Friday, October 31, 2025

வெருளி நோய்கள் 614-618: இலக்குவனார் திருவள்ளுவன்



(வெருளி நோய்கள் 609-613: தொடர்ச்சி)

வரிசையில் கடைசியில் இருப்பது குறித்த அளவுகடந்த பேரச்சம் கடை நிலை வெருளி.

கடையில் பொருள் வாங்க அல்லது பயணச்சீட்டு வாங்க அல்லது திரைப்படச் சீட்டு வாங்க அல்லது இதுபோன்ற சூழலில் வரிசையின் கடைசியில் இருப்பதால் தனக்குக் கிடைக்க வேண்டிய பொருள் தீர்ந்து கிடைக்காமல் போய்விடும்,  தனக்கு உரிய வாய்ப்பு வராமல் போய்விடும் என்பன போன்ற கவலைகளுக்கு ஆட்பட்டு அளவுகடந்த பேரச்சம் கொள்கின்றனர்.

Omega என்பது கிரேக்க நெடுங்கணக்கின் கடைசி எழுத்து. எனவே,  தொடரின் முடிவு, வளர்ச்சி முடிவு, வரிசை முடிவு முதலியவற்றைக் குறிக்கிறது.

காண்க: கடைசி எழுத்து வெருளி – Zzzzzzphobia/ Zzzzphobia/Zzzzzphobia

ஆங்கில நெடுங்கணக்கில் இசட்டு/Z கடைசி எழுத்து என்பதால் அதைக் குறிப்பிட்டுக் கடைசிநிலை வெருளியை Zzzzphobia/Zzzzzphobia எனக் குறித்துள்ளனர்.

00

 கடை வளாகம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கடை வளாக வெருளி.

Arcade என்பது வளைவுகளால் மூடப்பெற்று இரு மருங்கிலும் நடைபாதைகள் உடைய கடைப்பகுதியைக் குறிக்கிறது.  எனவே, கடை வளாகம் எனலாம். கேளிக்கைப் பூங்காக்கள் அடுத்தடுத்து அமைந்தாலும் வளாகம்தான். எனினும் இதனைப் பூங்கா வளாகம் எனலாம்.

எந்தக் கடைக்குச் செல்வது அல்லது எந்தக் கடையில் வாங்கலாம், குறைந்த விலையில் தரமானபொருள்கள் கிடைக்குமா? என்பன போன்ற சிந்தனைகளுக்கு உள்ளாகிக் கடை வளாகம் மீது பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.

00

கடைக்குச் செல்வதுபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் கடைசெல் வெருளி.

Officina என்னும் இலத்தீன் சொல் பொருள் கடை எனப் பொருள்.

00

கட்சிமாறுநர் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கட்சி மாறல் வெருளி.

ovi என்றால் முட்டை ஓடு எனப் பொருள். எனவே, முட்டை வெருளி எனப் பொருள் கொண்டு சிலர் விளக்கம் அளித்துள்ளனர். ஆனால் முட்டை வெருளி (ovophobia) எனத் தனியாக உள்ளது. புதிய வெருளிகளை வரையறுத்துள்ள திம் (Tim Lihoreau) வெற்றி அணியின் பக்கம் தாவுதல் குறித்த அச்சம் (fear of jumping on the bandwagon) என்கிறார். தேர்தலில் கூடப் பெரும்பாலான மக்கள் எந்தக் கட்சி வெற்றி பெறும் எனச் சொல்லப்படுகிறதோ அக்கட்சிக்குத்தான் வாக்களிப்பர். வெற்றி அணி அல்லது புகழணி பக்கம் இருந்து ஒரு வேளை அது தோற்றால் என்ன ஆகும் என்ற அச்சம் வருவதை இவர் குறிப்பிடுகிறார். தேர்தலில் மட்டுமல்ல ஆட்சி அமைக்கும் பொழுது ஏற்படும் சிக்கல்களில் எந்தப்பக்கம் இருந்தால் ஆதாயம் எனக் கணக்கிட்டுத் தாவும் மக்கள் மன்ற உறுப்பினர்களும் எங்கும் உள்ளனர். அவர்களுக்கும்  இந்த வெருளி வரலாம்.

