Sunday, June 22, 2025

வெருளி நோய்கள் 6 – 10 : இலக்குவனார் திருவள்ளுவன்

     23 June 2025      கரமுதல



(வெருளி நோய்கள் தொடர்ச்சி)

6. ‘ஆண் குறி ‘/’penis’ சொல் வெருளி – Yinjingphobia

‘ஆண் குறி’ /’penis’ சொல் குறித்த வரம்பற்ற பேரச்சம் ஆண் குறி /’penis’  சொல் வெருளி.

மறைவுறுப்புப் பெயர்களைப் பொதுவிடங்களில் சொல்லுதல், அவற்றைப் படித்தல், பிறர் சொல்லக் கேட்டல் முதலியவற்றால்  அருவருப்பு அடைவோர் இவ்வெருளிக்கு ஆளாகின்றனர்.

ஆண் குறி தொடர்பாகக் கெட்ட வார்த்தைகள் எனச் சொல்லப்படுவன வழக்கத்தில் உள்ளன. அவற்றை அறிந்தவர்கள் அவற்றில் பொருத்தமான ஒன்றை இங்கே கருதிப்பார்த்துக் கொள்க. அறியாதவர்கள் அது குறித்துப் பொருட்படுத்த வேண்டா. இங்கே குறிப்பிட்டவாறு ஆண்குறி என்னும் பொதுவான சொல்லையே பயன்படுத்தி அறிக.

00

7.‘ஆம்’ / ‘yes’ சொல் வெருளி – Itaphobia

‘ஆம்’ / ‘yes’ சொல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘ஆம்’ / ‘yes’ சொல் வெருளி.

பலருக்கும் “ஆமாம், சாமி!”  போடுபவர்களைப் பார்த்தால் பிடிக்காது. எரிச்சல் வரும். இத்தகையோருள் சிலர் ஆம் என்னும் சொல்லைக் கேட்டாலே அளவுகடந்த பேரச்சம் கொள்கின்றனர்.

00

8.  ஆர்’/’R’ எழுத்து வெருளி – Rhophobia

‘ஆர்’/’R’ எழுத்து  தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘ஆ’/’R’ எழுத்து வெருளி.

00

9. ‘இசட் / Z’ எழுத்து வெருளி – Zetaphobia

‘இசட் / Z’ எழுத்து தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘இசட் / Z’ எழுத்து வெருளி.

00

10. ‘இல்லை’ / ‘ain’t’ சொல் வெருளி – Wuophobia 

‘இல்லை’ / ’ain’t’ சொல் குறித்த வரம்பற்ற பேரச்சம் ‘இல்லை’ / ‘ain’t’ சொல் வெருளி.

ஆங்கில வட்டாரப் பேச்சில், am not, is not, are not, has not,have not எனச் சொல்லப்படுவனவற்றின் குறுக்கமே ain’t. சில வட்டார வழக்கில் do not, does not, and did not என்றும் இப்போதைய சில வழக்குகளில்  to be not, to have not, and to do not என்றும் சொல்லப்படுவனவற்றின் குறுக்கம்.

00

(தொடரும் )

Tuesday, May 6, 2025

தாழிமரம் அறிவோமா? – bonsai – அன்றே சொன்னார்கள் 14 (விரிவு)

 




தொட்டிகளில் வளர்க்கும் குறுமர வகைகளை நாம் போன்சாய் என்கிறோம். போன்சாய் என்பது சப்பானியச் சொல். போன் என்பது சிறு பானையைக் குறிக்கும்; சாய் என்பது செடியைக் குறிக்கும். சீன மொழியில் பென்(ஞ்)சாய் எனப்படுகிறது. சிறு தொட்டிகளில் வளர்க்கும் செடி வகைகளைச் சீனர்கள் 6 ஆம் நூற்றாண்டில் வளர்த்து வந்திருக்கலாம் எனப் படங்கள் மூலம் அறிய வருகிறோம். எனினும் சப்பானில் 11 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னரே போன்சாய் அறிமுகமாகியுள்ளது. 19 ஆம் நூற்றாண்டில் இம்முறை உலகெங்கும் பரவியது. ஆங்கிலத்தில் சிறுவகை மரங்களை (miniature) இவ்வாறு வளர்ப்பதையும் போன்சாய் என்றே குறிப்பிடுகின்றனர். என்ற போதிலும் நாவலந்தீவு என்று அழைக்கப் பெற்ற இன்றைய இந்தியாவில் இமயமலைப் பகுதியில் மருத்துவர்கள் மருந்துச் செடியைச் சிறு பானைகளில் வளர்த்து வந்த முறையே சீனாவிற்குப் பரவியது என்றும் சொல்லுவர்.


