகின்றன. இத்தொடர்பில் இன்பம் அடுத்துக் காணப்படவேண்டியது.

(தொடரும்)

Friday, September 13, 2024

அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 3. ஆ. செல்வம்

 




(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 2. அ.4. வந்தபின் தீர்த்தல்-தொடர்ச்சி)

‘பிணியின்மை’யை அடுத்துத் திருவள்ளுவரால் குறிக்கப்பட்டது “செல்வம்”.

‘செல்வம்’ என்றால் என்ன? ‘செல்வம்’ என்று எதனைச் சொல்கின்றோம்? பல பொருள்களையும் ‘செல்வம்’ என்று கொள்கின்றோம்.

நிலத்திலும் கடலிலும், மலையிலும் முறையே: இயற்கையாகக் கிடைக்கும் பொன், கரி, தனிமம் முதலியவற்றையும், முத்து, பவளம், உப்பு முதலியவற்றையும், மணி, கல், மரம் முதலியவற்றையும் செல்வமாகக் கொள்கின்றோம்.

மாந்தரால் செயற்கையில் உருவாக்கப்படும் வயல் வீடு, பொறிகள், பண்டங்கள் முதலியனவும் செல்வம். உழைப்பில் விளையும் நெல், பருப்பு, எண்ணெய் முதலியனவும் செல்வம். இவை அனைத்தும் கண்ணால் காணப்படும் பொருள்கள். எனவே, செல்வம் என்பதைப் பொருள் என்றும் சொல்லலாம்.

திருவள்ளுவர் “செல்வம் செயற்கு” (375) என்று செல்வம் என்னும் சொல்லாலும் குறித்தார். “தாளாற்றித் தந்த பொருள் எல்லாம்(212) என்று பொருள் என்னும் சொல்லாலும் குறித்தார். செல்வத்தை ஈட்டுவதைப் ‘பொருள் செயல்வகை’ என்று குறித்தார். இரண்டையும் கொண்டாலும் ‘செல்வம்’ என்பதை கொண்டு அதற்கு அடைமொழியாகப் ‘பொருள்’ என்பதை வைத்து “பொருட் செல்வம்” (241) என்றார்.

‘செல்வம்’ என்பதற்குப் ‘பொருள்’ என்பதை மட்டும் அடைமொழியாகத் திருவள்ளுவர் கொள்ளவில்லை. “கல்விச் செல்வம்” (400), “செவிச்செல்வம்” (411), “வேண்டாமைச் செல்வம்” (367), “அருட்செல்வம்” (241) என மேலும் நான்கைச் செல்வம் என்றார். இவை நான்கும் கண்ணால் காணப்படும் பொருள்கள் அல்ல; கருத்துப் பொருள்கள். காணப்படும் பருப்பொருள்கள் எல்லாம் செல்வமாகக் கணக்கிடப்படுவது அதனதன் மதிப்பால்தான். பொருளின் மதிப்புதான் ‘செல்வம்’ எனப்படும்.

ஒருவனுக்கு நெல் தேவைப்படுகிறது. முற்காலத்தில் தேவைப்படும் நெல்லின் மதிப்புடைய பருப்பை மாற்றுப் பொருளாகக் கொடுத்தான். இது ‘பண்டமாற்று’ எனப் பெற்றது. வாங்கியவன் பருப்பைப் பயன்படுத்திக் கொள்வான். கொடுத்தவன் மாற்றாகப் பெற்ற நெல்லைப் பயன் படுத்திக்கொள்வான். இந்தப் பண்டமாற்றுப் பொருள்கள் உடன் நேரடியாகப் பயன்படும் நெல்லாகவோ, பருப்பாகவோ அன்றிப் பொன்னாகவும் ஆயிற்று. பொன்னை அணிகலனாக்கிப் பயன்படுத்தலாம். அதனை அப்படியே உண்ணமுடியாது. உணவுப்பொருள் வேண்டுமானால் அதே மதிப்புடைய உணவுப் பொருளைப்பெற்று உண்ணலாம். எவ்வாறாயினும் பொருளின் பயன்பாடு அதன் மதிப்பால் தான் பெறப்படுகிறது.

இந்த மதிப்புப் பண்டமாற்று, பொன்னிலிருந்து நாணயத்திற்கும், பணத்தாளிற்கும் மாறியது. இவை இரண்டையும் அவற்றின் மதிப்பளவிற்கு வேறு பொருளாக மாற்றியே பயன்படுத்த முடியும். அவற்றையே நேரடியாகப் பயன்படுத்த முடியாது. இதுதான் செல்வப் பயன்பாட்டின் நடைமுறை.

இவ்வாறிருக்க, பொருளாக நேரடியில் பயன்கொள்ள முடியாத கல்வியும் கேள்வியும் வேண்டாமையும் அருளும் எவ்வாறு செல்வமாகும்? திருவள்ளுவர் இவற்றைச் செல்வம். என்றமை பொருந்துமா?

பொருந்தும்.

இப்பொருத்தத்தில்தான் இன்றையப் பொருள் அறிவியலின் கோட்பாடு பொதிந்துள்ளது.

இன்றைய அறிவியலில் பொருளியல் (Ecnomics) ஒன்று. அன்றாட வாழ்விற்கு இன்றியமையாத ஒன்று. பொருளியலின் இன்றியமையாத முதற்கூறு செல்வம்.

செல்வம் பற்றி இன்றையச் ‘செல்வ அறிவியல்’ (Wealth Economics) என்ன கூறுகிறது(?) என்பதைக் காண வேண்டும்.

‘செல்வம்’ என்பது குறிப்பிட்ட நேரத்தில் இருக்கும் பொருளியல் சரக்கின் இருப்பைக் குறிக்கும் என்று இன்றையச் ‘செல்வ அறிவியல்’ கணித்துள்ளது.

இதன்படி ஓர் இருப்புச் சரக்கைச் ‘செல்வம்’ என்று சொல்ல வேண்டுமானால் அதற்குப் பின்வரும் மூன்று இலக்கணங்கள் கூறப்பட்டுள்ளன.

