Tuesday, August 28, 2012

உயிர்மி (உயிரணு) cell

உயிர்மி (உயிரணு)

Cell (Biology)


- இலக்குவனார் திருவள்ளுவன்

ஆகத்து 28, 2012 12:44 இந்தியத் திட்ட நேரம்

நம் உடலில் அமைந்துள்ள கோடிக்கணக்கான நுண்ணறை ஒவ்வொன்றும் உயிர்மி எனப்படும். ஒரே வகையான செயல்திறன் கொண்ட உயிர்மிகளின் இணைப்பானது மெய்ம்மி(திசு) எனப்படும். பலவகைத் மெய்ம்மிகள் வேறுபட்ட விகிதங்களில் இணைந்து உருவாவது உறுப்பு. உறுப்புகள் சேர்ந்து அமைந்தது உடல்.

செங்கற்களை அடிப்படையாகக் கொண்டு கட்டடம் எழுப்பப்படுகிறது; அதே போல் உயிர்மியை அடிப்படையாகக் கொண்டு உடல் கட்டுமானம் அமைந்துள்ளது. குருதி உயிர்மி, நரம்புஉயிர்மி,தசைஇழை உயிர்மி என 200 வகைப்பட்ட உயிர்மிகள் உள்ளன. இவை வடிவிலும் அளவிலும் மாறுபட்டன; என்ற போதும் திறன் மிகுந்த நுண்ணோக்கியால் மட்டுமே பார்க்கத் தக்கன. 10,000கோடிக்கு மேற்பட்ட உயிர்மிகள் உடலில் உள்ளன.

நுண்ணறை, உயிரணு, ‘செல்’ என்றெல்லாம் பலரால் அழைக்கப்படுவதும் இதுவே. ஆனால் இச் சொற்களுக்கு வேறு பொருள்களும் உள்ளமையால் உயிர்ப்பிற்கு அடிப்படையான இதனை உயிர்மி என்பது சாலப் பொருத்தமாக அமையும். எனவே வெள்ளணு, சிவப்பணு என்பனவற்றை நாம் வெள்ளுயிர்மி, செவ்வுயிர்மி என்று சொல்லலாம்.

பழந்தமிழில் செந்து என உயிரணு எனப்படும் உயிர்மியைக் குறித்துள்ளனர். இதனைப் பிங்கல நிகண்டு(பா 3561 ) மூலம்அறியலாம். ஆனால், இச்சொல் வழக்கொழிந்து விட்டது. இச்சொல்லை மீண்டும் பயன்படுத்தலாம்

உயிர்மியை இணைக்கும் இடைப்பட்ட உயிரற்ற பொருள் உயிர்ம இடைமை எனப்பெறும்.

உயிர்ம பிணைப்புப் பொருளின் நிலை:

1. பாகு,
2. நார்,
3. நீர்மம்,
4. மாவு,
5. பசைமம்

உயிர்மி பற்றி அறிய வேண்டிய அடிப்படைத் தகவல்கள் வருமாறு

1. நமது உடல் கோடிக்கணக்கான உயிர்மிகளால் (அணுக்களால்) உருவானது.

2. உயிர்மியின் நடுவில் உட்கருவும் அதனைச்சுற்றி ஊன்மமும் உள்ளன.

3. உயிர்மி மெல்லிய சவ்வினால் மூடப்பட்டிருக்கும்.

4. குருதத்தில் உள்ள உயிர்மிகள், செவ்வுயிர்மி (செவ்வணு), வௌ்ளுயிர்மி (வௌ்ளணு) ஆகியன.

5. உயிர்வளியைக் கொண்டு செல்லவும் கரி வளியை வெளியேற்றவும் உதவுவது செவ்வுயிர்மி.



நன்றி :  புதிய  அறிவியல் http://www.newscience.in/articles/article-17

No comments:

Post a Comment