Sunday, April 2, 2023

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 671- 676

 








( தமிழ்ச்சொல்லாக்கம் 663- 670 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 671 – 676

(சொல்மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்புகி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளனமொழி மாற்றச் சொல்லும்சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

671.  பூவராகம் (பிள்ளை) – நிலப்பன்றி (1930)

1929-ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உருப்பெற்றது. அக்கழகத்தின் புலவர் பயிற்சிக் கல்லூரியும் புகுமுக வகுப்பும் தில்லையில் இருந்தன. 1930ஆம் ஆண்டில் பூவராகனார், இக்கல்லூரிகளின் ஆசிரியராக அமர்ந்து திறமையாகப் போதனை புரிந்தார். பிறகு 1938ஆம் ஆண்டில் புலவர் வகுப்புகட்கு ஆசிரியரானார்.

பூவராகனார் சிறந்த அறிவாளியாக விளங்கினாலும் பெருமிதத்தை மேற்கொண்டவரல்லர். அடக்கத்தையும் அமைதியையும் அணிகலனாகக் கொண்டிருந்தார். எப்பொழுதும் நூல்களைப் படிப்பதே இவருக்கு இனிமையான பொழுதுபோக்கு. மாணவர்கள் பலவகையாக இருப்பர். சிலர் ஆசிரியர்களைக் கேலி செய்பவர்களாகி விளங்குதலும் உண்டு. பூவரானாருடைய மாணவர்கள் அவருடைய பெயரைத் தமிழில் மொழி பெயர்த்து நிலப்பன்றி என்று கூறுதலும் உண்டு.

நூல்        :               தமிழ்ப் புலவர் வரிசை (1955)

(பன்னிரண்டாம் புத்தகம்) பக்கங்கள் : 92, 93

நூலாசிரியர்         :               சு. அ. இராமசாமிப் புலவர்

672. Protein       –              முதலுணா

673. Fat                –              கொழுப்புணா

674. Carbo Hydrates      –              இனிப்புணா

675. Salts            –              உப்புணா

676. Water         –              நீருணா

விளக்கத்தில்  முதலுணா (Protien), கொழுப்புணா (Fats), இனிப்புணா (Carbo hydrates), உப்புணா  (Salts), நீருணா (Water) எனக் குறிக்கப்பட்டுள்ளன. உணவைக்குறிக்கும் உரை என்ற சொல் எங்கும் பயன்படுத்தப்படவில்ல. எனவே இவை  அச்சுப்பிழைகளே.

இவற்றில் தொடர்ந்து முதலுலைப் பொருள், கொழுப்புரை, இனிப்புரை,  நீருணாரவோ என அச்சுப்பிழைகளும் உள்ளன. இவை திருத்தப்பட்டு இங்கே குறிக்கப்பட்டுள்ளன.

மக்கள் ஊனுண்ணுதற்குரிய உணவுப் பொருட் கூறுகள் ஐந்து வகைப்படும். அவை முதலுணா (Protien), கொழுப்புணா (Fats), இனிப்புணா (Carbo hydrates), உப்புணா  (Salts), நீருணா (Water) என்பன.

இவற்றில் முதலுணாப் பொருள் நரம்பையும் தசை நாரையும் மூளையையும் நன்கு வலுவேற்றி வளர்க்கும்.

கொழுப்புணா உடம்பின் கொழுப்பு, கொழுப்பின் றொடர் என்பவற்றை வளர்ப்பது மன்றி உடம்பிற்குச் சூட்டினையும் தரும்.

இனிப்புணா யென்பது கொழுப்புணாவை யொப்ப உடம்பின் கொழுப்பை நன்கு வளர்க்குமாயினும், அதனினும் அஃது உடம்புக்கு வேண்டுஞ் சூட்டினைப் போதுமான வளவு தருவதில் மிகவும் பயன்படா நிற்கின்றது.

உடம்பு நிலை பெறுவதற்கு முதன்மையான கருவிகளாயுள்ள செந்நீரையும் எலும்புகளையும் நன்கு வளர்த்து வலுவேற்றுவது உப்புனாவின் இயல்பு; மேலும் அவ்வுணா உடம்பின் வளர்ச்சிக்கு ஏதுவான சுண்ணம், காந்தமண், உவர்க்காரம், சாம்பருப்பு முதலான மட்பொருட் கூறுகளையும் விளைத்திடுகின்றது.

இனி நீருணாவோவெனின் உடம்பின் செந்நீர்க்கு மிகவும் பயன்பட்டு ஏனை எல்லாப் பண்டங்களிலும் பொருந்தி அவை உடம்பின் கண் செல்லுதற்குப் பெரிதுந் துணை புரிவதாகும்.