ஒன்று:

மாந்தனின் தேவையை நிறைவேற்ற வேண்டும்.

இரண்டு;

அதன் அளவு முழுத்தேவைக்குக் குறைந்ததாக வேண்டும்.

மூன்று:

ஒருவனிடமிருந்து மற்றவனுக்கு மாறக்கூடியதாக இருக்கவேண்டும்.

இவை இக்காலச் செல்வ அறிவியல் கண்ட இலக்கணங்கள். இம்மூன்றும் கண்ணால் காணப்படும் பொருட் செல்வத்திற்குப் பொருந்தும். வீடு ஒரு பொருட் செல்வம் என்றால் அஃது ஒருவன் தேவைக்குப் பயன்படுகிறது (1), முழுத்தேவைக்கும் ஈடுசெய்ய இயலாததாகும் (2), மற்றவனுக்கு விற்பனையால் மாறும் (3).

இவை மூன்றும் கண்ணிற்குப்படும் உருவப் பொருளுக்கன்றி மற்ற அருவத்திற்கும் பொருந்தும். காணப்படும் உருப்பொருளும் பொருள்தான். கருதப்படும் கருத்துப் பொருளும் பொருள்தான். மேற்குறிக்கப்பட்ட மூன்று இலக்கணங்கள் இக்கருத்துப் பொருளுக்கு எவ்வாறு ஈடாகும்?

ஒருவனின் ‘தேவையை நிறைவேற்றுவது செல்வம்’ என்று கண்டோம்.

ஒரு நோயாளிக்கு மருத்துவம் தேவை. அந்தத் தேவைக்கு மாற்றாகப் பணம் கொடுப்பான். பணம் கொடுத்துப் பெறுவது நோயைத் தீர்க்கும் தேவையை நிறைவேற்றுகிறது. ஆனால் மருத்துவரின் மருத்துவச் செயல்’ என்பது பருப்பொருள் அன்று; நுண்பொருள். அஃதாவது மருத்துவர் கற்ற கல்விப்பொருள், கேள்விப்பொருள், பட்டறிவுப் பொருள் என்னும் இவற்றால் தேவைப்பட்ட நோய் நீங்குகிறது. இதற்கு மருத்துவரிடமிருந்து அவரின் கல்வியையோ, கேள்வியையோ, பட்டறிவையோ, நோயாளி பெறவில்லை. இவற்றைப் பெற்றால் நோயாளி மருத்துவனாக ஆகிவிட வேண்டும்; ஆவதில்லை. தன் பணத்திற்கு மாற்றுப் பொருளாக – செல்வமாக எதைப் பெறுகிறான்? மருத்துவன் அறிவின், கல்வியின், பட்டறிவின் உதவியை, அஃதாவது பணியைப் பெறுகிறான்.

இவ்வகையில் மருத்துவரின் பணி என்னும் அருவப் பொருள் மாற்றாகப் பெறப்பட்ட செல்வம் ஆகிறது. இந்தச் செல்வ அறிவியலின்படி,

கண்டுபிடிக்கப்பட்ட காப்புரிமை (Patent)

நூலாசிரியரின் மதிப்பூதியவுரிமை (Copy Right)

ஒருபொருளின் நன்மதிப்பு (Goodwill) என்னும் இவையும் இன்றையச் செல்வ அறிவியலின்படி செல்வங்களேயாகும்.

இக்கால இவ்வறிவியலைத் திருவள்ளுவரின் செல்வம் தொடர்பான அடைமொழிக் குறட்சொற்களில் காண முடிகிறது.

கல்விச் செல்வம், கேள்விச் செல்வம், வேண்டாமைச் செல்வம், அருட்செல்வம் ஆகிய செல்வங்களுள் ஒவ்வொன்றும் இக்கால செல்வ அறிவியலின் மூன்று இலக்கணங்களையும் பொதிந்தது.

கல்வி, கேள்வி, வேண்டாமை, அருள் இவற்றைக் கொண்டோரின் செயற்பாட்டின் மூலம் நிறைவேற்றப்படுகிறது (1 : இவற்றைக் கொண்டவரின் முழு அளவில் ஓர் பயன்பாடாகிறது (2); ஒருவரிடமிருந்து செயற்பாட்டுப் பயன் மாறுகிறது (3). எனவே, கருத்துப் பொருளாம் இவையும் இக்கால அறிவியலின்படி செல்வங்களாகின்றன. திருவள்ளுவரும் செல்வ அறிவியலாளர் ஆகிறார்.

இக்காலச் ‘செல்வப் பொருளியல்’ நாட்டு அரசாட்சியின் பங்கில் செயலாகும்போது பின்வரும் முறை கொள்ளப்படும்.

பண்டமாற்றுப் பொருளாக நாணயத்தையோ பணத் தாளையோ அரசு வெளியிடும்போது அவற்றின் மதிப்புடைய பொன்னோ, வெள்ளியோ பொருளோ, கடன் ஆவணமோ அரசின் இருப்பில் வைக்கப்படும். அவ்வாறு செய்வதுதான் பணவீக்கத்தை ஏற்படுத்தாது. பண மதிப்பைச் சரியாமல் உரிய மதிப்புள்ளதாக வைத்திருக்கும். (அண்மைக் காலமாக இம்முறை கடைப்பிடிக்கப் பெறாமல் பணவீக்கம் நேர்ந்து பணமதிப்பு குறைந்து வருகிறது).

இவ்வாறு ஒரு நாடு பொருளின் செலாவணிக்கேற்ற இருப்பைப் பெற்றிருக்கவேண்டும். நாட்டின் இலக்கணம் கூறும் திருவள்ளுவர்.

        “பெரும்பொருளால் பெட்டக்கதுஆகி,அருங்கேட்டால்
        
ஆற்ற விளைவது நாடு” (732)

என்று விதித்தார். இக்குறளில், ‘நாட்டிற்குப் பெரும்பொருள் வேண்டும்; அது பெட்டக்கதாக ஆக வேண்டும்’ என்றவை கூர்ந்து காணத்தக்கவை. பெரும் பொருள் என்றது நாட்டு மக்கட்கும், உயிரினங்கட்கும் வேண்டப்படும் பொருள்களின் நிறைவாகும்.

