வலு தரும் கல்தாமரை
கல்தாமரை மலைப்பகுதியில் வளரும் ஒருவகை கொடி இனமாகும். இதன் இலை
தாமரை இலை வடிவில் இருப்பதாலும், மலை, கல் நிறைந்த பகுதிகளில் அதிகம்
வளர்வதாலும் இதை கல்தாமரை என்கின்றனர். ஆனால் தாமரை இலையை விட சிறியதாகவும்
தடித்தும் இருக்கும்.இதன் இலை மிகுந்த மருத்துவப் பயன் கொண்டது. சித்தா,
ஆயுர்வேத மருத்துவ முறைகளில் அதிகமாக உபயோகப்படுத்தப்பட்டு
வருகிறது.உட்கொள்ளும் மருந்துகள், வெளிப்பூச்சு மருந்துகள் மற்றும் தைல
வகைகளில் அதிகம் சேர்க்கப்படுகிறது. இது கார்ப்புச் சுவை கொண்டது.
உடல் வலுப்பெற:
உடல் வலுப்பெற்றால் நோய்கள் ஏதும் அணுகாமல் பாதுகாக்க முடியும். சுவர்
இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்ற பழமொழிக்கேற்ப உடல் நன்கு
பலமாக ஆரோக்கியமாக இருந்தால்தான் சிறந்த வாழ்வைப் பெற முடியும். இத்தகைய
உடலை வலுப்பெறச் செய்ய கல்தாமரை இலையை நிழலில் உலர்த்தி பொடித்து
வைத்துக்கொண்டு காலை, மாலை என இருவேளையும் 5 கிராம் அளவு எடுத்து தேன்
கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும். அல்லது காய்ந்த கல்தாமரை
இலையின் பொடியை நீரில் கொதிக்கவைத்து பனை வெல்லம் கலந்து அருந்தலாம்.
இவ்வாறு 48 நாட்கள் அருந்தி வந்தால் உடல் வலுப்பெறும். இளைத்த உடல் தேறும்
இடுப்பு வலி தோள்பட்டை வலி நீங்க:
இன்றைய நவீன உணவு மாறுபாட்டாலும், போதிய உற்பயிற்சியின்மையாலும்
சிலருக்கு மிகக் குறைந்த வயதிலே கழுத்துவலி, இடுப்பு வலி, மூட்டு வலி, என
உண்டாகிறது. இப்படி கை, கால், முட்டுகளில் வலி உண்டாவதற்குக் காரணம்
மூட்டுத் தேய்மானம் என்பார்கள். இதனைப் போக்க கல்தாமரை சிறந்த மருந்து.
கல்தாமரை இலைகளை நிழலில் காயவைத்து கஷாயம் செய்து அருந்தி, கல்தாமரை இலைகள்
சேர்க்கப்பட்ட வெளிப்பூச்சு எண்ணெய்களை பாதிக்கப்பட்ட பகுதிகளில் பூசி
வந்தால் மேற்கண்ட பாதிப்புகள் நீங்கும்.
நரம்புகள் வலுப்பெற:
நரம்புகளில் நீர் கோர்த்துக்கொண்டு நரம்பு வறட்சி உண்டானால் அது
நரம்புப் பாதிப்பை உண்டுபண்ணும். இதனால் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள்
ஏற்படும். இத்தகைய குறையைப் போக்கி நரம்புகளை வலுவடையச் செய்ய கல்தாமரையிலை
கஷாயம் செய்து அருந்தி வருவது நல்லது. அல்லது கல்தாமரை இலை பொடியில் தேன்
கலந்து அருந்தலாம்.
ஆண்மை பெருக:
இன்றைய பொருளாதார சூழ்நிலையால் மன அழுத்தம் உண்டாகி பலருக்கு
வீரியக்குறைவு உண்டாகிறது. குழந்தைப்பேறு இன்றி தவிக்கின்றனர். சிலர்
திருமணத்திற்குப் பின் வீரியக் குறைவால் அவதிப்படுகின்றனர். இக்குறையைப்
போக்க பல விளம்பரங்களைத் தேடி அவர்கள் கொடுக்கும் மருந்துகளை உண்டும்
பயனில்லாமல் வேதனையுறுகின்றனர். இவர்கள், கல்தாமரை இலைப் பொடியை பாலில்
கலந்து இரவு உணவுக்குப்பின் 48 நாட்கள் அருந்தி வந்தால் வீரியக் குறைவு
நீங்கி ஆண்மை பெருகும்.
சருமத்தைப் பாதுகாக்க:
கல்தாமரை இலையை சிறிதாக நறுக்கி நீர் விட்டு அரைத்து, சொறி, சிரங்கு,
கரப்பான் உள்ள இடங்களில் பூசி வந்தால் மேற்கண்ட நோய்கள் நீங்கும்.