நூல்        :               ஏன் புலால் மறுத்தல் வேண்டும்? (1930)

நூலாசிரியர்         :               பண்டிதர் பாலசுந்தரம் பிள்ளை பக்கங்கள் : 16, 17

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Sunday, March 26, 2023

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 663 -670

 




( தமிழ்ச்சொல்லாக்கம் 654-662 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 663- 670

(சொல்மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்புகி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளனமொழி மாற்றச் சொல்லும்சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

663. பிரதமை திதி               –              முதல்நாள்

664. துவிதியை திதி            –              இரண்டாம் நாள்

665. திரிதியை திதி              –              மூன்றாம் நாள்

666. சதுர்த்திய திதி             –              நான்காம் நாள்

667. பஞ்சமி திதி –              ஐந்தாம் நாள்

668. சசுட்டி திதி  –              ஆறாம் நாள்

முருகன் வரத்தில் அசுரர்கள் பிறந்து தேவர்களுக்கிடுக்கண் செய்வதையொழிக்க சிவன் தனது மனையாளிடம் மோகிக்குங்கால் அவர் கண் வழியாக ஐப்பசி மாத பூர்வசத்துப் பிரதமை திதியில் (முதல்நாள்) காமமாகிய வீரியந் தோன்றிற்று. அந்த விந்தே துவிதியை திதியில் (இரண்டாம் நாள்) பார்வதி கருப்பையிற் செலுத்தப்பட்டது. அதே விந்து திதியைத் திதியில் (மூன்றாம்நாள்) பார்வதி கருப்பையிலிருந்தெடுத்து, அக்கினி பகவானிடம் கொடுக்க அவனந்த அசுசியை வகித்திருந்து சதுர்த்திய திதியில் (நான்காம் நாள்) கங்கை நதியில் எறிந்துவிட, கங்கை நதி அக்கலிதத்தைச் சரவண குட்டையில் ஒதுக்கிவிட அவைகள் ஆறு குழந்தைகளாக அக்குழந்தைகளுக்குப் பஞ்சமி திதியில் (ஐந்தாம் நாள்) கிருத்திகா தேவிகளால் பாலூட்டி உயிர் நிறுத்த சசுட்டி திதியில் (ஆறாம் நாள்) பார்வதி தன் கணவனுடன் வந்து அந்த ஆறு குழந்தைகளையும் அந்தக் குளத்திலிருந்து சேர்த்தெடுக்க ஆறு தலைகளும், பன்னிரு புசங்களும், உடல் ஒன்றும் கால்களிரண்டுமாய்த் திரண்டு விட்டதாம். இந்த இயல்பலாத  பிறப்புடையவன்தான் ஆறுமுகனாம்.

நூல்        :               சிரீ ஆறுமுகக் கடவுள் வரலாறு முதற்பதிப்பு (1930) பக்கம் – 27

நூலாசிரியர்         :               க. அயோத்திதாசு பண்டிதர்

669. Desert – விளைவிலாப் படுநிலம்

முருகன் பிறந்தது இமயமலை கங்கை நதி யோரத்துச் சரவண குளமாயிருக்க, வானலோக மேறுந்திடன் முருகனுக்கேதோ? பார்ப்பார் மத விட்ணு விளைவிலாப் படுநிலமுள்ள (Indian Desert) ஆரிய வர்த்தனமென்னும் வைகுந்த ஊராகிய (இ)ராசபுத்தானா வருகிலும், பிரமன் பருமா தேசத்திலும், சிவன் காசுமீர் தேசத்திற்குச் சிறிது வடகிழக்கில் சுமார் நூற்றுஐம்பது மைல் தூரமுள்ள கைலை மலை குகையிலு மிருந்தார்க ளென்றால், தேவேந்திரன் வானலோகத்திலிருந்திருப்பானா? அல்லது அமராவதி ஆற்றோர மிருந்திருப்பானா? வென்று நீங்களே நினைத்துப் பாருங்கள்.

நூல்        :               சிரீ ஆறுமுகக் கடவுள் வரலாறு முதற்பதிப்பு (1930) பக்கம் – 30

நூலாசிரியர்         :               க. அயோத்திதாசு பண்டிதர்

670. Magic Lantern — படக்காட்சிக் கருவிகள்

சொற்பொழிவாளர்கள் பலரை அமைத்து அவர்கட்குத் தக்க ஊதியங்கள் அளித்து இச்சென்னை நகரின் மட்டுமேயல்லாமற் சென்னை மாகாண முழுமையும் அளவிலாச் சொற்பொழிவுகள் அங்கங்கும் நிகழ்த்தி நம்மவர்களைப் புலால் மறுக்கும்படி செய்தல் வேண்டும். விரிவுரைகட்குப் படக்காட்சிக் கருவிகளும் (Magic Lantern) பயன்படுத்துதல் வேண்டும்.