“பெட்டக்கது” என்னும் சொல் திருவள்ளுவரின் தனி ஆக்கச் சொல். இதற்கு ‘விரும்பத்தக்கது’ என்று பொது வான பொருள் கண்டனர். இதற்குத் தனியான ஆழ்ந்த சிறப்புப் பொருள் உண்டு.

‘பெட்பு-தக்கது’ என்பவற்றின் கூட்டுச்சொல் “பெட்டக்கது” “பெட்பு” என்பதற்குப் “போற்றிப் பாதுகாத்தல்” என்பது ஆழ்ந்த பொருள். இப்பொருளை அழுத்தமான சான்றுடன் உறுதிசெய்யவேண்டும். இப்பொருளின் பொதிவை இலக்கியங்களில் காணமுடிகிறது.

கடிய நெடிவேட்டுவன் என்னும் சிற்றரசன் தன்னை நாடிவந்த புலவர் பெருந்தலைச் சாத்தனாரை மதித்துப் போற்றிப் பரிசு வழங்காமல் காலங்கடத்தினான். இதனை விரும்பாத புலவர்,

        “முற்றிய திருவின் மூவர் ஆயினும்
        
பெட்பு இன்றி ஈதல் யாம் வேண்டலமே[24]

என்று பாடினார். ‘முடிமன்னர் மூவேந்தரானாலும் எம்மை மதித்துப் போற்றிப் பாதுகாவாது ஈவதை யாம் விரும்ப மாட்டோம்’ என்றார். இது கொண்டும் ‘பெட்பு’ என்னும் சொல் ‘போற்றிப் பாதுகாக்கும்’ கருத்தைக் கொண்டது என்பதை அறியலாம்.

‘பெட்பு – தக்கது’ எவ்வாறு “பெட்டக்க” தாயிற்று? ‘நட்பு’ என்னும் சொல் ‘நட்டு’ என்று ஆகி ‘நட்பு கொண்டு’ என்னும் பொருளைத் தரும். திருவள்ளுவரும் ‘முகத்தால், நட்புக்கொண்டு’ என்பதை “முகம்நட்டு” (830) என்று பதிந்துள்ளார். நாலடியாரும் நட்ட கால்’ (நட்பு கொண்ட போது) என்பதை “நட்டக்கால்”[25] என்றமைத்தார். இவை போன்றே பெட்பு’ என்பதும் பெட்டு’ என்றாகி, ‘பாதுகாப்பு’ என்னும் பொருளைத் தந்தது.

செல்வத்தைப் பாதுகாப்பாக வைக்க மரத்தால் செய்யப்பட்டதைப் ‘பெட்பு’ (பெட்டு+இ) என்கிறோம். பெரும் மதிப்புடைய செல்வத்தைப் பேணி வைக்கும் பெரும் உறுதியுள்ள பேழையைப் ‘பெட்டகம்’ (பெட்டு-அகம்) என்கிறோம். இங்கெல்லாம் ‘பெட்டு’ என்னும் சொல் ‘போற்றிப் பாதுகாத்தல்’ என்னும் பொருளில் உள்ளது.

இவற்றின் முன்னோடிச் சொல்லாகத் திருவள்ளுவர் ஆக்கிய “பெட்டக்கது” என்னும் சொல் பெரும் செல்வத்தைப் போற்றிப் பாதுகாக்கும் கருத்தைக் கொண்டது.

ஒரு நாடு வளத்தில் நிலைத்திருக்க வேண்டுமானால் பெரும் செல்வத்தால் போற்றிப் பாதுகாக்கப்படவேண்டும். அதற்குப் பெரும் மதிப்புடைய செல்வம் போற்றிப் பாது காக்கப்பட்டு, இருப்பில் அமைய வேண்டும். இது “பெரு பொருளால் டெட்டக்கதாகி” என்பதன் விளக்கமாகும்.

செல்வம் என்பது செலாவணிக்கு உரியது என்றாலும் அதன் மதிப்புடைய பொருள்கள் நாட்டு மக்களுக்குத் தட்டாமல் கிடைக்கவும், அவற்றைப் பெற்றுத்தரும் பண்டமாற்றுப் பொருள்களாகிய நாணயம் முதலியன தம்மதிப்பைக் குறைத்துக் கொள்ளாமலோ கூட்டிக்கொள்ளாமலோ இருக்கவும் மதிப்புடைய செல்வம் நாட்டுக் கருவூல இருப்பாகப் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்னும் இக்கருத்து இக்காலச் செல்வப் பொருளிய’லில் எவ்வாறு மலர்ந்துள்ளது என்பதைக் காண முடிகின்றது.

நாணயத்தையோ பணத்தாளையோ அரசு வெளியிடும் போது அவற்றின் மதிப்புடைய பொன், வெள்ளி முதலிய செல்வப் பொருள்கள் அரசுப் பாதுகாப்புக் கருவூலத்தில் இருப்பாக வேண்டும் என்று விளக்கப்பெற்றது. இச் ‘செல்வ அறிவியல்’ “பெட்டக்கதாகி” என்னும் சொல் லாக்கத்தில் அமைந்துள்ளது. பொருள் போற்றிப் பாதுகாக்கப்படவேண்டியது என்பதை “பொருளாட்சி போற்றாதார்க்கில்லை” (252) என்பதாலும் திருவள்ளுவர் வலியுறுத்தியுள்ளதையும் இங்கு இணைத்துப் பார்க்கலாம். இதனால், திருவள்ளுவம் ‘செல்வப் பொருளிய’லாம். அறிவியலில் விளங்குகின்றது.