இதனைக் கொடும் அச்சம் (cruel fear) என்கிறார் திம் (Tim Lihoreau). அந்த அளவிற்கு என்ன கொடும் அச்சம் இதனால் வருகிறது எனத் தெரியவில்லை. ஒரு வேளை தான் சாரும் அணி தோல்வியைத் தழுவி எதிர்காலமே இருண்டுபோகும் என்ற அச்சத்தைத்தான் கொடும் அச்சம் என்கிறார் போலும்.

00

பொது இடங்களில் கட்டடங்கள் திடீரென்று எழும்பியுள்ளதைப் பார்க்கும் பொழுது வரும் அளவுகடந்த பேரச்சம் கட்டட வெருளி 

திடீர்க் கட்டட வெருளி என்பதைத்தான் சுருக்கமாகக் கட்டட வெருளி எனலாம்.

சென்னை மவுலிவாக்கத்தில் கட்டுமானப் பணியில் இருந்த அடுக்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது போன்ற செய்திகளை அறிய வருவோர் கட்டடம் தொடர்பிலான அச்சத்திற்கு ஆளாகின்றனர்

இலத்தீனில் subito என்றால் திடீர் என்றும் turris என்றால் கோபுரம் என்றும் பொருள்.

00

(தொடரும்)

வெருளி நோய்கள் 609-613: இலக்குவனார் திருவள்ளுவன்



(வெருளி நோய்கள் 604-608: தொடர்ச்சி)

சிலருக்குக் கடிகாரம் அல்லது கைக்கடிகாரம் மீது தேவையற்ற அச்சம் ஏற்படும். இதுவே கடிகாரவெருளி.

கடிகாரம் காலம் காட்டும் கருவி. குறித்த நேரத்தில் வேலையைச் செய்ய வேண்டும், செய்து முடிக்க  வேண்டும் என்பதை நேரம்காட்டி உணர்த்துவது கடிகாரம். அவ்வாறு செய்யாமல் காலம் தாழ்த்தும் பொழுதும் உரிய காலத்தில் செய்யத் தவறியதைச் சுட்டிக்காட்டுவதும் கடிகாரம்தான். இதனால் சிலர் கடிகாரம் காலமுடிவை – இறப்பை உணர்த்துவதாக எண்ணி அஞ்சுவதும் உண்டு.

chrono என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் நேரம். ment  என்னும் இலத்தீன் சொல்லிற்கு வழிமுறை எனப் பொருள்.

Roloi என்னும் கிரேக்கச் சொல்லிற்குக் கடிகாரம் எனப் பொருள்.

00

கடினப் பொருள்கள் மீது ஏற்படும் அளவுகடந்த பேரச்சம் கடினப் பொருள் வெருளி.

இதனை வன்பொருள் வெருளி என்று சொன்னால், இப்போது தவறுதலாகக் கணிணி துறையில் கருவியத்தை(Hard ware) வன்பொருள் என்தால் குழப்பம் வரும்.

00

ஊர்திகள் மிகு விரைவாகச் செல்வது தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கடுகதி வெருளி.

கடுகதி=high speed, மிகு வேகம்.

(வே > வேகு >)வேகம் தமிழ்ச்சொல்லே!

00

கடுகு தொடர்பான அளவு கடந்த பேரச்சம் கடுகு வெருளி.

எண்ணற்ற மருத்துவப் பயன்கள் கொண்டது கடுகு. எனவேதான் கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்றனர்.  கடுகைமிகுதியாகப் பயன்படுத்துவதால் வரும் சில தீமைகளை எண்ணிக்கடுகு மீது தேவையற்ற அளவுகடந்த பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.

00

கடைசி எழுத்து வரிசையைக் கொண்டு தொடங்கும் சொல் மீதான அளவுகடந்த பேரச்சம் கடைசி எழுத்து அடுக்குத் தொடக்க வெருளி > கடைசி எழுத்து வெருளி.

Zzzz  என்றால் கொச்சை வழக்கில் தூக்கம் என்றும் குறட்டை என்றும் பொருள். அதனால் இவ்வாறு தொடங்கும் சொற்கள் மீது வெறுப்பும் பேரச்சமும் கொள்கின்றனர்.

