Thursday, September 20, 2012

பழமொழிகளும் தொடர்பான அறிவியல் சிந்தனைகளும்

பழமொழிகளும் தொடர்பான அறிவியல் சிந்தனைகளும்
இலக்குவனார் திருவள்ளுவன்
 
அத்தி

  1. அத்தி மரத்தில் தொத்திய கனிபோல்
  2. அத்திக்காயைப் புட்டுப்பார்த்தால் அங்கும் இங்கும் பொள்ளல்
  3. அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு
  4. அத்திப்பழத்தைப் பிட்டால் அத்தனையும் சொத்தை
  5. அத்திப்பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அதற்குள்ளும் விதை இருக்கும்.
  6. அத்திப்பூ  பூத்தாற்போல்
  7. அத்திப்பூவை ஆர் அறிவார்?
  8. அத்திப்பூவைக் கண்டவர் உண்டா?
  9. அத்திப்போல் துளிர்த்து .. .. வாழ்ந்திருப்பர்.
 இப்பழமொழிகள் அத்தி பற்றிய அறிவியல் உண்மைகளை நம்முன்னைத் தமிழ்மக்கள் நன்கு அறிந்திருந்தனர் என்பதை உணர்த்துகிறது. அத்தி பற்றிய பொதுவான செய்திகளை நாம் தெரிந்து கொள்வோம்.

 பயிரினங்கள் பூத்துக் காய்த்துக் கனிவதே வழக்கம் என்றாலும் பூக்காமல் காய்க்கும் மரங்களும் உள்ளன. இவற்றைக் கோளி என்பர் பழந்தமிழர்.

கொழு மென் சினைய கோளியுள்ளும்
பழம் மீக் கூறும் பலாஅப் போல     (பெரும்பாணாற்றுப்படை : 407-408)
கோடு பல முரஞ்சிய கோளி ஆலத்து                   (மலைபடுகடாம் : 268)
முழுமுதல் தொலைத்த கோளி ஆலத்து                      (புறநானூறு : 58.2)
முன்ஊர்ப் பழுனிய கோளி ஆலத்து  (புறநானூறு : 254.7)

இவ்வாறு, பூவிலி வகைத் தாவரங்களை, ஈராயிரம் ஆண்டுகளுக்கு  முன்பே சங்கப்புலவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மாதரி கண்ணகிக்குச் சமைக்க   வழங்கிய பொருள்களைக் குறிப்பிடும் பொழுது,

கோளிப் பாகல் கொழுங் கனித் திரள் காய், (சிலப்பதிகாரம்:16.22)

என்கின்றார் தமிழ்த்தேசியப் புலவர் இளங்கோஅடிகள்

 தேவாரப்பாடல் எண் 78 இல் எவ்விடங்களிலும் மரங்கள் நிறைந்திருப்பதாக அவற்றின் பெயர்களை அடுக்கிக் கூறும் பொழுது கோளி என்று பலா குறிப்பிடப்படுகின்றது.
   பொதுவாக அரசு, அத்தி, ஆல், பலா ஆகியவற்றைப் பூக்காமல் காய்க்கும் மரங்கள் என்கின்றனர்.

பூவாது காய்க்கு மரமுள நன்றறிவார்
மூவாது மூத்தவர் நூல்வல்லார்

என்னும் சிறுபஞ்ச மூலம் (22) அடியில் பூவாது காய்க்கும்  மரம், ஆண்டால்  மூப்பு அடையாமல் அறிவால் மூப்பு அடைவோரைக் குறிக்கப் பயன்படுகின்றது. பூவாது காய்க்கும் மரங்கள் அத்தி, ஆல், பலா, அரசு முதலியன  என அறிஞர்கள் விளக்கி உள்ளனர்.
 மேலே கூறிய சிலப்பதிகார அடிகளை விளக்கும் பொழுது,

சொல்லாம லேபெரியர் சொல்லிச் செய்வார் சிறியர்
சொல்லியுஞ் செய்யார் கயவரே  

என்னும் பாடலடிகளை எடுத்துக்காட்டிப் பூவாமல் காய்ப்பது எனப் பலாவகையைக் குறிப்பிடுகின்றார் அடியார்க்கு நல்லார்.