பொருளியல் கோட்பாடும் திருவள்ளுவமும்

‘பொருளியல்’ என்னும் இயல் 18ஆம் நூற்றாண்டில் தான் உருப்பெற்றது. இப்பொருளியலின் தந்தை ‘ஆதம் சுமித்து’ என்பார். இவர் காலம் 1723-1790. இவர் வகுத்த பொருளியற் கோட்பாட்டின் அடித்தளக் கோட் பாடுகள் மூன்று அவை :

பொருள்களின் ஆக்கம் (Production)

பண்டமாற்று (Exchange)

பகிர்வு (Distribution)

பின்னர் ஆய்வுகளால் இம்மூன்று பகிர்வுக்கு முன்னர் (Consumption) என்பதும் இணைக்கப்பெற்று நான்காயின.

இவை நான்கும் பொருளியலின் அடித்தளக் கோட் பாடுகள். இவற்றைத் திருவள்ளுவர்,

                “இயற்றலும், ஈட்டலும், காத்தலும், காத்த
                வகுத்தலும் வல்ல தரசு”

என்னும் குறளில் காட்டினார்.

பொருள்களை விளைச்சலால் உண்டாக்குதலும், அவற்றைத் தொகுத்தலும், போற்றிப் பாதுகாப்பாகக் காத்தலும், காத்தவற்றைப் பகிர்ந்து வழங்கலும், வழங்கப்பட்டவை. மாந்தர்க்கோ உயிரினங்களுக்கோ நுகர்வு ஆதலும் ஆகிய நான்கையும் திறமையுடன் செய்வதுதான் ஆட்சி செய்தற்குரிய அரசாகும். இதை அக்கால மன்னர் அரசுக்குக் குறிக்கப்பட்டனவாயினும் இக்கால மக்கள் ஆட்சிக்கும் மாற்ற மின்றிப் பொருந்துகின்றன.

இக்காலப் பொருளியல் நான்கை குறட் கருத்துடன் பொருத்திக் காணுமாறு திருக்குறள் அமைந்துள்ளமை குறிக்கத் தக்கது

வள்ளுவம்பொருளியல்
இயற்றல்ஆக்கம்
ஈட்டல் காத்தல்மாற்று
வகுத்தல்பகிர்வு
வகுத்து வழங்கலும் பெறலும்நுகர்வு

மேலும், பொருளியலின் பல்வகைக் கூறுகளையும் திருவள்ளுவர் தம் திருவள்ளுவத்தில் காட்டியிருக்கின்றார். இவற்றை விரிவாகப் பொருளியல் வல்லுநர் முனைவர் பா. நடராசன் அவர்களும், திருவள்ளுவர் விருதுபெற்ற குறளறிஞர் கு. ச. ஆனந்தன் அவர்களும் நுணுக்கமாகவும் விளக்கமாகவும் எழுதியுள்ளனர்.

அவற்றையும் இணைத்துப் பார்த்தால் திருவள்ளுவம் ‘செல்வப் பொருளிய’விலும் பொருளி அறிவிய’விலும் விளக்கம் பெறுவதை அறியலாம்.

இக்கால ஆங்கில அகரமுதலிகளில் ‘பொருளியல்'(Economics) என்னும் சொல்லுக்குக் காட்டப்பட்டுள்ள பொருள்:

“செல்வத்தின் ஆக்கத்தையும் (இயற்றல்) பங்கீட்டையும் (வகுத்தல்) பற்றிய செயல்முறை நூல்” என்றிருக்கும். இச்செயல்முறை நூலாகத் திருவள்ளுவம் திகழ்கிறது.

இத்தகைய செல்வமாகும் பொருள்கள் பல. அவையாவும் இயற்கையாகவும் செயற்கையாகவும் விளைபவை.

எனவே, செல்வத்தை அடுத்துத் திருவள்ளுவத்தில் விளைவைக் காண்கின்றோம்.

(தொடரும்)

Friday, September 6, 2024

அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 2. அ.4. வந்தபின் தீர்த்தல்-மருத்துவ இயல்

 




(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 2. அ.3. வந்தபின் தீர்த்தல்-மருத்துவ இயல்-தொடர்ச்சி)

பொதுவாக மருத்துவத்தில் நோயாளியின் நிலை அறிவதே முதன்மையானது. நோயாளி நிலை என்பது நோயுள்ள உடல்நிலை மட்டுமன்று; நோயாளியின் மன நிலையுமாகும்.

உடல் நோய் நோயாளிக்குத் தரும் இடையூறு, இடுக்கண் உள்ளத்தைச் சோர்வடையச் செய்யும்; வருத்த வைக்கும்; அச்சத்தை ஏற்படுத்தும்; கலக்கத்தைக் கிள்ளிவிடும். தீர்ப்பான் இம்மனநிலையை உணரவேண்டும்.

முதலில் நோயாளியோ, இயல்பானமாந்தனோ இம் மனத் தாக்கத்தைப் பெறாது அமையும் முறையைக் கையாளவேண்டும் என்பதை எண்ணிய திருவள்ளுவர்.

“மருந்தை எண்ணி அஞ்சாதே! கசக்குமே,

குமட்டுமே என்று கலங்காதே!

மருந்தே வேண்டாம்”

என்று தொடங்கினார். மருந்து வேண்டாம் என்பதைக் கேட்ட நோயாளி முதலில் மன அமைதியைப் பெறுவான். இதனால் நோயாளி மருந்துவத்திற்கு பாங்குபடுத்தப் பட்டவனாவான்.

தொடர்ந்த திருவள்ளுவர் பையப் பைய அவனை நோய் கொள்ளாதிருக்கும் உணர்வில் வைத்து விளக்கி நலத்திற்கு அரண் கோலினார்; நோய் தாக்காதிருக்க வழிகோலினார். வயிற்றுத் தீயெல்லாம் கூறிக் குறிப்பைக் காட்டினார். ‘மிகு உணவு மிகு நோய்’ என்று அறிவுறுத்தினார். இவ்வாறெல்லாம் மாந்தனைப் பாங்குக்குக் கொணர்ந்தார். பின்னர்தான் ‘தீர்ப்பான்’ என்று மன அமைதியை ஊட்டினார். உனக்கு அணுக்கமாக இருந்து துணைநிற்போர் உள்ளனர் என்று ஆறுதல் காட்டினார்; மருந்து கூறினார். அதனையும் மருந்து ஒன்றைக் கூறி விடாமல் நான்கு கூறாகக் கூறி அவற்றில் ஒன்றாகக் கூறினார்.