நூல்        :               ஏன் புலால் மறுத்தல் வேண்டும்? (1930) ஒரு வேண்டுகோள் – மேலட்டையின் மூன்றாம் பக்கம்

நூலாசிரியர்         :               பண்டிதர் பாலசுந்தரம் பிள்ளை

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Sunday, March 19, 2023

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 654-662

 




தமிழ்ச்சொல்லாக்கம் 648-653 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 654-662

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. 

கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

654. உத்யானம் – பூத்தோட்டம்

உத்யான பத்திரிகை என்ற வடமொழியில் வெளிவரும் மாத சஞ்சிகை – ஒரே உரூபாய் சந்தாவுள்ள மாத சஞ்சிகை, திருவையாறு என்று கூறப்படும் ஊரிலிருந்து வெளிவரும். இதை ஐந்து ஆறுகளின் மத்தியில் விளங்கும் உன்னதமான உத்யானத்தில் -பூத்தோட்டத்தில் வீசும் வாசனையைக் கிரகித்து வெளிவரும்.

நூல்   :           சுயமரியாதை கண்டன திரட்டு (1929) பக்கம் – 8

கட்டுரையாளர்    :           நாரதர்

சரிகை         –           பொன்நூல் (641 காண்க)

655. சீவன்முத்தர் –           கதிமேலார்

656. மோட்சம்        –           பேராப்பதம்

657. சையோகம்   –           புணர்ச்சி

658. கவிவாணர்   –           பாவலர்

நூல்   :           நளாயினி வெண்பா (1929)

நூலாசிரியர்         :           திருப்பத்துார் கா.அ. சண்முக முதலியார்.

659. City Police – பட்டணக் காவலாளிகள்

1459இல் ஃகுமாயூன் தன் படைகளுடன் கிளர்ச்சித் தலைவனாகிய தெலிங்கானா சமீன்தாரை சயிக்கப் படை எடுத்த போது பீதரில் ஓர் கலகம் நேர்ந்தது. அதை அல்லாவுத்தீன் கேள்வியுற்று பீதர் சென்று பட்டணக் காவலாளிகள் (City Police) இரண்டாயிரம் நபர்களை அசாக்கிரதை என்னும் குற்றத்திற்காகக் கொலை செய்தான்.

இதழ்     :               ஆனந்த போதினி தொகுதி – 15, (15.12.1929) பகுதி – 6 பக்கம் 376

கட்டுரையாளர்  :               கதாரத்ன சே. கிருஷ்ணசாமி சர்மா

*

660. வசனம் – உரைநடை

661. (இ)ரசவாதிகள் – பொன் செய்வோர்

நூல்        :               மதிமோச விளக்கம் (1929)

(நான்காம் பதிப்பு) பக்கம் : 4

மொழியாக்கம்  :               நா. முனிசாமி முதலியார்

(‘ஆனந்த போதினி’ பத்திராதிபர்)

662. அந்தப்புரம் – உள்ளறை

‘அந்தர்’ என்னும் வடமொழித் திரிபு ஆதலால் தற்பவம்.

நூல்        :               நீதிநெறி விளக்கம் மூலமும் விருத்தி உரையும் (1929) பக்கம் : 35

உரையாசிரியர்   :               சோடசாவதானம் தி. சுப்பராய செட்டியார்

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Sunday, March 12, 2023

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 648-653

 




( தமிழ்ச்சொல்லாக்கம் 639- 647தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 648-653

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

648. வசனம் – உரை நடை

ரசவாதிகள் – பொன் செய்வோர்

649. காபிரைட் – உரிமை

நூல்   :           மதிமோச விளக்கம் (1929) நான்காம் பதிப்பு

நூலாசிரியர்         :           தூசி. இரா ச கோபால பூபதி பக்கம் : 4 நான்காம் பதிப்பின் முன்னுரை

எழுதியவர் :           நா. முனிசாமி முதலியார் –

(ஆனந்த போதினி பத்திராதிபர்)

650. அமிர்தம் – சாவா மருந்து

651. சரிகை – பொன் நூல்

நூல்   :           நளாயினி வெண்பா (1929), பக். 4, 28

நூலாசிரியர்         :           திருப்பத்தூர் சா. அ. சண்முக முதலியார்

652. Blotting Paper – ஒட்டுத்தாள்

குதிரைப் பந்தயத்தில் பணங்கட்டி, தோல்வியடைந்து, கையில் வண்டிச் சத்தமும் இன்றி நடந்து வீடு நோக்கி வரும்போது தோற்றுப்போன பெருந் தொகையை எண்ணி எண்ணி கண்ணீர்விடும் உத்தமர்களின் கண்ணீரை (பிளாட்டிங் பேபரால் ) ஒட்டுத்தாளால் துடைக்க ஓர் ஆள் தேவை. அந்த ஆளுக்குக் குதிரைப் பந்தயத்தார் சம்பளந் தருவார்கள். விருப்பமானவர்கள் பந்தயக் குதிரையின் மூலம் மனு கொடுத்துக் கொள்ளவும்.