தமிழில் கடைசி எழுத்தான ‘ன்’ சொல்லின் முதல் எழுத்தாக வராது. எனவே, சிக்கல் இல்லை. ஆங்கிலத்தில் கடைசி எழுத்தான  என்பதைக் கொண்டு Zzzz  எனத் தொடங்கும் சில சொற்கள் உள்ளன. Zzzz  என்றால் கொச்சை வழக்கில் தூக்கம் என்றும் குறட்டை என்றும் பொருள். அதனால் இவ்வாறு தொடங்கும் சொற்கள் மீது வெறுப்பும் பேரச்சமும் கொள்கின்றனர். கடைசி எழுத்து முதல் எழுத்தாகத் தொடங்கக்கூடிய சொற்கள் உள்ள மொழியினருக்கும் இவ்வெருளி வரலாம்.

யாரோ ஒருவருக்கோ இருவருக்கோ இத்தகைய பேரச்சம் வந்திருக்கலாம். எனினும் இதை ஒரு வகைப்பாட்டாகச் சேர்த்துள்ளனர்.

00

(தொடரும்)

வெருளி நோய்கள் 604-608: இலக்குவனார் திருவள்ளுவன்



(வெருளி நோய்கள் 599-603: தொடர்ச்சி)

கடற்கன்னிபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் கடற்கன்னி வெருளி.

serene என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் கடற்கன்னி

00

கடற்குதிரை அல்லது பனிக்கடல் யானை(walrus) என அழைக்கப்பெறும் கடல் வாழ் உயிரி மீதான அளவு கடந்த பேரச்சம் கடற்குதிரை வெருளி.

இதனைக் கடல் சிங்கம் என்றும் கூறுகின்றனர்.

00

கடற்கோழி(penguin) மீதான அளவு கடந்த பேரச்சம் கடற்கோழி வெருளி.

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி நீர் வாழ் பறக்காத பறவையான இதனை ஒயில் நடைப்பறவை; எனவே ஒயிலி எனக் குறிக்கிறது.

00

கடித்தல் பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் கடி வெருளி.

dakno என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் கடித்தல். 

00

கடனட்டை (credit card) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கடனட்டை வெருளி.

கடன் அட்டையைப் பயன்படுத்தும பொழுது மகிழ்ச்சியாகவும் பயனுள்ளதாகவும் இருந்தாலும் தவணை தப்புவதாலும் வட்டி ஏறுவதாலும் வங்கியினர் அடியாள்கள் வைத்து மிரட்டுவதுபோல் கடுமையாக நடந்துகொள்வதாலும் கடன் அட்டைகள் மீது பேரச்சம் கொள்கின்றனர்.நுழைவுக்கட்டணம் இல்லை எனக் கூறிக் கடன் அட்டை வழங்கிவிட்டு, நிறுவத்தினர் சொல்லாமலே அத்தொகையைச் சேமிப்புப் பணத்தில் பிடித்து விடுகின்றனர் போன்ற  நாம் அறியாமலே பிடிக்கப்படும் பணம் குறித்தும் அஞ்சுகின்றனர்.

00

(தொடரும்)

Tuesday, October 28, 2025

வெருளி நோய்கள் 599-603: இலக்குவனார் திருவள்ளுவன்

      29 October 2025      கரமுதல



(வெருளி நோய்கள் 594-598)

வெருளி நோய்கள் 599-603

கடல்கோள்(Tsunami) பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் கடல்கோள் வெருளி.

நிலநடுக்கங்கள், நிலச்சரிவுகள், எரிமலை வெடிப்புகள், பனிப்பாறைகள், விண் பொருள்கள் மோதல் முதலான காரணங்களால் பெருமளவு நீர் இடப்பெயர்ச்சி ஏற்படுவதே கடல்கோளாகும்.