இவ்வாறு உள்ளத்தைப் பாங்குபடுத்தி உடலின் மருத்திற்கு வருவது இக்கால மருத்துவ அறிவியலாக முன்னர் குறித்த ‘உடலிய உளவிய’லை நாம் நினைவு படுத்திக் கொள்ளவைக்கிறது.

இந்த ‘உடலிய உளவியல்’ தொடர்பில் மேலும் ஒரு திருவள்ளுவரின் மருத்துவ அறிவியலைக் காண இடம் உள்ளது.

அதிர்வு நோய்

நோய், நோய் முற்றிய பிணி, பிணி இடையறாது தொடர்ந்தால் ஒவாப் பிணி என நோய், பிறந்து முதிர்கின்றது. ஒவாப் பிணிக்கு மேலும் பல பிணிகள் உள்ளன. அவற்றில் ஒன்று அதிர்ச்சியால் வரும் நோய். அது நெஞ்சகத் தாக்க நோய். நெஞ்சகத்தில் (இதயத்தில்) குருதி பாயும் குழலில் உள்ளே கொழுப்பு படிந்து படிந்து குருதி பாயும் துளையினை சிறிதாக்கிவிடும். மேலும் கொழுப்பு அடைத்தால் குருதி பாய வழியின்றி முட்டும். திடீரென்று ஒர் அதிர்ச்சி நேரும். குருதிக் குழாய் வெடிக் கும். அதிர்ச்சி நோய் உயிரைப் பிடுங்கிக்கொண்டு போகும். இந்நோயைத் திருவள்ளுவர்,

அதிர வருவது ஓர் நோய்”

என்றார். இந்நோயை நாம் ‘மாரடைப்பு’’ என்கின்றோம்.

நெஞ்சகத்தாக்க நோயாளிகளுக்கு மருத்துவர்கள் கூறும் அடிப்படை அறிவுரை இவை : ‘அதிகம் உணர்ச்சி வயப்படக் கூடாது: சினம் கொள்ளக்கூடாது; உள்ளத்தைச் சீண்டும், அதிர்ச்சிக்குள்ளாக்கும் நிகழ்ச்சிகளில் ஈடுபடக் கூடாது’ என உள்ளம் அமைதியாக இருக்க வேண்டிய அறிவுரை கூறுவர்.

ஆம், உள்ளத்திற்கும் உடலுக்கும் நீங்கா உறவு உண்டு. இந்த உறவு ஒன்றுடன் ஒன்று அரவணைத்துப் போவதாக இருக்கவேண்டும். வேறுபட்டால் உடலுக்கு நோய் வரும். “உடம்பார் அழியின் உயிரார் அழிவார்”. இவ்வாறு உள்ளம் உடல் தொடர்பில் உண்டாகும் நோய்க்கு ‘உளவிய உடலுறுப்புத் தாக்கம்’ (Psycho Somatic) என்று பெயர். விளக்கமாகச் சொன்னால் உள்ளத்தில் நேரும் கவலை, உளைச்சலானால் உடலுறுப்பைத் தாக்கி இளைப்பு, வயிற்றுப்புண் முதலிய நோய்களை உண்டாக்கும் என்பதாகும்.

எனவே, உடல் நோய்க்கு உள்ளமும் காரணமாகிறது. அதே தொடர்பில் நோய்த் தணிப்பிற்கும் அந்த உள்ளமே துணையாகும். என்னுடன் பணியாற்றிய ஆசிரியர்களுள் இங்கு இருவரைக் குறிக்க வேண்டும். இருவரும் நோயாளியர். ஒருவருக்கு ‘இளைப்பு இறுமல்’ (Asthma). நோய். மற்றவருக்கு வயிற்றுப்புண். ஒருநாள் பள்ளிக்கு மாவட்டக் கல்வி அலுவலர் ஆய்விற்கு வந்தார். இளைப்பு நோய்க்காரர் வகுப்பிற்குப் போனார். நலமாக இருந்த ஆசிரியர்க்குத் திடீரென்று ‘இளைப்பு’ வந்துவிட்டது. பையப் பைய முடுகியது. அவ்வலுவலர் வயிற்றுப்புண் ஆசிரியர் இருந்த அறைக்குப் போனார். முறைப்படி ஆய்வு நிகழ்ந்தது. ஆசிரியர் திறமையாகவே செய்தார். வயிற்றுப் புண் தலைகாட்டவில்லை. ஏன்? இருவரும் நோய்கள் கொண்டோர். ஆனால்,

                முன்னவர் உள்ளத்தால் கோழை;

                பின்னவர் உள்ளத்தில் உரம் கொண்டவர்.

நோயின் எழுச்சிக்கு உள்ளம் காரணம் என்பதற்கு இவ்: விருவரும் கண்கண்ட சான்றாகின்றனர்; ‘உளவிய உடல் நோய்’ என்னும் மருத்துவ அறிவியல் திருவள்ளுவத்தில். வெளிப்பட்டுள்ளது.

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை

அதிர வருவதோர் நோய்‘ (429)

இக்குறளில் அதிர வருவதோர் நோய்’ என்று உடலைப் பற்றிய தோய் உள்ளது. “எதிரதாக் காக்கும் அறிவினார்” என்று அறிவு சான்ற உள்ள உறுதியாம் உளவியலும் உள்ளது.

நெஞ்சகத்தாக்க நோய் பெற்றவர் எதிர்காலத்தில் எந்நேரமும் இந்நோய் தலைதுாக்கும் என்று அறிந்திருக்க வேண்டும். அவ்வாறு தலைதுாக்கும்போது எப்படி நடந்து கொள்வது (?) எவ்வாறு காத்துக்கொள்வது (?) என்பவற்றை நினைந்து பார்த்து அறிவால் உணர்ந்திருக்க வேண்டும். நோயைக் கருதிக் கலங்கக் கூடாது; அஞ்சக் கூடாது. நெஞ்சுரம் கொள்ளவேண்டும். நெஞ்சுரம் அடித்தள மருந்தாகும்.