இதழ் :           ஆனந்த வி ச ய விகடன் (1928, ஏப்பிரல்) தாய் – 1 பிள்ளை – 3 – பாக்கட் விகடங்கள் – பக்கம் – 93

ஆசிரியர்    :           விகடகவி பூதூர், வைத்திய நாதையர்

653. கிருட்ணன் – கறுப்பன்

இவர்கள் இராமாயணத்தைப் பற்றி எடுத்துக் கூறும் கதையைக் குருடன் கனா என்று கூறலாம். அவர்கள் கதை கீழ்வருமாறெல்லாம் போகிறது.

இராமாயணம் தமிழ்க்கதை ; தமிழன் கதை. அக்கதை திராவிடர் இந்தியாவிற்கு வந்த கதையே. குரங்குகள் எனப்படுவோர், தமிழர்க்கு முன் இந்நாட்டில் வாழ்ந்த குடிகள். இராமன் திராவிடன், தமிழன். அவன் பெயரும் தனித் தமிழ். இராமன் என்பதில் இரா என்பது இரவு, இரும்பு, இருந்தை, இரு, இருமண் முதலியவற்றைப் போலக் கருமை என்பதைக் குறிப்பதாகும். மன் என்பது ஆண்பால் விகுதி. ஆகவே, இராமன் என்ற சொல், கருநிறமுடைய பெருமானைக் குறிக்கின்றது. இராமனது நிறமும் தமிழர் நிறமன்றோ? தாசுயுக்கள் என்ற திராவிட மக்களின் தலைவனைக் கறுப்பன் (கிருட்ணன்) என்ற பெயர் கொண்டழைத்து அவன் ஆரியர்களை ஆட்டி வைத்த கொடுமையை எடுத்துக் கூறுகின்றது ரிக்வேதம். ஆகவே கண்ணன் இராமன் என்பன தமிழ்க்கடவுளின் பெயர்கள், தமிழ்த்தலைவரின் பெயர்கள். அன்றியும், திருமால் தமிழ்க்கடவுள் அன்றோ? முல்லை நிலத்தில் வாழ்ந்த தமிழ்மக்கள் அவரைத்தானே வழிபட்டு வந்தனர்.

நூல்   :           சுயமரியாதை கண்டன திரட்டு (1929) பக்கம் – 6

கட்டுரையாளர்    :           தெ.பொ. மீனாட்சி சுந்தரம் பிள்ளை, எம்.ஏ., பி.எல். எம். எல். சி.

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Sunday, March 5, 2023

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 639-647



( தமிழ்ச்சொல்லாக்கம் 621-638 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 639- 647

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

639. கோசித்தல்   –           ஆரவாரித்தல்

640. சிவலிங்கம்   –           அருட்குறி

641. விருத்தபுரி    –           பழம்பதி

642. விமோசனம் –           நீங்குதல்

            திருப்புனவாயிற் புராணம் (1928) (திருவாரூர் தியாகராச கவிராச தேசிகர் இயற்றியது)

அரும்பதவுரை     :           தூத்துக்குடி பொ. முத்தைய பிள்ளை

643. lmmoveables    –           இயங்காப் பொருள்

644. Terrace   –           மேன்மாடி

645. Screen    –           திரைச்சீலை, இடுதிரை

646. Change  –           சிதறின தொகை

நூல்   :           இளைஞர் தமிழ்க் கையகராதி (1928)

தொகுத்தவர்        :           மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை ஈ.எல்.எம்.எம்

மேல்நிலைப் பள்ளித் தமிழாசிரியர், சென்னை)

647. திலகர் – சிறந்தவர்

நூல்   :           திவ்விய சூரி சரிதம் (1929)

(தமிழ் மொழி பெயர்ப்பு)

நூலாசிரியர்         :           உ. வே. திரு. வீ. சாமி ஐயங்கார் பக்கம் : 4

எட்டயபுரம் சமசுத்தான வித்வான்)

+++ கவிஞர் சுரதா ‘சுண்டல்’ என்ற பெயரில் ஒரு பத்திரிகை துவங்கத் திட்டமிட்டிருக்கிறார். – பால்யூ

இதழ் : குமுதம் +++

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

அகரமுதல