நம் நிலப்பகுதி முழுவதும் தமிழ்நாடாக இருந்த பொழுது இம்முறை தோன்றியிருக்கலாம்.

  தாழிமுதல் கலித்த கோழிலைப் பருத்தி

(அகநானூறு 129.7 ) எனத் தாழியில் வளர்ந்துள்ள கொழுவிய இலையையுடைய பருத்தியைப் பற்றிக் குடவாயில் கீரத்தனார் என்னும் புலவர் கூறுகிறார்.

தலைவியைக் காணாமல் தாழியில் வளர்த்த குவளைச் செடியின் மலர் வாடியது குறித்துத்

  தாழிக்குவளை வாடுமலர் 

என அகநானூறு (165.11) கூறுகிறது.

கொடிவகைகளை உயரமான தாழியில் வளர்த்துள்ளனர் என்பது

  ஓங்கும்நிலைத் தாழி மல்கச் சார்த்தி
குடைஅடை நீரின் மடையினள் எடுத்த
பந்தர் வயலை பந்துஎறிந்து ஆடி

எனப் புலவர் கயமனார் கூறுவதில் இருந்து (அகநானூறு 275:1-3) அறியலாம்.


உயர்ந்த தாழியில் நிறைய வைத்துப் பனங்குடையால் நீரை மொண்டு ஊற்றி வளர்த்த வயலைக்கொடி படர்ந்த பந்தலின் கீழே பந்தை எறிந்து ஆடுவது குறித்து இதில் கூறப்பட்டுள்ளது.


நீர்வளம் இல்லாத பாலை நிலைத்தில் இவ்வாறு தாழியில் மண் இட்டு நீர் வார்த்துச் செடியை வளர்த்துள்ளனர்.


தோட்டவியலில் சிறந்திருந்த தமிழர் பானை அல்லது தாழியில் செடி வளர்க்கும் முறையை உலகிற்கு அறிமுகப்படுத்தினர் எனலாம்.

Friday, November 1, 2024

அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 9. 6. அரண் ஏமம்

 


(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 8. 5. இனநல ஏமம்- தொடர்ச்சி

)