இந்த அடித்தளத்தைக் கொண்டதுடன் நோய்வரின் அதற்கு ஆட்படாமல் அந்நோய் மேலும் முடுகாமல் தன்னைக் காத்துக்கொள்ளும் வழிவகைகளை அறிவில் கொள்ளவேண்டும்.

கொண்டவர் நோய்க் குறிகள் தெரிவதை உணர்வார்.

‘முதுகுப் பக்கம் தோள்பட்டை வலிக்கிறது. மூச்சு இறுக்கம் தோன்றுகிறது; நெஞ்சம் முணு முனு’ என்று வலிக்கிறது. தலை வலிக்கிறது. உடல் வியர்க்கிறது. தலையிலும் வியர்வை தோன்றுகிறது’ என்பவற்றை உணர்வார்; அறிவார். உடனே அஞ்சக்கூடாது; அஞ்சாத கலங்காத உள்ளம் உடையவர் எந்நேரமும் இது வரும் என்று எதிர்பார்த்தவர் ஆவார். மாறாக ‘அய்யோ வலி வருமே மார்பை அடைக்குமே! இறந்து போவோமே” என்று அஞ்சிக் கலங்கினால் உள்ளம் சோர்வடையும்; அதனால் உடலும் சோர்வடையும்; நோய் முடுகும்.

உள்ள உறுதியும்; அறிவுத் தெளிவும் உடையவர் குறிகள் தெரிவிக்கின்றன என்று உரிய மாத்திரைகளைப் போட்டுக்கொள்வார். குளிர்ந்த நீரைத் தலையில் ஊற்றிக் கொள்வார். வலியை திணைக்காமல் வேறு விருப்பமான கருத்தில் மனம் ஊன்றுவார். விரைந்து மருத்துவரிடம் அழைத்துச் செல்லத் தூண்டுவார். இவற்றால் இவர் “எதிரதாக் காக்கும் அறிவினார்” இவரால் அதிரவரும் மாரடைப்பு கட்டுப்படுத்தப்படும். உள்ளம் தளராததால் நோய் தளர்ந்து தோற்கும்.

‘நோயின் வல்லமை நோயாளியின் எதிர்ப்புத் திறமையைப் பொறுத்தது’- என்று இப்போக்கிரேட்டசு அறிவித்தார். இஃது இங்கு நினைவுகூரத் தக்கது.

இவ்வகையில் இக்குறளைக் கொண்டு திருவள்ளுவரை நோக்கினால், இக்கால ‘உளவிய உடல்நோய்’ பற்றிய அறிவியல் கருத்தை அவர் பதிந்துள்ளமை புலனாகும்.

இத்துடன் இணைந்துள்ள ஒரு கருத்தையும் இக்குறள் காட்டுகிறது. அது ‘அதிரவரும் மாரடைப்பு நோயே வராது’ என்பதாகும். இஃதும் மாந்தரின் உளவியல் தொடர்பானது.

எந்த உணர்விலும், செயலிலும் நெஞ்சத்தை அமைதியில் நிறுத்தி எண்ணி ஆராய்ந்து பார்த்தல் வேண்டும். “எண்ணித் துணிக கருமம்” (467) என்றார். ஆழ்ந்து ஆராய்ந்து எண்ணுவது சூழ்ச்சி எனப்படும்.

சூழ்ச்சி முடிவு துணிவெய்தல்” (671) என்றார் திருவள்ளுவர். எண்ணித் துணிதலும், ஆழ்ந்து முடி வெடுத்துத் துணிதலும் எடுத்த செயலை முடித்து வைக்கும் . எதிர்த்து வருபவற்றையும் முறியடிக்கும். இது “எதிரதாக் காக்கும் அறிவு.”

மாந்தன் தன் வாழ்வில் நோய்க்குரியவன்; நோய் வராமல் தடுத்தலுக்கும் உரியவன்; வந்தால் பாதுகாத்த தற்கும் உரியவன். இவற்றிற்கு எதிர்வருபவற்றை முன்னரே எண்ணிப்பார்த்து “எதிரதாக் காக்கும் அறி”வைப் பெறவேண்டும்.

நெஞ்சக நோய். மிகு கொழுப்பினால் வரும். அதனால் மாறுபாடில்லாத உணவு கொள்ளவேண்டும். மாறு பாடுள்ளதை மறுத்து அளவறிந்து உண்ணவேண்டும். வேண்டாத விரைவும் படபடப்பும் கொண்டு உள்ளத்தை அதிர்ச்சிக்கு ஆளாக்கக் கூடாது. இவையாவும் “எதிரதாக் கொள்ளும் அறி”வின் விளைவுகள். இவ்வறிவு “அதிர வருவதோர் நோய்”க்குத் தடை, வராமலே காக்கும் உளவியல் அறிவு இது.

எனவே,

எதிர தாக் காக்கும் அறிவினார்க்கு” மாரடைப்பாம் அதிரவருவதோர் நோய் வராது; இக்கருத்தையும் இக்குறள் பொதிய வைத்துள்ளது. இவ்வகையிலும் திருவள்ளுவர் மருத்துவ அறிவியலின் முன்னோடியாகிறார்.

பிணியின்மை விளக்கி விரிவாக எழுதப்பட்டுள்ளது. காரணம், ‘மருந்து’ என்னும் அதிகாரத்திலுள்ள பத்துக் குறட்பாக்களும் அறிவியல் பாங்கு கொண்டவையாக அமைந்துள்ளன. ஒவ்வொரு சொல்லும் அதற்குச் சான்றாக அமைந்துள்ளது. இதுபோன்று திருவள்ளுவத்தில் பரவலாக அறிவியல் கருத்துகள் பொதிந்திருப்பினும் மருந்து போல முழு அதிகாரம் பெறவில்லை மாந்தர் வாழ்வில் ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.’