சுனாமி என்றே இதனைக் குறிப்பிடுகின்றனர். இது சப்பானியச் சொல். ‘சு’ என்றால் துறைமுகம். ‘நாமி’ என்றால் அலை, எனவே சுனாமி என்றால் துறைமுக அலை எனப் பொருள். தமிழில் இப்பொழுது இதை ஆழிப்பேரலை என்கின்றனர். ஆனால், இஃது அலையல்ல. கடலில் பேரலைகள் எழும்புவது இயற்கை. இதனால் கடலில் சென்று கொண்டிருக்கும் படகுகள், கப்பல்கள் போன்றவற்றிற்கு இடர்கள் நேரலாம். ஆனால் இத்தகைய பேரலை அல்ல இது. பழந்தமிழில் இதனைக் கடல் கோள் என்றனர். கடல் நீர் கரையைக்கடந்து நிலத்திற்குள் புகுந்து நிலப்பகுதியைக் கவர்ந்து கொள்ளும் வன்செயல் இது. இதனால் நிலப்பகுதியில் உள்ள உயிரினங்களுக்கும் கட்டடம் முதலான பகுதிகளுக்கும் பேரழிவுகள் ஏற்படுகின்றன .எனவே, கடல் கோள் என்னும் காரணப்பெயர் பொருத்தமாக உள்ளது.

பழந்தமிழ்நாட்டில் இரு பெரும்கடல் கோள்களால் தமிழகத்தின் தென்பகுதி பேரழிவிற்கு ஆளானது. தமிழகத் தொன்மை வரலாற்றைத தாங்கிக் கொள்ள மனமில்லாதவர்கள், இதனைக் கற்பனை என்றனர். ஆனால், திசம்பர் 26, 2004 இல் பேரழிவுகளை உண்டாக்கிய கடல்கோள் வந்தபொழுதுதான் அவற்றை உண்மை என்றனர்.

00

கடல் நீரில் வாழும் பேருயிரிகள் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கடல் பேருயிரி வெருளி.

கடல் பயணத்தின் பொழுது கடல்வாழ் பேருயிரிகள் மீது அளவுகடந்த பேரச்சம் கொள்வோர் உள்ளனர். அவை கப்பலை அல்லது படகைக் கவிழ்த்து விடுமோ, தாக்கி அழித்து விடுமோ என்ற பேரச்சங்கள் வரும்.  ஆனால், கடல் பயணம் மேற்கொள்ளாத பொழுதே இவற்றைப் படங்களில் அல்லது திரைப்படங்களில் அல்லது தொலைக்காட்சிப் படங்களில் பார்த்து அல்லது இவை பற்றிப் படித்து அளவுகடந்த பேரச்சம் கொள்வோரும் உள்ளனர்.

00

கடலோடிகளுக்குக் கப்பல் பயணத்தில் கடல்நீர்மீது ஏற்படும்அளவு கடந்த பேரச்சம் கடல் வெருளி.

கப்பல் அல்லது படகு கவிழும், கடலில் மூழ்க நேரிடும், காற்றலையால் திசைமாறி வேறிடம் செல்ல நேரிடும், திக்கு தெரியாமல் தவிக்க நேரிடும் என்பன போன்ற பேரச்சம் கொள்வர்.

கடலலையில் காலை நனைக்க வேண்டும் என்பதில் பெரும்பான்மையருக்குப் பேரார்வம் இருக்கும்.

“கடலலை கால்களை முத்தமிடும் புதுக் கலை”

எனப் ‘பொம்பள மனசு‘ (1980) என்ற வெளிவராத திரைப்படத்தில் பாடல் வரிகள் வரும்.

இருப்பினும் கடலலை கண்டு அஞ்சுவோர் உள்ளனர். கடலில் குளிக்கச் சென்று உயிரிழந்தவர்கள் பற்றிய செய்திகளை அறிந்து இத்தகையோர் கடல்கண்டு அஞ்சுவர்.

கப்பல் மீகாமர்கள், கப்பல் பயணிகள் ஆகியோருக்கு மட்டுமல்லாமல், கடலில் மீன்பிடிக்கச் செல்வோருக்கும் கடல் வெருளி வரும். இவர்களுக்குக் கடல் வெருளி வந்தால், மீன்பிடி தொழில் பாதிப்புறும். பல்வகையான நாவாய்கள், கப்பல்களைச் செலுத்திப் பழந்தமிழர்கள் கடலில் ஆட்சி செய்தனர். அண்மைக்காலத்தில் ஈழத்தில் விடுதலைப்புலிகள் கடலைத் தங்கள் கட்டுக்குக் கொண்டு வந்தவர்கள்போல் கடலாட்சியில் சிறந்து விளங்கினர். இவற்றை எல்லாம் எண்ணிக்கடல் மீதான அச்சத்தை ஓட்ட வேண்டும்.