  1. அரண் ஏமம்
    ஏமம் தனியொருவருக்கும், குமுகாயத்திற்கும் இரண்டையும் உள்ளடக்கிய நாட்டிற்கும் இன்றியமையாதது. நாட்டிற்கு ஏமமாவன பல. அவற்றுள் “அரண் ஒரு ஏமம். அரண் என்றாலே பாதுகாப்பு- ஏமம் என்று தான் பொருள். இது கடல், கோட்டை, மலை முதலியவற்றிற்கு ஆகுபெயராக அமைந்தது.
    நாட்டைச் சூழ்ந்த கடல், மண்ணில் கட்டிய கோட்டை, இயற்கை மலை, பின்னிச் செறிந்து விளங்கும் இயற்கைக் காடு ஆகியனவெல்லாம் நாட்டிற்குப் பாதுகாப்பாக உள்ளமையால் திருவள்ளுவர் இவற்றை அரண்’ (742) என்றார்.
    இக்காலத்தில் போர்க்கருவிகள் பெரும் அழிவை விரைவில் ஏற்படுத்தக் கூடியன. வானவூர்தி வழித் தாக்குதலும், பீச்சிப்பாயும் பாய்விகளும் (Rockets), அணு குண்டும் பெருகிவரும் நிலையில் மேலே கூறப்பட்ட அரண்கள் வலுவிழந்தன ஆகலாம். ஆனாலும், இவையும் பாதுகாப்பளித்து வருகின்றன. கடல் அரணாக இருப் பதால்தான் போர்க்கப்பல்களும், நீர்மூழ்கிக் கப்பல்களும் உள்ளன. இன்றும் யாழ்ப்பாணத்து நகரின் எல்லையில் ஒரு கோட்டை உள்ளது. இதற்குள் சிங்களப்படையினர் தங்கிப் புலிகளுடன் மோதி வருகின்றனர். இவ்வகையில் இன்றும் கோட்டை ஏமமாக உள்ளது. இயற்கையான இமயமலை இன்னும் இந்திய நாட்டிற்கு ஏமமாக உள்ளது. யாழ்ப்பாணத்துப் புலிகளுக்கு அங்குள்ள அடர்ந்த காடுகளே ஏமமாக உள்ளன. தீமையே செய்யும் சந்தனக் கட்டைக் கடத்தல் மன்னன் வீரப்பனுக்குச் செறிந்த காடுகளே ஏமம்; தீமைக்கு ஏமமாயினும் அவனளவிற்கு அரண் தான்.
    அக்காலத்துக் கோட்டை அரண் தன் உள்ளேயே பெரும் வெட்டவெளியிடத்தைக் கொண்டது; கோட்டையில் சிறு சிறு பதுங்கு அறைகள் ‘ஞாயிறு'[28] என்னும் பெயரில் சிறு காப்பிடம் அமைந்திருக்கும். அதற்குள் பதுங்கியிருந்து தாக்குவர்.
    இக்காலத்திலும் போரின்போது ’பதுங்கு குழிகள்’ அமைக்கப்படுகின்றன. இவற்றில் போர்வீரர்கள் மறைந்திருந்து தாக்குகின்றனர். இவ்வமைப்பை அறிந்த பகைப் படையினர் எந்த இடத்தில் எந்த நேரத்தில் தாக்குதல் வருமோ என்று எதிர்பார்க்கும் கலக்கத்தில் போர் ஊக்கத்தையும் இழப்பர். இதனையும் உள்ளடக்கியே திருவள்ளுவர்,
    சிறுகாப்பிற் பேரிடத்த தாகி, உறுபகை
    ஊக்கம் அழிப்பது அரண்
    ”(744)
    என்றார்.
    அரண் பற்றி மற்றொரு குறள் காட்டும் உண்மை இக்காலத்தில் அண்மையில் பாரசீக வளைகுடாப் போரின் போது வெளிப்பட்டது.
    ஈராக்கு நாட்டு வல்லாட்சியர் சதாம் என்பவர் அண்டைச் சிறுநாடான குவைத்தை ஆட்படுத்திக் கொண்டார். இதனால் போர் மூளும் என்று எதிர்பார்க்க அவர் தம் நாட்டில் நிலத்திற்கடியில் ஒரு கோட்டையை உருவாக்கினார். அஃது ஒரு நகர் போன்றே அனைத்து நலங்களையும், வளங்களையும் கொண்டதாக அமைக்கப்பெற்றது. வல்லமை வாய்ந்த நிலத்தடி அரண்தான் அது. ஆனாலும், சதாம் உலகநல நாடுகளின் தாக்குதலால் பெருந்தோல்வி கண்டார். அவர் அமைத்த நிலத்தடி நகரும் ஏமத்தைத் தரவில்லை. அது மிக மாட்சிமை மிக்கதுதான். ஆயினும், ஏமமாகவில்லை. காரணம், சதாம் செய்த வேண்டாத தீமைகளால் அவர் செய்த செயல்கள்-வினைகள் மாட்சிமை அற்றவையாயின.
    எனை மாட்சித் தாகியக் கண்ணும், வினைமாட்சி
    இல்லார்கண் இல்லது அரண்”

    (750)
    என்ற குறள் கருத்துதான் வென்றது. வினைமாட்சியின்மையால் வல்ல அரணும் “இல்லது அரண்”. ஆயிற்று.
    இவ்வாறெல்லாம் இக்காலப் போர்முறை அறிவியலிலும், மக்களின் வாழ்வியல் அறிவியலிலும் திருவள்ளுவர்தம் கருத்துக்கள் நிழலாடுகின்றன. அறிவியல்களின் தொலை நோக்குப் படமாகத் திருவள்ளுவம் பதியப்பட்டுள்ளது.
    இதுவரை,
    எடுத்து விரித்த விளக்கங்களால் திருவள்ளுவர் வழங்கிய திருக்குறள்.
    ”அறிவியலும் திருவள்ளுவம்” என்பது புலனாக்கப்பட்டது.
    இதற்கு அடிதளமாக,

++
ஃ திருவள்ளுவரை அறிவியற் கவிஞராகக் கண்டோம்
ஃ ”யாம்” என்று நம்முடன் நேருக்கு நேர் பேசித் திருவள்ளுவர் காட்சி தந்தார்.
ஃ அப்பெருமகனாரின் பட்டறிவுப் பேச்சு குடும்பத்தையும், தனிமாத்தப் பண்பாட்டையும், குமுகாயத்தையும் அளவிட்டுக் காட்டியது.
ஃ ”அறிவறிந்த” என்னும் ஒருசொல் அறிவியல் சொல்லாகப் பளிச்சிட்டுக் காட்டப்பெற்றது
ஃ அறிவியலில் ஓர் இயலான வானவியல் ஒரு குறளின் இரு தொடர்களில் பொதிந்துள்ளமை நயப்பில் நம்மை நிறுத்தியது.