பூவாதே காய்க்கும் மரமுள மக்களுளும்
ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே

என ஔவையார் நல்வழியில்(35), பிறர் சொல்லாமல் தாமே பணி செய்வாரைக் குறிப்பிடுகையில் பூவாமல் காய்க்கும் மரத்தை எடுத்துக்காட்டாகக் கூறுகின்றார். இதற்கு விளக்கம் தருவோர் அத்தி, ஆல், பலா, அரசு போன்ற பூவாமல் காய்க்கும்  மரங்கள் என்கின்றனர்.
இவற்றுள் அத்தி யைச் சங்கப் பாடல்களில் அதவம் என்றே குறிப்பிட்டுள்ளனர்.

அதலத் தீங்கனி அன்ன செம்முகத்
துய்த்தலை மந்தி வன்பறழ் தூங்க
என்கின்றது நற்றிணை(95:3-4)

குரங்குக்குட்டியின் முகம் இனிய அத்திப்பழம் போன்று சிவந்த நிறம் எனக் கூறுவதன் மூலம் அத்திப்பழம் நிறம் சிவப்பு என இப்பாடலடி விளக்குகிறது.

ஆற்றயல் எழுந்த வெண்கோட்டு அதவத்து

என்னும் குறுந்தொகை(24.3) பாடலடி மூலம் அதவமாகிய அத்தி ஆற்றங்கரையோரம் முளைத்து வளரும், அதன் கிளைகள் வெண்மையான நிறம் கொண்டவை  என்னும் அறிவியல் செய்திகள் கூறப்படுகின்றன.

 பூக்காத்தாவரம் கிரைப்டோகம் (cryptogam) என ஆங்கிலத்தில் சொல்லப்படுகிறது. கிரேக்க மொழியில் இதன்பொருள் மறைக்கப்பட்ட விதை என்பதாகும். இதன் மூலம் விதை உற்பத்தியாகா என்கின்றது இக்கலைச்சொல். கார்ல் இலினௌசு (Carl Linnaeus: 1707–1778) என்னும் அறிஞர் தாவரக் குடும்பங்களை 25 வகையாகப் பகுத்து இவ்வகையையும் அதில் சேர்த்துள்ளார். 18 ஆம் நூற்றாண்டில் கண்டு உணரப்பட்ட பூவிலிக் குடும்பம் பற்றி ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னைத் தமிழ் மக்கள் அறிந்துள்ளனர்.
 அத்தியில் பல வகை உண்டு. அவை வருமாறு(செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி: முதன் மடலம்: முதற்பகுதி: பக்.196-197):-

  1. கல்லத்தி (stone fig- Ficus scandens)
  2. காட்டத்தி (jungle fig- Ficus hispida)
  3. குருகத்தி (glossy long leaved fig- Ficus tjakela)
  4. கொடியத்தி (creeper fig- Ficus repens)
  5. சிற்றத்தி (small fig – Ficus polycarpa)
  6. சீமையத்தி அல்லது தேனத்தி (foreign fig- Ficus carica)
  7. செவ்வத்தி (red fig- Ficus heterophylla)
  8. நாட்டத்தி (country fig- Ficus glometra alias Ficus racemosa)
  9. நாயத்தி
  10. நீரத்தி (yellow fig-Ficus callosa)
  11. பேயத்தி (devil fig-Ficus oppositifolia)
  12. பேரத்தி (tall fig-Ficus excelsa)
  13. மரந்தின்னியத்தி ((sandpaper fig-Ficus asperrima)
  14. மலையத்தி (mountain fig- Ficus macrocarpa)
  15. விழலத்தி அல்லது ஊழலத்தி
 இவை போல் வெள்ளை அத்தி, பசலத்தி, நல்ல அத்தி, வயமம் முதலானவைகளும் உள்ளன. அத்திக்கு ஆழரம் என்றும் உதும்பரம் என்றும்  வேறு பெயர்கள் உள்ளன. வங்காளத்திலும் இந்தியிலும்  உதும்பரா என்றும் மராத்தியில் உதும்பர் என்றும் குசராத்தியில் உம்பரா என்றும்  சமசுகிருதத்தில் ஔதும்பரா என்றும் மலையாளம், தெலுங்கு, கன்னடத்தில் அத்தி என்றும் சிங்களத்தில் அத்தி அல்லது அட்டி என்றும் அழைக்கப்படுவதால் அத்தியின் பரவலான விளைச்சலையும் தமிழ்ப்பயன்பாட்டின் சிறப்பையும் நன்கு புரிந்து  கொள்ளலாம்.