00

கிரேக்கர்களின் தொன்மங்களின் படி, வானவர் வேந்தன்(Zeus) என்பவர்தான் கடவுள்களின் அரசர். அவர்தான் இடி மின்னல் முதலானவற்றைக் கட்டுப்படுத்துகிறார்.

மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள் 

 கொடியோர்த் தெறூஉ மென்ப

(கபிலர், குறுந்தொகை 67.1-2)

பொதுவிடத்திலுள்ள மரத்தில் தங்கியுள்ள பிறர்க்கு அச்சம் செய்தல் முதிர்ந்த தெய்வம், கொடியவரைத் துன்புறுத்தும் என்பது மக்கள் நம்பிக்கை. எனவே, பழி பாவத்திற்கு அஞ்சுபவர்களும் சிறு பிழைகளையும் பெரும்குற்றமாகக் கருதுபவர்களும் கடவுள் மீது பேரச்சம் கொண்டு மன உளைச்சல் கொள்கின்றனர். எனினும் நல்லன ஆற்றுநரும் “இறையே துணை” என நம்புகிறவர்களும் கடவுளுக்கு அஞ்சமாட்டார்.

சமய வெருளி(Theophobia)-ஐ ஒத்ததே இது.

Zeus என்னும் கிரேக்கச் சொல்லுக்குப் பொருள் கடவுள்களின் அரசர்.

00

கடற்கரைபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் கடற்கரை வெருளி.

கடலோர நிலப்பகுதிதான் கடற்கரை. கடற்கரை மணல் மீது பேரச்சம் கொள்வோரை விடக்கடல் மீது பேரச்சம் கொள்வோரை உள்ளனர். கடலில் குளிக்கச்சென்று இறந்தவர்கள்பற்றியும் கடல் நீரில் கால் நனைக்கச் சென்று அலைகளால் இழுக்கப்பட்டு இறந்தவர்கள்பற்றியும் அறிந்தவர்களுக்குக் கடற்கரை என்றாலே அளவுகடந்த தேவையற்ற பேரச்சம் வருகிறது. தமிழ்நாட்டில் வடசென்னைக்கடற்கரை பேரிடர் நிறைந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதுபோல் ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு கடற்கரைப் பகுதி பேரிடர் நிறைந்ததாக இருக்கும்.   இவற்றைக் கேள்விப்படும் அந்தந்த நாட்டினர் விழிப்புடன் இருப்பதில் கவனம் செலுத்துவதற்கு மாற்றாகத் தேவையற்ற வரம்பற்ற பேரச்சம் கொள்கின்றனர்.

00

(தொடரும்)

Monday, October 27, 2025

வெருளி நோய்கள் 594-598: இலக்குவனார் திருவள்ளுவன்

      28 October 2025      கரமுதல



(வெருளி நோய்கள் 589-593: தொடர்ச்சி)

கடமான் (moose) பற்றிய பேரச்சம் கடமான் வெருளி.

அல்செசு(Alces) என்பது காட்டுமானின் அறிவியல் பெயராகும். ஐரோப்பாவில் இலத்தீன் மூலச் சொல்லான எல்கு(elk) என அழைக்கப்பெறுகிறது. எல்கு என்பது அல்கி என மருவியிருக்கிறது.

00

கடமை ஆற்றாமல் அஞ்சி விலக்கி வைத்துக் கடமை தவறுவது, கடமை (வெருளி.

தனக்குரிய கடமையை ஆற்ற முடியாது என்று சோர்ந்து இருப்பதும் மிகுதியாக உள்ளது எப்படிச் செயலாற்ற முடியும் என்று கலங்கி நிற்பதும் தன்னம்பிக்கையின்றி அக்கடமையை விலக்கி வைப்பதும் பொறுப்பைத் தவறவிடுவது அல்லது தவற விட நேரிடுவது குறித்துக் கலைப்படுவதும் சிலரின் பழக்கம்.

“மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்” என்னும் ‘தெய்வத்தாய்’ திரைப்படத்தில் வரும் வாலியின் பாடலில்

வாழை மலர் போல பூமி முகம் பார்க்கும்

கோழை குணம் மாற்று தோழா

நாளை உயிர் போகும் இன்று போனாலும்

கொள்கை நிறைவேற்று தோழா

…………    ……………..     …………

கடமை அது கடமை

கடமை அது கடமை

என வரும். இவ்வாறு கடமை உணர்வு உள்ளவர்களும் உள்ளனர். மாறாகக் கடமை தவறுவோரும் உள்ளனர்.

பொறுப்புவெருளி(Hypegiaphobia/Hypengyophobia)யும் இத்தகையதே!

00

கடல் உயிரிகளைப் பற்றிய காரணமற்ற அளவுகடந்த பேரச்சம் கடலுயிரி வெருளி.

கிரேக்கத்தில் thalassa என்பது கடலைக் குறிக்கும் சொல். இங்கே கடல்வாழ் உயிரிகளையும் குறிக்கிறது.

          00     

கடல் நண்டு மீதான அளவுகடந்த பேரச்சம் கடல் நண்டு வெருளி.

இயல்பான நண்டுகள்மீது அச்சம் கொள்ளாதவர்களுக்கும் கடல் நண்டுகள் மீது பேரச்சம் வருவதுண்டு. 

காண்க: நண்டு வெருளி(Kavouriphobia/Kabourophobia)

00

கடல் வானூர்தி(seaplane) மீதான அளவு கடந்த பேரச்சம் கடல் வானூர்தி வெருளி.

கடல் பயணங்கள் குறித்தும் வான் பயணங்கள் குறித்தும் பேரச்சம் உள்ளவர்களுக்குக் கடல் வானூர்திமீதும் பேரச்சம் வருகிறது. வானூர்தி நேர்ச்சி நேர்ந்தால் மண்ணில் விழுந்து பிழைக்க வாய்ப்புள்ளது. கடலில் விழுந்தால் பிழைக்க வாய்ப்பில்லையே எனக் கவலைப்பட்டு அச்சம் கொள்வோரும் உள்ளனர். நம்பிக்கையுடனும்மகிழ்ச்சியுடனும் பயணம் மேற்கொண்டால் பேரச்சத்திற்கு வாய்ப்பில்லை.

00

(தொடரும்)

Sunday, October 26, 2025

வெருளி நோய்கள் 589-593: இலக்குவனார் திருவள்ளுவன்

 




(வெருளி நோய்கள் 584-588: தொடர்ச்சி)