இவற்றால் அமைந்த அடித்தளப் பாங்குடன், ”பிணியின்மை என்று துவங்கும் ஒரு குறளை நிலைக் களமாக்கி

ஃ நாட்டிற்கு அழகாகும் ஐந்தின் ஒளிக்குறட்பாக்களை விரிவுரையாக்கி,
ஃ அவற்றுள்
ஃ நோயியல், உணவியல்,
ஃ மருத்துவ இயல், உடலிய உளவியல், பொருளியல், நிலத்தியல்;
ஃ உளவியம், உளப்பகுப்பியல்:
ஃ கல்வியியல், அரசியல், குமுகாயவியல்
ஃ கட்சி அரசியல், போர்முனை இயல், வாழ்வியல்
-எனும் பதினான்குடன் முன் காணப்பட்ட வானவியலுமாகக் கூடிப் பதினைந்து இயல்களின் உள்ளீட்டுக் கருத்துக்கள் முன்னோட்டமாகவும் தொலை நோக்காகவும் அமைந்ததைக் கொண்டு உண்மையாகின்றது.
அறிவியல் திருவள்ளுவம்

  1. ↑ மதுரைத் தமிழாசிரியர் செங்குன்றுார்க்கிழார், இறையனார், ஆசிரியர் நல்லந்துவனார்
    -திருவள்ளுவமாலை.
  2. ↑ மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்
    -மணிமேகலை-22-61
  3. ↑ சுப்பிரமணியபாரதி, சி.
  • பாரதி கட்டுரை கலைகள் .
  1. ↑ திருஞான சம்பந்தர் -தேவா, பிரமபுரம்

  2. நல்லத்துவனார் -பரிபாடல்-6-8
  3. ↑ காரியாசன் : சிருபஞ்சமூலம் – 12
  4. ↑ இளம்பெருவழுதியார் : பரிபாடல்-15-49.
  5. ↑ சொல்லன் அழிசி: குறுந்தொகை – 138 – 3
  6. ↑ பரஞ்சோதி முனிவர்: திருவிளை – இந்திரன் பழிதீர்த்த படலம்- 74- 1.
  7. ↑ அடியார்க்கு நல்லார்: சிலம்பு உரைப்பாயிரம்.
  8. ↑ மாங்குடி மருதனார்: மது. கா. 191.
  9. ↑ பெருங்குன்றுார் கிழார்: பதி: பதிகம்-9-11.
  10. ↑ காரியாசான்: சிறுபஞ்சமூலம்: 91-1.
  11. ↑ 1. சிவவாக்கியர் : சிவ : 203
  12. ↑ கடியலூர் உருத்திரங்கண்ணனார் :
    பெரும்பாணா: 28
  13. ↑ கபிலர் : புறம் : 110-2
  14. ↑ கடுவன் இளவெயினனார் : பரி : 7-18, 19
  15. ↑ தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் : புறம் : 72-5
  16. ↑ இளங்கோவடிகள் : சிலம்பு : வழக்குரை-67,69
  17. ↑ தேரையர் : தேரையர் கரிசல்
  18. ↑ திருநாவுக்கரசர் : தேவாரம்
  19. ↑ கணைக்கால் இரும்பொறை : புறம் : 74-5
  20. ↑ கணிமேதையார் : ஏலா : 57-2
  21. ↑ பெருந்தலைச் சாத்தனார்: புறம்: 205-2
  22. ↑ நாலடியார்: நாலடி: 75-1
  23. ↑ தொல்காப்பியர் : தொல் : பொருள்-247
  24. ↑ கோவூர் கிழார் : புறம் : 68-10
  25. ↑ மாங்குடி மருதனார் : மது. கா : 66

நிறைவு

அறவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன்

Tuesday, October 29, 2024

அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 8. 5. இனநல ஏமம்

 




(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 7 உ.3. கல்வி ஏமம், 4.கேண்மை ஏமம்- தொடர்ச்சி)

நட்பாம் கேண்மை போன்றது இனம். இங்கு இனம் என்றால் ஒருவருடன் அவருக்கு இனமாக அஃதாவது துணையாகக் கூடியிருப்பவரைக் குறிக்கும். சாதி என்பதை அன்று. கேண்மை இருவர் தொடர்ந்து ஒன்றிப் பழகுவது. இனம் கூடியிருப்பது; தொடராமலும் அமையும். நட்பு இடையறாத் தொடர்பு, இனம் ஒரு கூட்டு; செயற் பாட்டிற்குத் துணையாக உதவுவதும் பழகுவதும் இனமாதல் ஆகும்.