(தொடரும்)

Friday, August 30, 2024

அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 2. அ.3. வந்தபின் தீர்த்தல்-மருத்துவ இயல்

 




(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 2. அ.2. பிணியின்மை – தொடர்ச்சி)

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்”  (948)

இக்குறளிலுள்ள “நோய் நாடி” என்றது நோயை நாடிபிடித்து ஓர்ந்து பார்த்து “இன்ன நோய்” என்றறிவது. இஃது இக்கால மருத்துவ அறிவியலில் நோய் காணல் (Diagnosis) எனப்படுகிறது. நோய் முதல் நாடுவது, தமிழ் மருத்துவத்தில் நோய்க்குக் காரணம் “வளி முதலா எண்ணிய மூன்றில் எது” என்று நாடி கொண்டே காணுதல். இஃது இப்போது சிறுநீர், குருதி, மலம் முதலிய ஆய்வுகளாலும் கதிர்ப்படம். கதிர்வீச்சுப்படம் கதிவீச்சுவரி முதலிய படப்பதிவுகளாலும் அறியப்படுகிறது. “அது தணிக்கும் வாய் நாடுவது” முதலில் நோயைக் குறைக்கும் மருந்தைத் தேர்வது. இஃது இக்காலத்தில் மருந்துகளாக மாத்திரை, மேற்பூச்சு, ஊசி, அறுவை, கதிர்ப்பாய்ச்சல் முதலியவற்றில் ஒன்றையோ பலவற்றையோ ஆராய்ந்தறிந்து செய்வது. இதனைத் திருவள்ளுவர் “தணிக்கும்” என்னும் சொல்லால் குறித்தமை கருதத்தக்கது. ஐரோப்பிய மருத்துவத்தில் நோயை உடனே தடுக்கும் முனைப்பான மருந்துகளே வழங்கப்படும். தமிழ்முறையில் முதலில் நோயைக் குறைக்கும் – தணிக்கும் வழியறிந்து உடல் ஏற்கும் அளவான மருந்தை வழங்கும் முறையே கொள்ளப்படும். இஃதே பின் விளைவுகள் இல்லாமல் பையப் பையத் தணித்து முடிவாக நோய் தீர்ந்துபோகச் செய்யும்.

“வாய்ப்பச் செயல்” என்றது பொருந்திய மருந்து கொடுத்தல். இதிலும் நீரிய மருந்து, குழம்பு, அறுத்துச் சுடுதல், பற்று முதலிய கையாளப்பட்டன.

திருவள்ளுவர் அடுத்து மருந்து கொடுக்கும் முன் நோய் பெற்றவனின் உடல் நிலையளவு, நோயின் தாக்க அளவு, நோயின் கால அளவு, இவற்றைக் கருதிப் பார்த்துச் செய்தலைக் குறித்தார். இதனை “உற்றான் அளவும்: பிணியளவும், காலமும் கற்றான் கருதிச் செயல்” (949) என்னும் குறளில் அமைத்தார்.

புதுமை மருத்துவத்தில் நோயாளியின் உடல்’ மருந்தைத் தாங்கும் அல்லது ஏற்கும் நிலை பார்க்கப்படுகிறது. நோயின் கால அளவு உசாவி அறியப்படுகிறது . எடுத்துக்காட்டாகக் கண்பார்வை நோய் என்றால் அதிலும் ‘நீர் அழுத்த நோய்’ என்றால் நோயாளி நீரிழிவு நோய் உள்ளவரா என்று ஆராய்ந்தறிவர். உள்ளவர் என்றால் எத்துணை காலமாக இருக்கிறது(?) என்பதை உசாவி அறிவர். இந்தக் கால அளவுதான் கணக்கில் கொள்ளப்படும்.

அடுத்து,

“கற்றான் கருதிச் செயல்” என்றதில் ‘கற்றான்’ என்னும் சொல் திருவள்ளுவர் காலத்திலும் அதற்கு முன்பும் மருத்துவக் கல்வி இருந்ததையும் குறிக்கிறது. இக் காலத்தில் மருத்துவக் கல்வி கற்றுத் தேர்ந்து பட்டம் பெற்றவரையும் குறிப்பாகக் காட்டி நிற்கிறது.

நிறைவாக மருத்துவத்தைக் கையாளும்போது இடம் பெறும் நான்கை அடுத்துக் குறித்து முடித்தார். அதனை நான்காகக் குறித்தார்; நான்கு கூறாகக் குறித்தார்.

உற்றவன், தீர்ப்பான், மருந்து, உழைச்செல்வான் என்று

அப்பால் நாற்கூற்றே மருந்து” (950)

திருவள்ளுவ மருத்துவத்தில் இவை நான்கும் நினைவில் நிற்பவை. உற்றவன் – நோய்பெற்ற நோயாளி; தீர்ப்பவன் நோயைத் தீர்க்கும் மருத்துவன்; மருந்து – நோய்க்கு உரிய தூள், நீறு, மாத்திரை, குழம்பு, களிம்பு, மூலிகை முதலியனவும், அறுத்துச் சுடுவதும் அடங்கும். நான்கையும் முறைப்படுத்தி அடுக்கினார்.

இக்கால மருத்துவ நடைமுறையுடன் இவற்றைப் போருத்திப் பார்த்தால் ஒன்றி வருகின்றன.