ஓவியம் குறித்த வரம்பற்ற பேரச்சம் ஓவிய வெருளி.
சிலர் எந்தவகை ஓவியமாக இருந்தாலும் பேரச்சம் கொள்வர்.சிலர், வரலாற்று ஓவியம், காதல் ஓவியம், சுற்றுலா இட ஓவியம், மக்கள் ஓவியம், விலங்கினங்கள் ஓவியம், பறவைகள் ஓவியம், தொன்மக்கதை ஓவியம், அச்சுறுத்தும் உருவ ஓவியம் எனக் குறிப்பிட்ட சிலவகை ஓவியங்கள் மீது மட்டும் பேரச்சம் கொள்பவர்களாக இருப்பர்.
00
   கசப்புச் சுவை குறித்த வரம்பற்ற பேரச்சம் கசப்பு வெருளி.
நரம்புகளை வலுப்படுத்துவபதாகவும் நோய் எதிர்ப்பு ஆற்றல் உடையதாகவும் கசப்புச் சுவை உள்ளது. இதை அறிந்திருந்தும் கசப்புச் சுவையுடைய உணவுப் பொருள்கள் மீது வெறுப்பும் பேரச்சமும் கொள்வோரே மிகுதி.
00
கடத்தல் பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் கடத்தல் வெருளி.
பொதுவாகக் குடும்ப உறுப்பினர்கள் அல்லது அறிந்தவர்களால் கடத்தப்படுவதே மிகுதி. இதனால், பணத்திற்காக அல்லது காதலினால் அல்லது காமத்தினால் கடத்தப்படுவோம், கடத்தப்பட்டால் உயிர் பறிக்கப்படும் அல்லது உடலுறுப்புகள் வெட்டப்படும் அல்லது கண்கள் பறிக்கப்படும்அல்லது ஒழுக்கம் சிதைக்கப்படும்  என்று கடத்தப்படாத பொழுதுே தேவையற்றுப் பேரச்சம் கொள்வோர் உள்ளனர். இருட்டில் செல்லவே இவர்கள அஞ்சுவர். குழந்தைகள் வீட்டைவிட்டு ஓடிப்போதல், வழி தவறுதல் போன்றவற்றால் காணாமல் போனாலும் கடத்தப்பட்டதாக எண்ணிக் குடும்பத்தினர் அஞ்சுவர்.
00
 592. கடந்தகால வெருளி – Paleophobia/Nostophobia(1)
கடந்த காலம் குறித்த அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் கடந்தகால வெருளி.
கடந்தகாலத் துன்பங்கள் மீண்டும் வருமோ என்று பேரச்சம் கொள்கின்றனர்.
வீட்டுத் துன்பங்களை எண்ணிப் படைக்குப் பணியாற்ற செல்பவர்கள், மீண்டும் வீடு திரும்பும் பொழுது கடந்தகால எண்ணங்களால் பேரச்சம் கொள்வதால் இது வீடு திரும்பல் வெருளி அல்லது இல்ல வெருளி [Nostophobia (2)] என்றும் அழைக்கப்டுகிறது
palaios என்னும் கிரேக்கச் சொல்லிற்கு பழைய எனப் பொருள்.
00
சாலை கடக்குமிடம்/குறுக்கு நடைபாதை(crosswalk) குறித்த வரம்பற்ற பேரச்சம் கடப்பு வெருளி.
சாலை நேர்ச்சிகள்/விபத்துகள், ஊர்திகள் மோதல், போன்றவற்றால் சாலையைக் கடக்கவே பலர் அஞ்சுவர். சாலைவிதிகளைப் பின்பற்றி விழிப்புடன் சாலையைக் கடக்காமல் தேவையற்ற அச்சத்திலேயே உழல்வர். இவ்வாறு சாலையைக் கடப்பதில் காரணமின்றி அச்சம் ஏற்படுவதே கடப்பு வெருளி.
சாலையைக் கடக்க விளக்கு ஒளி மாறும் வரை காத்திருந்து அவ்வாறு கடப்பதற்கான ஒளிவிளக்கு வந்த பின்னரும் யாருமில்லாவிட்டால் கடப்பதற்கு அஞ்சுவர். உடன் யாரும் இருந்தால் அவர்களுடன் மட்டுமே கடந்து செல்வர்.
பார்வையற்றவர்கள்  பழகிய நாய் மூலம் சாலையைக் கடக்கின்றனர். இப்பொழுது எந்திரன் மூலமும் சாலையைக் கடக்கின்றனர். ஆனால் எல்லாருக்கும் இவ்வாறு பயன்படுத்தும் வசதி இருக்காது அல்லவா? எனவே தேவையற்ற அச்சம் கொள்ளாமல் தேவையான விழிப்புணர்வு கொண்டு சாலையைக் கடக்கப் பழக வேண்டும்.
கடக்குமிடம் தொடர்பான கடக்குமிட வெருளியும் சாலையைக் கடப்பது குறித்த பேரச்சமான கடப்பு வெருளியும் ஒரே பொருள் தன்மைத்து என்பதால் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது.
dromos என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் ஓடுதடம்.
‘gyrus’  என்பது சாலைகள் சந்திக்கும் திருப்பத்தைக் குறிக்கிறது. A என்பது எதிர்ச்சொல்லாக்கப்பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே Agyrophobia சாலை திருப்பத்தைக் கடக்க இயலாமல் அஞ்சுவதைக் குறிக்கிறது. அஃதாவது Agyiophobia என்றால் அகன்ற சாலையைக் கடப்பதற்கான வெருளி என்று பொருள். அடிப்படையில் ஒன்று என்பதால் இணைத்தே பார்க்கலாம்.
00 

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

வெருளி அறிவியல் 2/5