நட்பில் தீநட்பும் உண்டு; கேண்மையில் புன்கேண்மையும் உண்டு. இனத்திலும் நல்லினமும் உண்டு; தீயினமும் உண்டு. இதனைத் திருவள்ளுவர்,

             “நல்லினத்தின் ஊங்குங் துணையில்லைதீயினத்தின்
             
அல்லல் படுப்பது உம் இல்” (460)

என்ற குறளில் காட்டினார். இத்துடன், நல்லினம் துணையாகும் (பாதுகாப்பாகும்), தீயினம் அல்லல் தரும் என்று ‘இன நல ஏம’த்தைக் குறித்தார்.

பெரியாரைத் துணைக்கோடல்’ என்னும் அதிகாரத் தால் நல்லினத்தின் நலத்தையும் சிற்றினஞ் சேராமை’யால் தீயினத்தின் தீமையையும் விளக்கினார். ‘சிற்றினஞ் சேராமை”யாம் எதிர்மறையில் நல்லினத்தில் ஏமத்தை அழுத்தமாக விரித்தார்.

மக்கட் கூட்டம் இலக்கியங்களில் ‘மன்பதை’[27] எனப் படும். அதனைத்தான் ‘சமுதாயம்’ என்கின்றனர். தமிழில் ‘குமுகாயம்’ என்று குறிக்கின்றோம். குமுகாய அமைப்பு இந்த இனநலத்தால்தான் உருவாகிறது. இன மாகக் கூடுவது தனியொருவர்க்கும் வேண்டியது; பொது மக்களுக்கும் வேண்டியது; நாட்டிற்கும் வேண்டியது. இனநலத்தால் அந்நலம் பெற்றவரோ, நாடோ ஏமம் பெறும். திருவள்ளுவர்.

இனம் என்னும் ஏமம்” (306) என்று இனத்தையே ‘ஏமம்’ என்றார்.

ஆன்று அவிந்து அடங்கிய சான்றோர்க்கும் ‘இனநலம்’ ஒரு பாதுகாப்பு. சான்றோர்க்கு மனநலம் நன்றாக அமைந்திருக்கும். ஆயினும்,

          “மனநலம் நன்குடைய ஆயினும் சான்றோர்க்கு
          
இனகலம் ஏமாப்பு உடைத்து” (458)

சான்றோனாயினும் பொதுமக்களில் ஒருவனாயினும் உயிரோடு வாழும் வாழ்வு இம்மை வாழ்வு. உயிர் போனாலும் அவன் வாழ்நாளில் பெற்ற புகழ் உலகில் நின்று நிலவும். அப்புகழ் வாழ்வு அவனது மறுமை வாழ்வு. அண்ணல் காந்தியடிகள், வள்ளலார், பெரியார், சவகர்லால் தேரு, அறிஞர் அண்ணா முதலியோர் இயற்கை யெய்தினாலும் இன்றும் மக்கள் நெஞ்சில் புகழுடன் வாழ்கின்றனர். இவ்வாழ்வு அன்னாரின் மறுமை வாழ்வு. இந்த மறுமையைத்தான் திருவள்ளுவர் “உளதாகும் சாக்காடு” (235) என்றார். மறுமை வாழ்வு எவ்வாறு தொடர்கின்றது? அவர்களோடு நல்லினமாக இருந்தோர் இன்றும் வாழ்வதாலும், அவர்தம் கொள்கைகளை ஏற்று அவர்களுக்கு இன்றும் நல்லினமாக உள்ளோர் வாழ் வதாலும் மறுமை வாழ்வு நீடிக்கிறது. இவ்வகையில் இனநலம் மறுமை வாழ்விற்கும் ஏமம் ஆவது, இது,

“மனநலத்தின் ஆகும் மறுமை; மற்றஃதும்
இனநலத்தின் ஏமாப்பு உடைத்து” (459)

என்னும் குறளில் பதியப்பட்டுள்ளது.

‘இனநலம் ஏமம்’ என்று திருவள்ளுவர் காட்டிய கருத்துகள் குமுகாய அறிவியலில் (Social Science) வெளிப்படுத்தப்பட்டுள்ளமை வியக்கத் தக்கதாகும்.

உயிரினத்தோற்றம் அதன் படிமலர்ச்சி (Evolution)யை ஆய்ந்து ஒரு சட்டகம் அமைத்தவர் தார்வின் என்பார். இவர் கொள்கை தார்வின் கொள்கை’ எனப்படும். இக் கொள்கை வழி ஆய்ந்தோர் பின்வரும் கருத்தை வெளியிட்டனர் :

          “குமுகாயப் படிமலர்ச்சியில் போரும்
          
போட்டியும் வேண்டாதவை அல்ல;
                                                 
முறையானவையே

என்றனர்.