நோயாளி எக்காலத்தும் நோயாளிதான். சில நோய் களின் புதுமைத் தோற்றம் இருக்கலாம். ஆனால் தீர்ப்பானாம் மருத்துவன் மாறியுள்ளான். இம்மருத்துவனைத் திருவள்ளுவர் “தீர்ப்பான்” என்று தனிப்பொருளுடன் குறித்தார். முன்னே “அது தணிக்கும் வாய்” என்று மருத்துவத் தொடக்கத்தில் தணிப்பதாகக் குறித்தார். தணித்தல்-நோயின் கடுமையைக் குறைத்தல். நோயைத் தணித்து நோயாளியை முதலில் தம் மருத்துவத்திற்குப் பாங்குபடுத்தல், பின்னர் தக்க மருந்தைத் கொடுத்துப் படிப்படியாக நோய் அறவே தீர்ந்து போகும் அளவு செய்தல். எனவே, ‘தீர்ப்பான்’ என்ற சொல்லால் மருத்துவத்தின் பொருள் அழுத்தம் புலனாகிறது. இவ்வாறு ‘தீர்ப்பவன்’தான் மருத்துவத்திற்கு உயிரூட்டமளிப்பவன் இதற்கு ‘மருத்துவன்’ என்னும் சொல் ஈடாகாது. மருத்துவன் என்பதற்கு, மருத்துவம் செய்பவன்’, ‘மருந்து கொடுப்பவன்’ எனத்தான் பொருள். இவன், மருந்தைத் தேர்பவன் தீர்ப்பவன்தான் மருந்தின் உயிரோட்டத்தால் நோயாளியின் உயிரோட்டத்தை இயக்குபவன்-இயங்க வைப்பவன். இவ்வழுத்தமுள்ள ‘தீர்ப்பான்’ என்னும் சொல் திருவள்ளுவரின் மருத்துவ ஆக்கச் சொல். இந்தச் சொல்லும் திருவள்ளுவரின் மருத்துவ அறிவியலைப் புலனாக்குகிறது.

அடுத்து ‘மருந்து’ என்றார். இஃது இயற்கை மூலிகையையும், நிலம்தரும் முப்பு’ என்னும் நீற்றையும்’ செயற்கைக் கலவை, புடம் போடுவது, வடித்தெடுப்பது’ அரைத்தெடுப்பது முதலியவற்றையும் குறிக்கும், இம் மருந்துதான் நோய் தீர்க்க இன்றியமையாதது. என்றாலும், மற்ற மூன்றும் அமைந்தால்தான் இம்மருந்து உரிய பயனை உரிய காலத்தில் தரும். எனவே, நான்கு கூறுகளில் ஒன்றாக மருந்தைக் குறித்தார்.

நான்காவதாக “உழைச் செல்வான்” குறிக்கப் பட்டான். இவன் நோயாளியின் அணுக்கன். உடனிருந்து உரிய நேரத்தில் உரியவற்றைச் செய்து துணை நிற்பவன். இக்காலத்தில் இதனை மகளிர் பெருமளவில் செய்கின்றனர். இன்னோர் ‘செவிலியர்’ எனப்படுகின்றனர். தமிழ் அகப் பொருள் இலக்கியங்களில் பெற்றெடுத்த தாய் ‘நற்றாய்’ எனப்படுவாள். அணுக்கமாக இருந்து போற்றி வளர்க்கும் தாய் ‘செவிலித்தாய்’ எனப்படுவாள். இச்செவிலித்தாய் போன்றவர் செவிலியர். மேலை மருத்துவத்தில் இச்செவிலியர் முறை முன்னரே இருப்பினும் அதனை முறை யாக்கி நிறைவாக்கிய பெருமை 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நைட்டிங்கேள் என்னும் பெருமகளையே சார்ந்தது. இவ்வம்மையால்தான் மருத்துவத்தில் செவிலித் தொண்டு முறைப்படுத்தப் பெற்றது.

இது திருவள்ளுவரால் கி. மு. முதல் நூற்றாண்டில் முறைப்படுத்திக் கூறப்பட்டுள்ளமை மருத்துவ அறிவியலின் அணுக்கத்தைக் காட்டுகிறது.

மருந்தை கூறத் துவங்கியவர் இதன் முதற் குறளாக “மிகினும் குறையினும் நோய் செய்யும்” என்று நோய்க்குக் காரணத்தைக் காட்டி அடுத்து, மருந்து பற்றித் தொடங்கினார்.

அதன் தொடக்கம் “மருந்து என வேண்டாவாம்’. என்றதைக் கண்டோம். ‘மருந்து’ என்னும் சொல்லுடன் தொடங்கினார். நிறைவான பத்தாவது குறளில், “அப்பால் நாற்கூற்றே மருந்து” என்று நிறைவேற்றினார். ‘மருந்து’ என்று தொடங்கி மருந்து என்று நிறை வேற்றியமை ஒரு சொல்லமைப்பு நயம் மட்டும் அன்று: இவ்வமைப்பில் உள்ள ஆழ்ந்த கருத்து வெளிப்படுத்தக்கது

முதலில் “மருந்து என வேண்டாவாம்” என்று மருந்து வேண்டாம் என்றார். நிறைவில்

“அப்பால் நாற்கூற்றே மருந்து” என்று மருந்து வேண்டுவதைக் குறித்தார். வேண்டா என்றவர் ‘வேண்டும்’ என்றது முரணா? அரணா? இரண்டில் எது என்று அறிய இக்கால அறிவியல் துறை ஒன்றைக் காண வேண்டும்.

உடலிய உளவியல்

அறிவியல் துறைகளில் ‘உளவியல்’ (Psychology) ஒன்று. இதன் ஒரு கூறாக ‘உடலிய உளவியல்’ (Physiological Psychology) உள்ளது. இஃது ‘உள்ளத்தின் உணர்விற்கும் உடலின் செயற்பாட்டிற்கும் உறவு உண்டு’ என்னும் கருத்தைக் கொண்டதாகும்.

உள்ளத்தில் தோன்றும் மகிழ்ச்சி உடலின் நலத்திற்குக் துணை செய்யும். உள்ளத்தில் தோன்றும் தொய்வோ கலக்கமோ, அதிர்ச்சியோ உடலின் தொய்விற்கும் தாக்கத்திற்கும் துணையாகும். இஃது ‘உடலிய’ உளவியலின் கோட்பாடு.

மருந்து-வேண்டாம்-வேண்டும்

இக்கோட்பாட்டின் முன்னோடி அறிகுறிதான் “மருந்து என வேண்டா” என்றதும் “நாற்கூற்றே மருந்து” என்றதும் ஆகும். “மருந்தென வேண்டா” என்றது உளவியல் அறிந்த பாங்கு மருந்துவேண்டும் என்றது உடலியலும் நோயியலும் செறிந்த செய்முறைக் கருத்து

(தொடரும்)

கோவை. இளஞ்சேரன், அறிவியல் திருவள்ளுவம்