 அத்தியின் மரப்பட்டை சிவப்பு அல்லது சாம்பல் நிறத்திலும் காய்கள் நீள்முட்டை வடிவில் அடிமரம், கிளைகள், தண்டுகள் என எல்லா இடங்களிலும் கொத்து கொத்தாகக் காய்க்கும். அத்துதல் என்றால் ஒட்டுதல் என்று பொருள். கிளைகளை ஒட்டிக் காய்ப்பதால் அத்தி என்று பெயர் வந்தது என்பர்.  

அத்திப்பழம் மட்டுமல்லாமல் அத்தியின் இலை, பட்டை, பால் முதலான அனைத்துமே மருந்தாகப் பயன்படுவன. அத்திப்பழத்தை நாள்தோறும் உண்டால் சீரான குருதி ஓட்டம் ஏற்படும். எனவே, குருதி அழுத்த மாறுபாடு உள்ளவர்களுக்குப் பெரும் பயன் அளிக்கும். நீரிழிவு(சருக்கரை) நோய், மூலநோய் ஆகியவற்றைக் குணப்படுத்த அத்தி மரவேரில் இருந்து எடுக்கப்படும் அத்திக்கள் மருந்தாகப் பயன்படும். அத்திக்கள்ளிற்கு அத்திப் பதநீர் என்றும் பெயர்.

அத்தி மரத்தடியில் குத்தி எடுக்கும் அத்திப்பாலும் மருத்துவப் பயன்கள் உடையது. சிலப்பதிகார (6:7)உரையில் ஆல், அரசு, அத்தி, இத்தி,  ஆகிய நால்வகை மரங்களில் பால் மிகுதியாக உள்ளமையால் இவை நாற்பால் மரங்கள் எனச் சொல்லப்படுவதைத் தெரிவிப்பதால் அத்திப்பாலின் சிறப்பை அறியலாம். இவை போன்ற மிகுதியான மருத்துவப்பயன்களைத் தமிழ் மருத்துவ இலக்கியங்கள் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்; தமிழ் மருத்துவர்கள் மூலம் தேவைக்கேற்பப் பயன்படுத்தி நல்வாழ்வு வாழலாம்.

 பூவிலி என்பது பூச்சூனியம் என்றும் அழைக்கப்பெற்றுப் பின்னர் புட்பசூனியமாக மாறி உள்ளது. புட்ப சூனியம் என்பதற்கு  அத்தி, ஆல் முதலிய மலரில்லா மரவகை என அகராதிகள் விளக்குகின்றன. பூவாமல் காய்க்கும் வகையைச் சேர்ந்த அத்தியைப்பற்றிக் குறிப்பிடுகையில், அத்திப்பூ பூத்தாற்போல் என்றும் அத்திப்பூவை யாரறிவார் என்றும் அத்திப்பூவைக் கண்டவர் உண்டா  என்றும் கூறுவதேன்?