ஆனால், இதனை மேலும் ஆராய்ந்த குமுகாயவியலார் அக்சிலி (Huxley) என்பார் இக்கொள்கை தவறு என்று மறுத்து,

          ‘மாந்தருக்குள் (இனமாகக் கூடும்) கூட்டுறவும்,
          ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வதும்
          குமுகாய நலத்திற்கு உதவும்’
 என்றார்.

இந்தக் குமுகாயவியல் (Social Science) கொள்கை. மேலே கண்ட திருவள்ளுவ இன ஏமக் கருத்தில் மிளிர்கின்றது.

இனம் இல்லாமை – ஏமம்

இனம் ஏமமாவது போன்று இனம் இல்லாமையும் ஏமமாகும். இன்றைய அரசியல் கட்சிகளின் நிலைமை மற்றையக் கட்சியுடனோ, கட்சிகளுடனோ கூட்டு சேர்ந்து தேர்தலில் ஈடுபட வேண்டியுள்ளது. இக்கூட்டு அரசியல் இனம் ஆகும். கூட்டில் கொள்கை ஒற்றுமை, குறிக்கோள் ஒற்றுமை பார்ப்பதும் மறைந்து வருகின்றது. கூட்டு சேர்வது வெற்றிக்கு மட்டும் அன்றிக் கட்சிக்கும் ஏமம் ஆக வேண்டும். இதற்கு மாறாக,

‘ஒரு கட்சியுடன் கூட்டு சேராதிருத்தலே வெற்றிக்கும் கட்சிக்கும் ஏமமாக அமையும். காரணம் கூட்டு சேரத் தகுதியின்மை பலவகையால் அமையலாம். அவற்றுள்ளும் இக்காலம் குறிப்பிடத்தக்கதாக ஒரு கட்சியின் தலைமை அதற்குரிய தகுதியைக் கைவிட்டதாகலாம். கட்சித் தலைமை பெருந்தகவான குணம் இல்லாமல் தன் மூப்பு கொண்டதாகுமானால் கூட்டின் ஏமம் குறையும், தலைமையின் தனி வாழ்விலும், பொறுப்பு நடை முறைகளிலும் ஆட்சியில் ஊழல் மலிந்திருப்பது மாகிய குற்றங்கள் பலவாக இருப்பினும் கூட்டின் ஏமம் கெடும்.’

இவ்வாறு இக்காலத்தில் பொதுவாகக் கருதப்படுகிறது. இக்கருத்து நடைமுறைச் செயற்பாட்டிற்கும் பொருந்தும் நிலை உள்ளது.

இந்நிலை பற்றிய திருவள்ளுவரின் கருத்து

குணன் இலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு
இனன் இலனாம் ஏமாப்பு உடைத்து (868)

சள குணமின்மையும் குற்றம் பல உண்மையும் இனம் ஆகாமலே மாற்றாரை ஏமத்தில் வைத்து விடுகின்றன. இக் கருத்து இன்றையக்கட்சி அரசியல் (Partism Political) என்று தோன்றிக் கொண்டிருக்கும் புதுமை அறிவியலின் முன் னோட்ட அடையாளமாகின்றது.

பெண்ணினத்தையும் அடக்கியே திருவள்ளுவர் ஆண்பாலிலேயே அறிவுரையும் கருத்துரையும் வழங்கியுள்ளார். இம்முறையில் இக்குறளிலும் பெண்களையும் குறிப்பிட்டே குறித்துள்ளார். இக்காலத்தில் தலைமை அமைச்சர்களாகவும், முதலமைச்சர்களாகவும் மகளிர் அமர்ந்துள்ளமையால் இஃது இருபாலார்க்கும் உரிய குறளாகும். படிப்போர் நாட்டு நடப்பறிந்து பொருள்கொள்ள வேண்டியுள்ளது. பொதுமறையான திருக்குறட் கருத் துக்கள் திறனாய்வு செய்யப்படும்போது எந்த ஒரு கட்சியையும் பொதுவாகச் சுட்டாது போவதே திறனாய்வுக்கு ஏமமாகும்.

(தொடரும்)

Friday, October 11, 2024

அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 7 உ.3. கல்வி ஏமம், 4.கேண்மை ஏமம்

 




(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 6. உ.ஏமம் தொடர்ச்சி)

                    “ஒரு மைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
                    எழுமையும் ஏமாப்பு உடைத்து’’ (398)

இங்கும் ஒருமை, எழுமை மாந்தப் பருவங்களையே குறிக் கும். ஒரு பருவமாகிய சிறுவன் பருவத்தில் ஒருவன் கற்க வேண்டும். கற்றால் அவனுக்கு அக்கல்வி தொடர்ந்து முதுமை வரை வரும் ஏழு பருவங்களுக்கும் பாதுகாப்பு ஆகும்.

கல்வியால் பெற்ற அறிவுப் பாதுகாப்பு ஆறறிவு மாந்தனை உண்மையில் மாந்தனாக வைத்திருக்கும்.

கல்வியை “எண்என்ப, ஏனை எழுத்து என்ப” (392) என்று இரண்டுள் அடக்கினார். சிறுவன் தன் பருவத்தில் கற்கும் எண், எழுத்து எனும் இவையிரண்டும் அவன் வாழ் நாள் வரை கல்விக்கும், செயலுக்கும், வாழ்விற்கும் அடித்தளமாக நின்று அவன் அறிவையும், அறிவார்ந்த வாழ்வையும், அவற்றால் அவனையும் பாதுகாக்கின்றன. முதற் பருவத்தில் சிறுவன் ‘அ, ஆ, இ…… ‘ என எழுத்துகளையும், ‘1,2,3……0’ என எண்களையும் கற்கிறான். இவன் அவ்வாறே அவனது ஏழு பருவங்களுக்கும் துணை. யாக நிற்கின்றன. துணையாக நின்று அவன் மொழியறிவையும், கணக்கறிவையும் பாதுகாத்து ஏமம் செய்கின்றன.

எழுத்து நிலையிலும் எண்நிலையிலும் மட்டுமல்லாமல் குறியீடுகளாகவும் துணையாகின்றன. எழுத்துகளே எண்களாக உதவுகின்றன. தமிழில்,

க—1, உ—2, ரு—5, எ—7, அ—8, ய—10,

ள—100, வ—கால் (¼), தெ—முக்கால் (¾)

வத—முந்திரி, அத—1000 என்றெல்லாம் குறியீடுகளாகத் துணைநின்று ஏமமாகின்றன.

ஆங்கிலத்தில் தேற்ற வாய்பாடாக,

AB3 BC2+CA2 -என்றெல்லாம் எழுத்தும் எண்ணுமாக முன் பருவத்தில் கற்கப்பட்டவை, பின் பருவங்களில் குறியீடுகளாக நின்று அறிவிற்கு ஏமமாகின்றன. பல கண்டுபிடிப்புகளுக்கு அடித்தளக் குறியீடுகளாக உதவி ஏமமாகின்றன.

இக்காலக் குழந்தைக் கல்வி மழலையிலேயே தொடங்குகின்றது. இக்குழந்தைக் கல்விமுறையில் கிண்டர்கார்டன் முறையை அறிஞர் புரோபெல் என்பார் அமைத்தார். மாண்டிசோரி அம்மையார் அமைத்த முறை அவர் பெயரால் நடந்துவருகின்றது. முதற் சிறுவன் பருவத்தில் விளையாட்டுச் செயலறிவோடு கூடிய கல்வியை இவை தருகின்றன. இம்முதற்பருவக் கல்வி முதுமைப் பருவம் முடிய அவனை அறிதிறன் (Intelligence), உடையவனாக்கி அவனுக்கு ஏமமாகின்றது.

குழந்தையின் அறிதிறனை ஆய்ந்தவர் கலிபோர்னியா நாட்டுப் பேராசிரியர் பினே (Binet) என்பவர். இவர்,

‘குழந்தைப் பருவத்தில் உள்ள அறிதிறன் செப்பமாக்கப் பெற்றால் அது அவன் வாழ்நாள் வரை அவனைப் பாதுகாக்கும்’ என்று கண்டறிந்தார்.

மற்றொரு பேராசிரியர் தெருமென் (Dermen) என்பார் தம் ஆய்வில்,

‘குழந்தைகள் வளர்ந்த பின்னர், தாம் குழந்தைப் பருவத்தில் பெற்ற அறிதிறனால் உலகப்புகழ் அடைவர்’ என்று கண்டறிந்தார்.

இக்காலத்தில் கண்டறியப்பட்ட கல்வி அறிவியல் (Educational Science) மிக எளிமையாக எழுமையும் ஏமாப்பு உடைத்து” என்னும் தொடரில் பொதிந்துள்ளது.

மேற்கண்டவற்றால் கல்வி ஓர் ஏமம் ஆகிறது.