  பூவாத் தாவரங்களாகிய கோளிகளை விளக்கும் அறிவியலறிஞர்கள் இவை பூக்கும் தன்மை யில்லாத பூக்களை உடையன; அத்திப்பூவும் அத்தன்மையதே என்கின்றனர். அத்திப்பூ எப்பொழுதாவதுதான் பூக்கும்  என்பதை  உணர்த்தவே எப்பொழுதோ காணப்படும் ஒன்றை அல்லது செய்யப்படும் ஒன்றை விளக்குகையில்  அத்திப்பூ பூத்தாற் போல் என்று கூறுவதாகக் கருதுகின்றனர். கொத்து கொத்தாக அத்திக்காய்கள் தொங்குகையில் எப்பொழுதோ பூக்கும் பூவை அறியும் வாய்ப்பு குறைவு என்பதால்  அத்திப்பூவை யாரறிவார் என்று சொல்கின்றனரோ என்றும் எண்ணத் தோன்றும். உண்மையில் இதில்  அறிவியல் உண்மை உள்ளது. பூக்கள் நுண்மையானவையாகவும் எண்ணிறந்தவையாகவும் மஞ்சரிக்குடத்தின் உட்பக்கத்தில் ஒட்டிக் கொண்டு வளரும். எனவே, வெளியே பார்வைக்குத் தெரியாது. இவ்வாறு, அத்திப்பிஞ்சிற்குள் கொத்துக் கொத்தாக அத்திப் பூ இருப்பதால் காய்களுக்குள் இருக்கும் பூவை யாரும் அறிய முடியாது என்ற பொருளில் வந்ததே இப்பழமொழிகள்.

 அத்திப்பூக்களில் ஆண்பூ, பெண்பூ, மலட்டுப்பூ(Gall flower), அலிப்பூ(Neutral sterile or Mule flower) என நால்வகை உண்டு. பழுத்த அத்தி பச்சை,சிவப்பு, கறுப்பு, பழுப்பு,மஞ்சள் எனப் பல நிறத்தை உடையது. அத்திமரப் பூக்களில் வளரும் சிறு குளவியே அத்திப்பூச்சி எனப்படுகிறது. இப்பூச்சியின் வாயிலாகவே அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது.
 அத்திப்பழம் நறுமணமாக இருக்குமே தவிர, அத்திக்காய்க்குள் பூக்கள் அமைவன போல் அதற்குள் மெல்லிய பூச்சிகள், புழுக்கள் இருக்கும். எனவேதான் அத்திப்பழத்தைப் பிட்டுப் பார்த்தால் அத்தனையும் சொத்தை அல்லது புழு;  அத்திக்காயைப் புட்டுப்பார்த்தால் அங்கும் இங்கும் பொள்ளல் என்னும் பழமொழிகள் வந்தன. இப்பழ மொழிகள் அத்திப்பழத்தின் தன்மையை விளக்குகின்றன.

பெண்பூவிலிருந்து சதைப்பற்றுள்ள  சிறு கனி உருவாகும். அதனையே விதை என்பர். அத்திப்பழம் சொத்தையாக இருந்தாலும் விதை இருக்கும் என்பதை அத்திப்பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அதற்குள்ளும் விதை இருக்கும் என்னும் பழமொழி விளக்குகிறது.

 அத்திப்போல் துளிர்த்து .. .. வாழுமாறு வாழ்த்தும் பழமொழி அத்தி செழுமையாகத் துளிர்ப்பதை விளக்குகிறது.

பழமொழிகள் வாயிலாக அறிவியல் உண்மைகளை உணர்த்துவதால் இவை இயல்பாக அனைவரும் அறிந்த அறிவியல் செய்திகளாக இருந்துள்ளன எனலாம்.

அனைவரின் உள்ளங்களிலும் அறிவியில் தமிழ் உணர்வு அத்திபோல் துளிர்க்கட்டும்!
அறிவியல் தமிழ் செழிக்கட்டும்!


No comments:

Post a Comment