கல்வி ஓர் ஏமத் தொடர்பில்

கல்வியறிவுடையார் அதன் வலிமையால் பல வகையில் ஏமம் ஆவார். அவற்றுள் ஒன்று அவரை நட்பாக கேண்மையாகக் கொள்ளல். இதனை,

“மூத்த அறிவுடையார் கேண்மை” (441) என்றார்.

இவ்வகைக் கல்வி ஏமத்தொடர்பில் ‘கேண்மை ஏமம்’ தொடர்கின்றது.

கேண்மை என்பதற்கு நட்பு என்பது பொருள். நட்பினும் அழுத்தமானது கேண்மை.

கேண்மை தனியொருவர்க்கும் வேண்டும்; நாட்டிற்கும் வேண்டும். கேண்மையின் சிறப்பான பயன், தன்னைத் தழுவியவருக்குத்தான் ஏமமாக அமைவது. அவ்வாறு ஏமம் தராத கேண்மை கொள்ள வேண்டாத ஒன்றாகும். இதனைத் திருவள்ளுவர்,

‘ஏமம் சாராக் கேண்மை’ என்று பொதுவில் குறிக்க வேண்டியவர், இதற்கு ஓர் அழுத்தம் கொடுக்க எண்ணி,

“ஏமம் சாராச் சிறியவர் புன்கேண்மை” என்றார். சிறியவரும் கேண்மை செய்வார். ஆனால், அது “புன்கேண்மை’; ஏமம் செய்யாது. இதனை

“எய்தலின் எய்தாமை நன்று” (815) என்று முடித்தார்.

எனவே புன்கேண்மை ஏமம் ஆகாது.

நல்ல கேண்மை ஏமம் ஆகும்.

இக்கருத்து திருக்குறளில் ‘அரசியல்’ என்னும் இயலில் உள்ளது.

இக்காலம் அரசியல் அறிவியல் (Political Science) நாட்டிற்கு இன்றியமையாததாகத் தோன்றியுள்ளது. கேண்மை ஏமத்திற்கு இன்றைய உலகத்தில் அரசாட்சி நடப்பில் நல்ல சான்றைக் கண்டு வருகிறோம்.

உலகத்து நாடுகளில் சில கூட்டுசேரா நாடுகளாக உள்ளன. இருப்பினும் தெற்காசிய நாடுகள் கேண்மை கொண்டு ஒரு கூட்டாக சார்க் (Saarc) என்னும் அமைப்பை ஏற்படுத்தியுள்ளன. ஏழு நாடுகள் இக்கூட்டு நாடுகள். இந்திய நாட்டுடன் இதில் பாக்கித்தானமும் உள்ளது. இக்கூட்டில் கேண்மை கொண்டிருக்கிறது பாக்கித்தான். ஆனால் இக்கேண்மையில் இருந்து கொண்டே இந்திய நாட்டிற்கு எதிரான கீழறுப்பு வேலைகளில் ஈடுபடுகிறது. காசுமீரத்தில் கமுக்கமாகக் குண்டர்களை அனுப்பிக் கொலை, கொள்ளை, கலவரம் செய்து அம்மாநில மக்களின் ஏமத்தைக் குலைக்கிறது. பம்பாயில் குண்டுகள் வெடிக்கக் காரணமாகி அந்நகர்ப் பாதுகாப்பில் கலக்கம் ஏற்படுத்தியது.

‘சார்க்’கில் கேண்மை உண்டு;

அமுக்கச் செயலால் ஏமம் இல்லை;

இதனால் கேண்மை என்பதே புன்கேண்மையாகிறது.’ நாம் கண்ணால் காணும் இந்த அரசியல் அறிவியலில் முன் னோடிப் பதிவாகத் திருவள்ளுவத்தை

(கேண்மை)

              “செய்து ஏமம் சாராச் சிறியவர் புன்கேண்மை
              எய்தலின் எய்தாமை நன்று” (815)

என்று பேசவைத்தார் திருவள்ளுவர். பாக்கித்தானத்தின் கேண்மை பெறுவதைவிடப் பெறாதிருத்தலே நல்லது என்று நம் நாட்டு மக்கள் எண்ணவேண்டி நேர்ந்துள்ளது.

திருவள்ளுவர் தொலைநோக்காகக் கருதியது போன்று பாக்கித்தானின் இந்தக் கேண்மையை

இனம்போன்று இனமல்லார் கேண்மை” (822) என்றார்.

கேண்மையில் இனத்தாரும் உள்ளனர்;

இனம் அல்லாதாரும் உள்ளனர்.

இவ்விரண்டையும் அடுத்துக் காணலாம்.

(தொடரும்)